பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 4, 2017

திருஞானசம்பந்தரின் மேகராகக்குறிஞ்சி பதிகங்கள்.

       திருக்கழுமலம்.                                 பண் - மேகராகக்குறிஞ்சி

சேவுயருந் திண்கொடியான் திருவடியே சரணென்று சிறந்தவன்பால்
நாவியலும் மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயிற்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே.

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான் அமரர்தொழ வமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும் இறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே.

அலங்கல்மலி வானவருந் தானவரும் அலைகடலைக் கடையப்பூதங்
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்குங் காலத்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யர்வாழ் கழுமலமே.

பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச் சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின் சூளிகைமேல் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு மகிழ்வெய்துங் கழுமலமே.

ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர் செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு சுதைமாடக் கழுமலமே.

தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய அகம்பாயுங் கழுமலமே.

.
புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரணம்நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு வாய்நின்றான் அமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப் புள்ளிரியுங் கழுமலமே.

அடல்வந்த வானவரை யழித்துலகு தெழித்துழலும் அரக்கர்கோமான்
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல் பணிகொண்டோ ன் மேவுங்கோயில்
நடவந்த உழவரிது நடவொணா வகைபரலாய்த் தென்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற் கரைகுவிக்குங் கழுமலமே.

பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு கேழலுரு வாகிப்புக்கிட்
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா வகைநின்றான் அமருங்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள் கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து நின்றேத்துங் கழுமலமே.

குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல்மருவுஞ் சமணர்களு முணராத வகைநின்றான் உறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேல்தேவர்
கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க மேல்படுக்குங் கழுமலமே.

கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம் பந்தன்றான் நயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார் தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணான் அடிசேர முயல்கின்றாரே.

திருவையாறு                 பண் - மேகராகக்குறிஞ்சி

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் 
றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட 
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி 
முகில்பார்க்குந் திருவையாறே.

விடலேறு படநாகம் அரைக்கசைத்து 
வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர் 
பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி 
னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் 
கீன்றலைக்குந் திருவையாறே.

கங்காளர் கயிலாய மலையாளர் 
கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் 
விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் 
இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் 
இரைதேருந் திருவையாறே.

ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின் 
பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் 
தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி 
மந்திபாய் மடுக்கள்தோறுந்
தேன்பாய மீன்பாய செழுங்கமல 
மொட்டலருந் திருவையாறே.

நீரோடு கூவிளமும் நிலாமதியும் 
வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த 
தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் 
பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் 
நடம்பயிலுந் திருவையாறே.

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் 
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த 
புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார் 
பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் 
நடமாடுந் திருவையாறே.

நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு 
புரமூன்றும் நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி 
மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச 
மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு 
கண்வளருந் திருவையாறே.

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த 
அரக்கர்கோன் தலைகள் பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக் 
கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ 
இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல 
வயல்படியுந் திருவையாறே.

மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை 
மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத 
வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் 
குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் 
நடமாடுந் திருவையாறே.

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு 
சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே 
யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர் 
இறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள் 
வந்தலைக்குந் திருவையாறே.

அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம் 
பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான 
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால் 
ஈசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென் 
றெய்துவார் தாழாதன்றே.

                     திருச்சிற்றம்பலம்

திருமுதுகுன்றம்                      பண் - மேகராகக்குறிஞ்சி

மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் 
எண்குணங்களும் விரும்பும்நால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப் 
பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் 
கருதுமூர் உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா 
ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.

வேரிமிகு குழலியொடு வேடுவனாய் 
வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம் 
புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல 
மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற் 
புகுந்துலவு முதுகுன்றமே.

தக்கனது பெருவேள்வி சந்திரனிந் 
திரனெச்சன் அருக்கன்அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே 
தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு 
குயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா 
நீள்வயல்சூழ் முதுகுன்றமே.

வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய 
விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத் 
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநாண் 
அரியெரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த 
முதல்வனிடம் முதுகுன்றமே.

இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள் 
ஒருபாலா யொருபாலெள்கா
துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப் 
பிடமென்பர் உம்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு 
மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை இரைதேரும் 
வளர்சாரல் முதுகுன்றமே.

நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த 
நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
கரையருகு மறியமோதி
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு 
நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைகள் முகம்மலர 
வயல்தழுவு முதுகுன்றமே.

அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ் 
இருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின் 
ஒன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங் 
கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி 
முத்துலைப்பெய் முதுகுன்றமே.

கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல் 
இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை 
மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன் 
றூன்றிமறை பாடவாங்கே
முதிரொளிய சுடர்நெடுவா முன்னீந்தான் 
வாய்ந்தபதி முதுகுன்றமே.

பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும் 
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந் 
துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை 
செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ 
மேலுயர்ந்த முதுகுன்றமே.

மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட் 
டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும் 
உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை 
முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து 
தவம்புரியும் முதுகுன்றமே.

முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும் 
முதுகுன்றத் திறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய 
கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான 
சம்பந்தன் சமைத்தபாடல்
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர் 
நீடுலகம் ஆள்வர்தாமே.

                 திருச்சிற்றம்பலம்
    
 திருவேகம்பம்                              பண் - மேகராகக்குறிஞ்சி
வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.

வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.

வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.

தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்
தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே.

குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.
  
ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை
காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.
                       திருச்சிற்றம்பலம்

திருப்பறியலூர் - திருவீரட்டம்                        பண் - மேகராகக்குறிஞ்சி
கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.

குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.

கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

அரவுற்ற நாணா அனலம்ப தாகச்
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.

நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையா ரரவம் அழகா வசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.

வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.

சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
டடையன் பிலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.

நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்
கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே.

திருவீழிமிழலை            பண். மேகராகக் குறிஞ்சி

     
ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் 
கீரிருவர்க் கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் 
நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் 
பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் 
பொருள்சொல்லும் மிழலையாமே.

பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத் 
தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட 
கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு 
மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம் 
வீற்றிருக்கும் மிழலையாமே.

எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம் 
புரமூன்றும் எழிற்கண்நாடி
உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ் 
சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம் 
முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் 
வாய்காட்டும் மிழலையாமே.

உரைசேரும் எண்பத்து நான்குநூ 
றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் 
அங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல 
நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் 
கையேற்கும் மிழலையாமே.

காணுமா றரியபெரு மானாகிக் 
காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன் றுருவாகிப் பேருலகம் 
படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை 
உத்தமனை இறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப 
போலோங்கு மிழலையாமே.

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் 
றைம்புலனும் அடக்கிஞானப்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் 
துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் 
கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட 
மணஞ்செய்யும் மிழலையாமே.

ஆறாடு சடைமுடியன் அனலாடு 
மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங் 
குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி 
மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழிநற் 
பண்பாடும் மிழலையாமே.

கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக் 
கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள் 
நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த 
சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி 
விமானஞ்சேர் மிழலையாமே.

செந்தளிர்மா மலரோனுந் திருமாலும் 
ஏனமொடு அன்னமாகி
அந்தமடி காணாதே அவரேத்த 
வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி 
நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர் 
சேருமூர் மிழலையாமே.

எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர் 
சாக்கியரும் என்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க் 
கருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப் 
பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ 
டும்மிழியும் மிழலையாமே.

மின்னியலும் மணிமாடம் மிடைவீழி 
மிழலையான் விரையார்பாதஞ்
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன் 
செழுமறைகள் பயிலும்நாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் 
பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில் 
ஈசனெனும் இயல்பினோரே.





No comments: