பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, September 15, 2016

சித்தன்ன வாசல்

                              
  'உலகப் புகழ் பெற்ற குகை ஓவியங்களை உள்ளடக்கியது சித்தனவாசல்''
தற்போதைய புதுக்கோட்டை பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. நூறாண்டுகளுக்கு முன் இந்த மாவட்டம் சோழ, பல்லவ, ஹொய்சாள மன்னர்களால் ஆளப்பட்டது. 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் கீழ் இருந்த போது விஜய நகர மன்னர்கள் முஸ்லிம் மன்னர்களுடன் பல போர்களை புரிந்துள்ளனர். 1565ம் ஆண்டு தளிகோட்டாவில் நடந்த போரில் விஜயநகர மன்னர் தோற்றதால் பேரரசு நலிவடைந்தது. விஜயநகர பேரரசின் மாகாண பொறுப்பாளர்களாக இருந்த நாயக்கர்கள் இப்பகுதியை ஆண்டனர். 16 முதல் 17ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் நாயக்கர்கள் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர்.


புதுக்கோட்டை என்ற பகுதியை ஏற்படுத்தியவர் ரகுநாதராய தொண்டைமான் ஆவார். இவர் திருமயம் என்ற பகுதியின் பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் ராமநாதபுர மகாராஜா ரகுநாத கிழவன் சேதுபதியின் மைத்துனர் ஆவார். தொண்டைமானின் சிறப்பான செயல்கள் காரணமாக சேதுபதி புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அளித்தார். பின்னர் இந்த பகுதியை தொண்டைமான் மன்னர்கள் ராமநாதபுர அரசை சார்ந்தே இருந்து வந்தனர். 1763ம் ஆண்டு புதுக்கோட்டை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1948ம் ஆண்டு வரை தொண்டைமான் மன்னர்கள் புதுக்கோட்டையை ஆண்டு வந்தனர். இந்த மாவட்டம் திருச்சியின் ஒரு பகுதியாகவே செயல்பட்டு வந்தது. 1974ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி புதுக்கோட்டை திருச்சி, தஞ்சையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னல்வாயிலுக்கு (அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னல்வாயிலானது மறுவி சித்தன்னவாசல் எனத் தற்போது அழைக்கப்படுகிறது. இங்கு காணப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், கிமு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, உலகப் புகழ் வாய்ந்த ஓவியங்களுடன் விளங்கும் குகைக் கோயில் இந்தச் சிறிய கிராமத்தின் தொன்மைச் சிறப்பை உலகுக்கு உணர்த்துகிறது. இங்குள்ள குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமண முனிவர்கள் தங்கியிருந்த இடமாகும். இந்தக் குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியில் இருந்து குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள 7 படிக்கட்டுகளைக் கடந்து குகையினுள் நுழைவதால் இந்த இடம் ஏழடிப்பட்டம் என அழைக்கப்படுகிறது.


ஆனால், உலக வாழ்வைத் துறந்து 7 விதமான ஆன்மிக உறுதிகளை மேற்கொண்டு உண்ணாநோன்பிருந்து, உயிர்நீக்க விழைந்த சமண முனிவர்கள் தங்கியிருந்ததால் ஏழடிப்பட்டம் எனவும் பெயர் பெற்றதாக மற்றொரு செய்தி கூறுகிறது. குகைக் கோயிலில் 160 சதுர அடி அளவுள்ள முக மண்டபமும், அதையடுத்த 100 சதுர அடி அளவுள்ள சிறிய கருவறையும் உள்ளன. முன்மண்டபத்தின் முகப்பில் 2 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் வடக்குச் சுவரில் சமண ஆசிரியரின் சிற்பம், தெற்கில் 5 தலைபாம்புடன் கூடிய 23 சமண தீர்த்தங்கரர், பார்சுவநாதர் சிற்பங்களும் உள்ளன. குகைக் கோயிலின் தரை நீங்கலாக, மற்ற பகுதிகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன.  கருங்கல் பரப்பை பொலிந்து, சமப்படுத்தி, சுண்ணாம்புச் சாந்து பூசி அதன் மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழுப்பாகத் தேய்த்து அப்பரப்பில் ரேகைகளும், வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன.

முன்மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்திரிக்கப்பட்ட தாமரை தடாகம் அனைவரின் சிந்தையையும் கவரும். சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடியே இந்தத் தாமரைத் தடாகம்தான். மணிமேகலை கூறும் வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியங்கள் இவைதானோ என எண்ணத்தோன்றுகிறது. பசுமையான இலைகளுடன், தாமரையும், அல்லியும் இந்தத் தடாகத்தில் பூத்துக்குலுங்குகின்றன. 


பலவிதமான மீன்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன. யானைகள் நீரைக் கலக்கி களித்திருக்கின்றன. அன்னம், சிறகி, வாத்து போன்ற பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் குலாவுகின்றன. சுற்றுச்சூழலை மறந்து அசைபோட்டு இருமாந்திருக்கும் எருமை மாடுகளின் தோற்றமுடைய ஓவியங்கள் இயல்பாக உள்ளன. மேலும், அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும், அமைதியையும் பண்பட்ட கலைத் திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காண முடியும். இந்திய ஓவியக்கலை பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கை சித்தன்னவாசல் உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்க பயணியர் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. உணவு வசதி இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சியிலோ அல்லது 15 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டையிலோ தங்கலாம்.

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் அனைத்து பஸ்களும் இந்த ஊர் வழியாகச் செல்லும். ஆனால், சுற்றுலாத் தலம் பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளதால், பஸ்ஸில் செல்வோர் நடந்து செல்ல வேண்டும்.
தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளதால், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்க முடியும்.

No comments: