பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 27, 2010

குறிக்கோளை அடைதல்!

கீதாஞ்சலி
கவி ரவீந்திரநாத் தாகூர்

எங்கு மனம் அச்சமற்று தலைநிமிர்ந்து நிற்கிறதோ
எங்கு அறிவு அடிமைத் தளைநீங்கி சுதந்திரமாய் இருக்கிறதோ
எங்கு உலகம் குறுகிய பூசல்களால் பிளவுபடாமல் இருக்கிறதோ
எங்கு சொற்கள் உண்மையின் ஆழத்திலிருந்து எழுகிறதோ
எங்கு விடாமுயற்சி பிரம்மத்தை நோக்கி கரம் நீட்டுகிறதோ
எங்கு பகுத்தறிவு எனும் தெளிந்த நீரோடையானது பழைய
பழக்கவழக்கமெனும் வரண்ட பாலை மணலில் வரண்டு போகவில்லையோ,
எங்கு உனது பேரருள் என் உள்ளத்தைப் பரந்த சிந்தனையிலும்
செயலிலும் ஈடுபடுத்துகிறதோ,
அந்த சுதந்திரமான சொர்க்கத்தில் இறைவா!
எனது நாடு விழித்தெழட்டும்!

குறிக்கோளை அடைதல்!

மகாகவி பாரதியார் அவர்கள், வலிமையற்ற, பொலிவில்லாத, ஒலியிழந்த, கிலிபிடித்த பழைய பாரதத்தைப் போ! போ! என்று துரத்திவிட்டு, ஒளிபடைத்த, உறுதிகொண்ட, களிபடைத்த, கடுமைகொண்ட, தெளிவுபெற்ற பாரதத்தை வா! வா! என்று வரவேற்கும் பாடல்தான் "நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற ஹிந்துஸ்தானமும்" எனும் தலைப்பிலான பாடல். புதிய பாரதத்தை வரவேற்கும் மகாகவி ஓரிடத்தில் சொல்கிறார்:--

"விளையு மாண்பு யாவையும் - பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா! வா! வா!"

இந்த வரிகளுக்கு என்ன விளக்கம்? ஒரு கதை; அது மகாபாரதத்தில் வருகின்ற கதை. அதிலும் பார்த்தன் சம்பந்தப்பட்ட கதை. அதை நாம் தெரிந்து கொண்டோமானால், இந்த வரிகளுக்கு விளக்கம் நமக்குச் சுலபமாகக் கிடைக்கும். அதற்கு நாம் "மகாபாரத"க் கதைக்குள் சிறிது போகலாம் வாருங்கள். மகாபாரதம் சமஸ்கிருத மூல நூல் வியாசபகவான் இயற்றியது. அதனைத் தமிழில் வில்லிபுத்தூரார் கவிதையாக வடித்திருக்கிறார். உரைநடையில் அந்த மாக்கதை பலராலும் எழுதப்பட்டிருக்கிறது. நமக்குத் தெரிந்து வியாசரைப் பின்பற்றி சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் "வியாசர் விருந்து" என்று எழுதிய பிரபலமான நூல். மற்றொன்று பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பெயரால் திருச்சி கரூர் சாலையில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் ஒரு தபோவனம் நிறுவி அதனை ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடத்தி, கல்வித் தாபனங்களை சிறப்பாக நிர்வகித்து வந்த சுவாமி சித்பவானந்தா அவர்கள் ஒரு 'மகாபாரதம்' உரைநடையில் எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரு பகுதியை இப்போது எடுத்துப் பார்ப்போம்.

"துரோணாச்சாரியார் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் வில்வித்தைக் கற்பித்த குரு ஆவார். அவர் ஒரு நாள் தமது சிஷ்யர்கள் வில்வித்தையில் அடைந்திருந்த திறமையைச் சோதித்துப் பார்க்கும் பொருட்டு அம்மாணவர்களுக்கிடையே ஒரு பரீட்சை வைத்தார். அப்பொழுது குருவும் சிஷ்யர்களும் ஒரு மரச் சோலையிலே கூடியிருந்தனர். மரக்கிளைகளுக்கிடையில் அடர்ந்து வளர்ந்திருந்த பச்சிலைகளுக்கிடையில் உலர்ந்து போன இலைகள் சில ஒன்றுபட்டு ஒரு பறவை போன்று தென்பட்டன. அதைத் துரோணாச்சாரியார் தம் சிஷ்யர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய முறையாவது: 'மேலே முக்கோணம் போன்று தென்படுகின்ற மரக்கிளைப் பாருங்கள். அதனுள் சதுரமாத் தென்படுகின்ற கிளைகளைப் பாருங்கள். அதற்குள் ஒரு சிறு கிளையின் மீது பறவை ஒன்று அமர்ந்திருப்பது போன்று தென்படுகிறது பாருங்கள்" என்று இயம்பினார்.

சிஷ்யர்களுக்கு அக்காட்சி நன்கு புலனாயிற்று. பின்பு ஒவ்வொருவனாகத் தரையின் மீதமர்ந்து அப்பறவையின் மீது குறிபார்க்க வேண்டும். அதன் பிறகு தாம் கேட்கின்ற கேள்விகளுக்கு விடை தரவேண்டும். தாம் ஆணையிடுகின்ற போது அக்குருவியின் மீது அம்பு எய்தல் வேண்டும். இங்ஙனம் அவர் வகுத்து வைத்த முறைப்பாடும் மாணவர்களுக்கு விளங்கிற்று. முதலில் ஆச்சாரியார் யுதிஷ்டிரனைக் கூப்பிட்டுக் குறிவைக்கும்படி சொன்னார். "நீ இப்போது என்னென்ன பார்க்கின்றாய்?" என்று ஆச்சாரியார் வினவினார்.

யுதிஷ்டிரன்:- "எனக்குப் பக்கத்தில் தாங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். சுற்றிலும் மரங்கள் இருக்கின்றன. மேலே முக்கோணமாக மூன்று கிளைகள் அதனுள் சதுரங்கக் கிளைகள்," இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போனான்.

துரோணர்:- "நீ அம்பை எய்ய வேண்டாம், எழுந்து அப்பால் சென்று அமர்வாயாக!"

அடுத்தபடியாகத் துரியோதனன் அழைக்கப்பட்டான். அவன் அதே இடத்தில் அமர்ந்து குறிபார்த்தான்.

துரோணர்:- "நீ இப்போது என்னென்ன பார்க்கிறாய்?"

முதல் மாணாக்கன் சொன்னவைகளையெல்லாம் கிட்டத்தட்ட அதே பாங்கில் துரியோதனும் எடுத்து விளக்கினான்.

துரோணர்:- "நீயும் அம்பு எய்ய வேண்டாம். எழுந்து உன் இடத்துக்குப் போ."

மூன்றாவதாகப் பீமனுடைய முறை வந்தது. இதே கேள்விகளும் விடைகளும் வருவனவாயின. இப்படி இன்னும் மூன்று நான்கு மாணாக்கர்கள் அமர்ந்து குறிபார்த்தார்கள், குருநாதரின் கேள்விகளுக்கு விடையிறுத்தார்கள், அவர்களையெல்லாம் ஆச்சாரியார் எழுந்து போகச்சொல்லிவிட்டார்.

கடைசியாக அர்ஜுனனின் முறை வந்தது.

துரோணர்:- "அர்ஜுனா! நீ இப்போது என்னென்ன பார்க்கிறாய். விளக்கமாகச் சொல்!"

அர்ஜுனன்: "பறவை"

துரோணர்: "நன்கு விளக்கு. நீ இப்போது என்னென்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?"

அர்ஜுனனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவன் கவனம் ஆச்சாரியாரின் கேள்வியில் இல்லை. மறுபடியும் துரோணர் அதே கேள்வியைத் திரும்ப கேட்டார், அப்போதும் அர்ஜுனனிடமிருந்து எந்த அசைவும் இல்லை. குறிப்பார்ப்பதிலேயே இருந்தான். அப்போது சொன்னார் துரோணர் "அர்ஜுனா, இலக்கை அடி!" என்றார்.

அர்ஜுனன் விடுத்த அம்பு இலக்கைத் துளைத்துக் கொண்டு சென்றது. மனதைக் குவித்து ஒருமுகப்படுத்துவதில் அர்ஜுனன் தலைசிறந்து விளங்கினான். அப்படி ஒருமுகப்பட்ட மனது செயற்கரிய செயலைச் செய்து காட்டி சாதிக்க வல்லது."

மேலே கண்ட கதையிலிருந்து என்ன தெரிகிறது. மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு கொண்ட இலக்கை மட்டுமே சிந்தித்துக் கவனத்துடன் செயல்பட்டால் முடியாத காரியமும் உண்டா? யார் ஒருவன் தன் மனதை அடக்கி ஒருமுகப்படுத்துகிறானோ, யார் ஒருவன் ஒருமை மனத்துடன் பயிற்சியில் ஈடுபடுகிறானோ, அவன் ஆற்றல் மேலோங்குவது மட்டுமல்ல, குவிந்து ஒருமுகப்பட்ட மனதையுடையவன் தரத்தில் மேலோங்கி நிற்பான் என்பது இந்த கதையின் கருப்பொருள். அதைத்தான் பாரதி குறிப்பிட்டு ஒருமுகப்பட்ட மனத்தோடு வெற்றி எனும் இலக்கை நோக்கிச் சாதிக்கத் துடிக்கும் இளைய பாரதனாக வா! வா! வா! என்று அழைக்கிறார்.

Thursday, June 3, 2010

"நாட்டியாஞ்சலி"

"நாட்டியாஞ்சலி"
தஞ்சை வெ.கோபாலன், தலைவர், ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழு, திருவையாறு &
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

இன்றைய அறிவியல் உலகத்தின் கண்டுபிடிப்புகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்கள் கண்டுபிடித்து அதற்கு உருவகங்களைக் கொண்டு விளக்கமும் அளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட விளக்கங்களில் ஒன்றுதான் நடராஜப் பெருமானின் தாண்டவத்தின் தத்துவமும். சிவபெருமான் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழித்தும் வருவதாக நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள். இம்மூன்று செயல்களோடு மறைத்தல், வீடுபேறு அளித்தல் எனும் இரண்டும் அடங்கிய "பஞ்ச கிருத்தியங்கள்" எனப்படும் தொழிலைச் சிவபெருமானுக்கு அளித்து பெருமை பெற்றிருக்கிறார்கள்.

வான்வெளியில் கூட்டங்கூட்டமாக சக்தியின் வெளிப்பாடு வந்து கொண்டிருப்பதையும், அப்படிப்பட்ட சக்தியை உள்ளடக்கிய அணுவை பிளந்தால் அதிலிருந்து வெளிப்படும் சக்தி 'மாபெரும் சக்தியாக' உருவெடுப்பதையும் மேலை நாட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்த போது, இந்த கண்டுபிடிப்புகளை இந்தியாவில் ஆன்மீகமாகக் கண்டுபிடித்து, இப்பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, முதன்முதல் உருவான காற்று, அது எழுப்பிய ஓசை இவற்றை இறைவனின் தாண்டவமாகக் கருதி 'நடராஜர்' அதாவது நடனத்துக்கு அரசர் என்று சிவனை முன்னிருத்தி வணங்கி வந்ததைப் போற்றி பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.

இந்து புராணங்களின்படி சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடினார். எதற்கு? தான் அதிகம் படித்துவிட்டதாக ஆணவம் கொண்டு சில முனிவர்கள் இறைவனை மறந்த காரணத்தால், அவர்களுக்கு உண்மை விளங்கிட வேண்டுமென்பதற்காக இந்த ஆனந்த தாண்டவம் ஆடினார். நம் புராணங்களின்படி சிவபெருமான்தான் தாண்டவங்களுக்கு எல்லாம் முதல்வன். சிவனும் பார்வதியும் போட்டியிட்டு ஆடியதாக புராணம் கூறும். சிவன் ஆடிய ஆட்டம் 'தாண்டவம்'. இது பிரபஞ்சம் தோன்றிய போதும், அழிக்கப்படும் போதும் ஆடிய தாண்டவமாகும். முதலில் ஆடியது 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிவின் போது ஆடியது 'ருத்ர தாண்டவம்' என்றும் அறிகிறோம். பார்வதி ஆடிய ஆட்டத்துக்கு 'லாஸ்யம்' என்று பெயர். இது முன்னதைப் போல் வேகமும், துள்ளலும் கொண்டதல்ல. பார்வதியின் லாஸ்யம் நளினமானது, உணர்வைத் தூண்டவல்லது, இனிமையானது. பெண்கள் ஆடுவது லாஸ்யம் என்று கூறப்படுகிறது.

சிவனுடைய இந்த ஆட்டத்துக்கு ஓர் உருவம் கொடுத்து பஞ்சலோக விக்கிரகம் படைத்தது தமிழகத்தில்தான். கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கம் தோன்றியிருக்கிறது. அப்படி சிவபெருமான் ஆடிய தலங்களை ஐந்து இடங்களில் காணமுடிகிறது. அவற்றில் முதன்மையானது சிதம்பரம். இங்கு இருப்பது கனகசபை, மதுரையில் ரஜத சபை அதாவது வெள்ளி சபை, திருவாலங்காட்டில் ரத்தின சபை, திருநெல்வேலியில் தாமிர சபை, குற்றாலத்தில் சித்திர சபை என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த போது, அவர் மகாலக்ஷ்மியிடம் பரமேஸ்வரனின் ஆனந்த தாண்டவத்தின் சிறப்பினை எடுத்தியம்பிக் கொண்டிருந்தார். அப்போது அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிசேஷன் மகாவிஷ்ணுவிடம் தான் அந்த ஆட்டத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறவும், அவரை பூமிக்கு அனுப்பி பதஞ்சலி முனிவர் என்ற பெயரோடு சென்று அந்த ஆட்டத்தைக் காணப் பணித்தார். அவருடன் வியாக்கிரபாத முனிவர் எனும் புலிக்கால் முனிவரும் சேர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் இறைவனின் ஆட்டத்தைக் காண்பதை மகாவிஷ்ணுவும் பார்த்துக் கொண்டிருந்தார். இதையொட்டியே சிதம்பரத்தில் நடராஜர் ஆலயத்தில் கோவிந்தராஜ பெருமாளுக்கும் ஒரு சந்நிதானம் அமைக்கப்பட்டதாகக் கூறுவர்.

இதே சிதம்பரத்தில்தான் நடராஜப் பெருமானுக்கும் காளிக்கும் போட்டி ஏற்பட்டு இருவரும் ஆட, ஆட்டத்தின் இடையே சிவபெருமான் தன் இடது காலை உயரே தூக்கி ஊர்த்துவ தாண்டவமாக ஆட, காளியால் அப்படி ஆட முடியாமல் தலை குனிந்து ஊரை விட்டு வெளியேறி கோயில் கொண்டாள் என்றும் வரலாறு உண்டு.

சிவனுடைய தாண்டவம் பிரபஞ்சத்தின் தோற்றம் மட்டுமல்ல, உயிரினங்கள், புல், பூண்டுகள், மரம் செடிகொடிகள், ஊர்வன, பறப்பன, மிருகங்கள், மனிதர்கள் என்று இவை பிறப்பது, வாழ்வது, இறப்பது என்பதை தத்துவார்த்தமாகக் காட்டும் நோக்கில் ஆடப்பட்டது. இவை முன்பே கூறியதைப் போல பஞ்ச கிருத்தியங்களின் வெளிப்பாடுதான்.

நடராஜப் பெருமானுடைய விக்கிரகம் தமிழ்நாட்டில்தான் சுமார் ஆயிரம் ஆயிரத்தைனூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம். சாதாரணமாக சிவன் கோயில்களில் லிங்க வழிபாடுதான் நடப்பதை நாம் அறிவோம். நடராஜர் சிவனுடைய வடிவம்தான் எனும்போது இந்த உருவத்துக்குக் காரணங்களை அறிந்து கொள்ள வேண்டாமா? நடராஜர் விக்கிரகம் வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை மடித்துக் கொண்டு ஆடுகிறார். சில இடங்களில் இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கியும் ஆடுவது போன்ற தோற்றமும் உண்டு. இந்த உருவத்துக்கு நான்கு கரங்கள், வலப்புறம் ஒரு கரத்தில் டமருகம் எனும் உடுக்கை வாத்தியமும், இடது கையில் சந்திரபிரபை போன்று வளைந்த உள்ளங்கையில் தீப்பிழம்புகளும், மற்றொரு வலக்கை அபயஹஸ்தமாகவும், இடக்கையை மார்புக்கு நேரே வளைத்தும் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். முதலில் காற்றுதான் தோன்றியது. அந்த காற்று ஓசை எழுப்பியது என்பதற்காக டமருகம். தீப்பிழம்பு, உலகை அழிப்பதைக் காட்டுவதற்கும், இடக்கை மடக்கி கால் நோக்கி வளைந்திருப்பது, இறைவனின் அடிபணிவதால், வலக்கரம் காட்டும் அபயஹஸ்தம் அனைவருக்கும் அடைக்கலமளிக்கும் என்பதையும் விளக்குவதாகக் கூறுகிறார்கள்.

இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. நடராஜர் காலை ஊன்றி நிற்குமிடத்தில் காலடியில் ஓர் உருவம் கிடப்பதைப் பார்க்கலாம். இந்த உருவம் அபஸ்மாரம் எனப்படுபவனின் உருவம். இந்த அபஸ்மாரம் உலகில் உள்ள தீமைகள், நோய்கள் இவற்றின் உருவகம். மனத்தின் வக்கிரம், கொடுமை இவற்றையும் இது எடுத்துக் காட்டுகிறது. இவற்றைக் காலில் போட்டு அழிப்பதுதான் சிவபெருமான் செய்யும் தாண்டவத்தின் நோக்கம். இப்படி ஒரு கடவுளின் உருவத்தைப் படைப்பதன் மூலம், அறிவியல், உலகின் தோற்றம், வளர்ச்சி, அழிவு இவ்வளவையும் இறைவன் அணுவளவும் பிசகாமல் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

'நடராஜா' எனும் சொல் 'நடனத்துக்கு அரசன்' எனும் பொருளில் வழங்கப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் இலக்கணப்படி இச்சொல் வழக்கில் வந்தது. இது மட்டுமல்லாமல் வெறு சில விளக்கங்களும் நடராஜர் சிலைக்குக் கொடுக்கப்படுகிறது. அவரது இடையிலும் கரங்களிலும் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள குண்டலினி சக்தியைப் பாம்பாகக் காட்டுகிறது என்கிறார்கள். இவரது உருவத்துக்கு சுற்றிலும் தீ வட்டத்தைக் காணலாம். இது இந்த பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்படும் துன்பங்கள், மும்மலங்கள் இவற்றைக் குறிக்கிறது.

நாட்டியம் என்பது அதன் இயக்கத்தை, ஆட்டத்தை, அதனோடு தொடர்புடைய இசை, தாளம், பாவம் இவற்றைப் பார்த்து ரசிக்கக் கூடிய கலை. இது சமயம் சார்ந்த வழிபாடுமட்டுமல்லாமல், மனித வர்க்கத்தின் ஆளுமைக்குட்பட்ட, கோபம், காதல், அன்பு, வீரம், சோகம், இரக்கம் இவற்றையும் காட்டக்கூடிய கலை. அதனால்தான் நவரஸங்களும் அடங்கிய ராகம், அந்த ராகத்திற்கேற்ற பாடல் இவற்றைக் கொண்டு இந்த ஆட்டங்களை நடத்திக் காட்டுகிறோம். இதனால் இவ்வாட்டங்களுக்குள் அடங்கியுள்ள மனித உணர்வுகளை பலரும் அறியும் வண்ணம் இந்த நாட்டியங்கள் அமைக்கப்படுகின்றன.

இவ்வகை நாட்டியங்களை மூன்று வகையாக வகுத்திருக்கிறார்கள். அவை 'நாட்டியம்', 'நிருத்தியம்', 'ந்ருத்தம்' என்பன. முதல் வகை நாட்டியம் என்பது ஒரு வரலாற்றை அல்லது கதையை வரிசையாகச் சொல்லும் ஆங்கில Opera போன்றது. இவற்றை நாட்டிய நாடகம் எனலாம். இதில் பாத்திரம் ஏற்றிருப்பவர்கள், தங்கள் பங்கை நடிப்பின் மூலமும், பாடல்கள் மூலமும், பாவங்கள் மூலமும் காட்டமுடியும். இரண்டாவது வகை நிருத்தியம். இது நவரஸங்களில் ஏதாவதொரு ரஸத்தில் அமைந்த பாடலுக்கு கருத்துக்கேற்ப பாவமும், ரஸம் வெளிப்படும்படியான ஆட்டமும் ஆடிக் காண்பது. மூன்றாவது வகையில் தாளக்கட்டும், உடல் அசைவும் இருக்கும் ஆனால் அவற்றுக்கு மேற்சொன்னவை போல எந்த பொருளும் கிடையாது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் இப்போதெல்லாம் 'நாட்டியாஞ்சலி' எனும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் பரதம் பயின்ற நாட்டியக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டி அருமையாக நடனம் ஆடுகிறார்கள். எல்லா கலைகளுக்கும் முதன்மையானவரான சிவபெருமானுக்கு அவன் அளித்த நாட்டியம் மூலமாகவே அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்ச்சிகள் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.

மற்றெல்லா நாடுகளிலும் கூட இசையும் நாட்டியமும் உண்டு. ஆனால் அவை பொழுது போக்குக்காகவும், அந்தந்தக் கலைகளில் கலைஞர்களின் திறமைகளை வெளிக்காட்டும் விதத்திலும் அமைந்திருக்கும். ஆனால் நம் பாரத புண்ணிய பூமியில் எல்லா கலைகளும் அந்த இறைவனுக்கே என்று அர்ப்பணிக்கும் உணர்வோடு இவற்றைக் கையாண்டு வருகிறார்கள். சிவபெருமான் நாட்டியத்தில் வல்லவர் என்றால், இசைக்குரிய வீணை சரஸ்வதியின் கையில் இருக்கிறது. நாரதருடைய கையில் தும்பூர் எனும் வாத்தியம் இருக்கிறது. நந்தி மத்தளம் வாசிக்கிறார். கண்ணன் குழல் ஊதுகின்றான். இப்படி இசையும் மற்ற கலைகளும் இறைவனுக்கே என்று அர்ப்பணம் செய்வதால்தான் இந்த கலைகளை நாம் பக்தியோடும், பரவசத்தோடும் பயில்கிறொம், கற்றுக்கொண்டு அவற்றில் நம் திறமைகளை வெளிக்கொணர்கிறோம். அப்படி சிவபெருமானுக்கு நாம் செலுத்தும் அஞ்சலிதான் "நாட்டியாஞ்சலி" எனும் நிகழ்ச்சி.

நாட்டியம் என்பது பல செயல்களை ஒருங்கிணைத்து செயல்படும் ஒரு யோகம் எனலாம். தாளம் பிசகாமல் கால் தாளமிட வேண்டும். சொல்லும் கருத்துக் கேற்ற ரஸத்தை வெளிப்படுத்தும் ராகம் வேண்டும். அதற்கேற்ப முகமும் உணர்ச்சிகளையும், கைகளும், விரல்களும் முத்திரைகளையும் காட்ட வேண்டும். இவற்றுக்கு மனம் யோகத்தில் திளைத்தல் வேண்டும். அப்போதுதான் இவை அனைத்தும் சிறிதும் பிசகாமல் செய்து முடிக்க முடியும். எனவே நாட்டியம் என்பது ஒரு யோக சாதனை. இது சாதாரணமாக எல்லோராலும் செய்யமுடிவதல்ல. இதற்கென்று ஆர்வமும், விடாமுயற்சியும், நல்ல பயிற்சியும் எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல குருநாதர்களும் அமைய வேண்டும். குருபக்தி இந்த கலைகளில் மிகவும் அவசியம்.

இந்த கலைகள் நம் பாரம்பரிய சொத்துக்கள். இவற்றை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கெல்லாம் இருக்கிறது. இந்தக் கடமையைச் செவ்வனே செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம்-- இராஜராஜேச்சரம்

                                                             இராஜராஜேச்சரம்

தஞ்சை இராஜராஜேச்சரம்
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள நூல்களிலிருந்து கட்டுரையாக்கம்
தஞ்சை வெ.கோபாலன்

தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தார்கள். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஓர் ஆலயம் எடுத்து வழிபட்டான். அவனது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றினர். இங்குதான் மாமன்னன் ராஜராஜன் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் ஓர் கற்கோயில் எடுத்துப்பித்து அங்கு ஓர் மாபெரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பெருமை பெற்றான். அத்தகைய பெருமை பெற்ற தஞ்சாவூர் மற்றும் இங்கு வானளாவ எழுந்து நிற்கும் இராஜராஜேச்சரம் எனப்படும் பிரஹதீஸ்வரருக்கான பெரிய கோயிலைப் பற்றி, வரலாறு, கல்வெட்டு ஆகியவைகளின் அடிப்படையில் 'தஞ்சாவூர்' எனும் ஓர் ஒப்பற்ற நூலையும் 'இராஜராஜேச்சரம்' எனும் மற்றொரு நூலையும் எழுதி வரலாற்றில் இடம்பெற்று விட்டவர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம். இவருடைய மேற்படி நூல்களில் இருக்கும் செய்திகளைத் தவிர வேறு எந்தப் புதிய தகவலையும் மற்றவர் யாரும் கொடுத்துவிட முடியாது. எனவே, அவருடைய நூல்களில் கண்ட அருமையான செய்திகளை இந்தக் கட்டுரையில் கொடுத்திருக்கிறேன். இது முழுவதும் அவருடைய கண்டுபிடிப்புகளே; இதில் எதையும் நான் புதிதாக எழுதிவிடவில்லை. இங்கு கொடுக்கப்படும் செய்திகள் அனைத்தும் அவரது நூல்களில் காணப்படும் கருத்துக்களேயன்றி, சொந்தச் சரக்கு எதுவுமில்லை.

 தமிழகமும், தமிழர்களும் இத்தகைய வரலாற்றுச் செய்திகளுக்காக யாரையாவது பாராட்டி பெருமை செய்யவேண்டுமென்றால், அதற்கு இவரைத் தவிர வேறு யாரும் தகுதியாக இருக்கமுடியாது. ஆகவே முதலில் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு கட்டுரையைத் தொடங்குகிறேன்.

'இராஜராஜேச்சரம்' - பெயர்க்காரணம்.

"கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் 'பெரிய கோயில்' என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்."

"பெரிய கோயில், 'ப்ருஹத் ஈஸ்வரம்' எனும் வடமொழிப் பெயரால் 'பிரஹதீஸ்வரம்' என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் 'பிரஹதீஸ்வரர் ஆலயம்' எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் 'பெரியகோயில்' என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது."

சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.

இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன."

"இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான 'தென்னிந்திய கல்வெட்டுக்கள்' என்னும் நூலில், "பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்" எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை:- நிழல் கீழே விழாத கோபுரம்; வளர்ந்து வருகின்ற நந்தி, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் பொய்."

"மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்."

'இராஜராஜேஸ்வரம்' எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து.

நுழைவுக் கோபுரம் - கேரளாந்தகன் திருவாயில்.

இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது 'கேரளாந்தகன் திருவாயில்' எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் 'காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்' என்று பெயர்பெற்றான். கி.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான்.

இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது 'இராஜராஜன் திருவாயில்'. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது 'நந்தி மண்டபமும்' மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் 'வாராஹி' அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

ராஜராஜன் எழுப்பிய மாபெரும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய இவ்விரு கோபுரங்களின் சிறப்பை அறிய வேண்டுமானால் குடவாயில் அவர்களின் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இனி கோயிலின் சிறப்பினைப் பார்ப்போம்.

திருக்கோயிலின் அமைப்பு.

ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. "திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி" என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.

ஆலயத்தின் மகாமண்டபம் அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. "இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது. மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது.

இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.

அற்புதமான துவாரபாலகர்கள்.

பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்.

அம்மன் ஆலயம்.

நத்தி மண்டபத்திற்கு வடபுறம் அமைந்திருப்பது அம்மன் ஆலயம். இங்கு மேற்புறச் சுவரில் காணப்படும் ஓர் கல்வெட்டின்படி இது பாண்டிய மன்னனின் கல்வெட்டு என்பது தெரிகிறது. முதலில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல வடக்கு தெற்கு ஆகிய திசைகளில்தான் படிகள் இருந்தனவாம். பிறகு நாயக்க மன்னர்கள் காலத்தில் முன்மண்டபம் வழியாகச் செல்லும் பாதை அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. நாயக்க மன்னர்கள் காலத்தில் பிரமிச்சி நாயக்கர் மண்டபம், மல்லப்ப நாயக்கர் மண்டபம், மூர்த்தி அம்மன் மண்டபம் ஆகியவற்றை எழுப்பித்ததோடு ஆலயத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியருக்கு ஓர் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயிலையும் எழுப்பியிருக்கின்றனர். நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் வைணவர்களாக இருந்தபோதும் தஞ்சையில் நாயக்க வம்சத்தை ஸ்தாபித்த சேவப்ப நாயக்கன் மட்டும் சைவனாக இருந்தான் எனவும், இவனே சுப்பிரமணியர் ஆலயத்தை எழுப்பியிருக்க வேண்டும் என்றும் நம்புகின்றனர்.

நந்தி மண்டபமும் அங்கே அமைந்திருக்கும் மாபெரும் நந்தியும் நாயக்க மன்னர்களின் கொடை. இந்த ரிஷப மண்டபம் 5அடி உயரமுடைய மேடைமீது 16 தூண்கள் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது. மேற்கூரை ஒரே சமதளமாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் அமைந்துள்ளது. இந்த நந்தி மண்டபத்தையும், சந்நிதிக்குள் நுழையும் முன்மண்டபத்தையும் இணைக்க நாயக்க மன்னர்கள் முயன்றிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எழுப்பிய ஒரு தூண் இப்போதும் துவஜஸ்தம்பம் அருகில் இருக்கிறது.

விநாயகர் ஆலயம்.

திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அமைந்திருக்கும் விநாயகர் ஆலயம் மராட்டிய மன்னன் சரபோஜியால் கட்டப்பட்டது. மன்னன் ராஜராஜன் கட்டிய விநாயகர் கோயில் திருச்சுற்று மாளிகையில் இருக்கிறது. இது மராட்டிய கட்டுமானத்தோடு விளங்குகிறது. இதன் பின்புறம் 108 சிறிய சிவலிங்கங்கள் உள்ளன. இவற்றை சரபோஜி மன்னன் வீரசிங்கம்பேட்டை எனும் ஊரிலிருந்து கொண்டுவந்து1801இல் பிரதிஷ்டை செய்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இச்சிவலிங்கங்கள் வீரசிங்கம்பேட்டையில் கி.பி. 750இல் இரண்டாம் நந்திவர்மன் எழுப்பிய ஆயிரத்தளியில் இருந்தவை, பின்னாளில் அந்நகரம் அழியவே அந்த இடிபாடுகளிலிருந்து லிங்கங்களைக் கொணர்ந்து சரபோஜி இங்கே பிரதிஷ்டை செய்தான் என்கின்றனர்.


தஞ்சை பெருவுடையார் திருவுருவம்

தஞ்சைக் கோயிலின் கட்டட அமைப்பு பெரும் கோயிலாகத் தொன்றுகிறதோ அதுபோலவே அதிலுள்ள சிற்பங்களுமும் பெரியதாகவும் எழில்மிகுந்தனவாகவும் காட்சியளிக்கின்றன. மற்ற சிவாலயங்களைப் பார்க்கும்போது இங்குள்ள சிற்பங்கள் தனித்துவமிக்கதாக இருக்கின்றன. இங்குதான் மிகப்பெரிய சிவலிங்கம் மூலவராகக் காட்சியளிக்கிறார். பெருவுடையார் எனப்பெயர் பெற்று விளங்கும் இந்த லிங்கத் திருமேனி முழுவதும் கருங்கல் பாறையில் செதுக்கப்பட்டது. மூன்று பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இதில் நடுவில் லிங்கபாணம் நீண்ட தூண்வடிவில் இருக்கிறது. அதன் மேல்பாகம் உருளை வடிவில் இருக்கிறது. இதன் பீடப்பகுதி சதுர வடிவில் இருக்கிறது. நடுப்பகுதியில் எண்பட்டை அமைப்பில் இருக்கிறது. இது தரையிலிருந்து 12 அடி 10 அங்குல உயரத்தில் இருந்தாலும் இதன் அடிப்பகுதி தரைக்குள் 3 அல்லது 4 அடியாவது புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ இது 16அடி உயரமுடைய ஒரே கல்லிலால் ஆன லிங்க வடிவமாகும்.

இராஜராஜேச்சரத்தில் மனித உருவச் சிலைகள்

இராஜராஜேச்சரத்து கல்வெட்டில் மன்னனின் தமக்கை குந்தவை நாச்சியார் தன் தந்தை இரண்டாம் பராந்தகனான சுந்தர சோழருக்கும் தன் தாயார் வானமன்மாதேவியார்க்கும் செப்புத் திருமேனிகள் எடுத்தமை பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த சுந்தர சோழனை பொன்மாளிகை துஞ்சின தேவர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவர் நந்திபுரத்து அரண்மனையில் பொன்மாளிகையில் துஞ்சினவர் என்பதால் இந்தப் பெயர் பெற்றார். இராஜராஜன் அவன் தமக்கையார் ஆகியோர் தங்கள் தந்தைக்கும் தாய்க்கும் படிமங்கள் அமைத்து வழிபட்டமை தெரிகிறது.

இவை தவிர மன்னன் இராஜராஜனுக்கும் அவனது தேவி லோகமாதேவி ஆகியோர்க்கு பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியன் எனும் தென்னவன் மூவேந்த வேளான் படிமங்கள் எடுத்ததை ஒரு கல்வெட்டு கூறுகிறது.

அர்த்த மண்டப தென்வாயிலில் மன்னன் இராஜராஜனும் அவன் மகன் ராஜேந்திரனும் சிலைவடிவில் காட்சியளிக்கிறார்கள். அவை அளவில் மிகச் சிறியதாகவும் கடவுளை வணங்கும் கோலத்தில் அவை வடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

இராஜராஜேச்சரத்தில் கலைப்பணிகள்

தஞ்சை இராஜராஜேச்சரத்தில் இயல் இசை நாடகம் எனும் தமிழனின் முத்தமிழ் பிரிவுகள் சிறப்பாக வளர்ந்திருக்கின்றன. இவை இங்குள்ள கல்வெட்டுகள், சுவடிகள், சிற்பங்கள், ஓவியங்கள் வாயிலாக அறியலாம். பின்னர் வந்த விஜயநகரப் பேரரசுகள், மராத்தியர்கள் ஆகியோர் காலத்திலும் இவை இங்கு சிறப்பாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஓர் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது.

இராஜராஜன் தேவார ஏடுகளைச் சிதம்பரம் ஆலயத்திலிருந்து மீட்டான் எனவும், அதனை நம்பியாண்டார் நம்பி முறைப்படுத்திக் கொடுத்தார் எனவும் வரலாறு சொல்லுகிறது. எனினும் இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் முறை இருந்திருக்கிறது. இதற்காக பணியாற்றியோர் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இங்கு திருமுறை விண்ணப்பம் பாடுவோர், உடுக்கை வாசிப்போர், மத்தளம் வாசிப்போர் ஆகியோர் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியக் கலை மிக மேன்மையாக வளர்க்கப்பட்டிருக்கிறது என்பது முக்கிய செய்தி. தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் நாட்டியத்திற்காக நானூற்று ஏழு நாட்டிய மங்கைகளும் ஏழு நட்டுவனார்களும், உடன்பாடுவோர் நான்கு பேரும், மெராவியம் எனும் இசைக்கருவி இசைப்பார் இருவர், கானம் பாடுவோர் இருவர், வங்கியம் இசைப்பார் மூவர், பாடவியம் எனும் இசைக்கருவியை இசைப்போர் நால்வர், உடுக்கை வாசிப்போர் இருவர், வீணை வாசிப்போர் இருவர் ஆரியம் பாடுவார் மூவர் (அதாவது வேதம் ஓதுதல்) தமிழ் பாடுவோர் நால்வர், கொட்டி மத்தளம் வாசிப்போர் இருவர், முத்திரைச் சங்கு ஊதுவோர் மூவர், பக்கவாத்தியம் வாசிபோர் ஐவர் இப்படி பற்பலர் இங்கு பணிபுரிந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் உண்டு. திருப்பதியம் விண்ணப்பம் செய்வோருக்கு பிடாரர்கள் என்று பெயர்.

இப்படி ஆலயத்தில் பாடுவதற்கும், உடன் வாத்தியம் வாசிப்பதற்கும், நடனமிடுதற்கும் இந்தக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் இவைகள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டியமாடும் நங்கையர் நானூற்றி ஏழு பேருக்கும் இரண்டு தளிச்சேரிகள் (குடியிருப்புப் பகுதிகள்) அமைத்து அவரவர்க்குத் தனித்தனியாக வீடுகள் கொடுத்து அவற்றுக்கு இலக்கங்களும் கொடுத்த செய்தி குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நங்கையர் அனைவர் பெயர்களும் அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர், முன்பு பணிபுரிந்த இடம் ஆகிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருப்பதிலிருந்து, அரசன் இவர்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தான் என்பதை அறியலாம்.

ஆடற்கலைக்கு அரசன் அளித்த முக்கியத்துவம், அவன் வடித்துள்ள கரணச் சிற்பங்களிலிருந்து அறியலாம். ஆடற்கலைக்கு மூல முதல்வன் சிவபெருமான் நடராஜ மூர்த்தி எனும் ஆடவல்லான் ஆகும். "ஒரு மொழிக்கு எழுத்தும், அவ்வெழுத்துக்களின் கோர்வையான சொற்களும்தான் அடிப்படை. அதுபோல பரதக் கலைக்கு அடிப்படையாகத் திகழ்வது நூற்று எட்டு கரணங்கள். சிவபெருமான் முதன்முதலில் கரணங்களைப் போதித்தாராம். தஞ்சை இராஜராஜேச்சரத்தைப் போலவே பரதக்கலை கரணங்கள் தில்லை, திருக்குடந்தை, திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் உள்ளன. சில இடங்களில் பெண்கள் கரணங்கள் ஆடுவதாகவும், குடந்தையில் முருகக் கடவுள் ஆடுவதாகவும் சிற்பங்கள் உண்டு. இங்கு தஞ்சையில் பெருவுடையார் மூலத்தானத்துக்கு மேலே உள்ள பிரகார சுவர்களில் இந்த 108 கரணங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. 104 முழுமை அடைந்து விட்ட நிலையில் என்ன காரணத்தாலோ கடைசி நான்கு நிறைவு பெறவில்லை.

ஆலய ஊழியர்களுக்கு நிவந்தங்களும் ஊதியங்களும்

மாமன்னன் இராஜராஜன் இவ்வாலயத்தின் செயல்பாட்டுக்காக பல நிவந்தங்களை இட்டு வைத்தான். எண்ணற்ற பொன்னணிகள், பொன்னால் ஆன பாத்திரங்கள், பொன் திருமேனிகள், வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளித் திருமேனிகள், செப்புத் திருமேனிகள் என்று இவன் வழங்கியுள்ள நிவந்தங்கள் எண்ணற்றவை. சோழமண்டலத்தில் மட்டுமல்ல இவன் வெற்றி கொண்ட பிற பிரதேசங்களிலிருந்தும் பல ஊர்களை இந்தக் கோயிலுக்கு அளித்திருக்கிறான். ஊர்நத்தம் திருக்கோயில்கள், குளங்கள் என்று இவன் செய்வித்த அறங்கள் அளப்பரியன. நிலங்களுக்கு வரி நிர்ணயம் செய்து ஒவ்வோராண்டும் அளக்கப்பட வேண்டிய நெல்லும், அந்த நெல்லை அளக்க 'ஆடவல்லான்' எனும் பெயரில் ஓர் மரக்காலும் நியமித்தான்.

ஒரு ஊரின் மொத்த நிலப்பரப்பு, அதில் வரி விலக்கு பெற்ற விளை நிலங்கள், கோயில்களுக்கு தேவதானமாகத் தரப்பட்ட நிலப்பரப்பு, அதற்கு நிச்சயிக்கப்பட்ட வரி கோயிலுக்கு செலுத்துதல், எவ்வளவு நெல் அளக்க வேண்டும் என்பதுபோன்ற பல விவரங்களை கல்வெட்டில் எழுதி வைத்தான். துல்லியமான நில அளவினைக் குறித்து கோயிலுக்கு வரவேண்டிய நெல்லின் அளவு போன்றவற்றையும் மிகச் சரியாகக் குறித்து வைத்தான். இவன் பல ஊர்களிலும், பல நிலப்பரப்புகளிலிருந்தும் கோயிலுக்கு வரவேண்டிய மொத்த நெல்லின் அளவையும் குறித்து வைத்திருக்கிறான். அதன்படி இக்கோயிலுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ ஒரு லட்சத்துப் பதினையாயிரம் கலம் நெல்லும், 300 கழஞ்சுப் பொன்னும், 2000 காசுகளும் நிரந்தர வருமானம் கிடைக்க ஆவன செய்தான்.

பெருவுடையார் ஆலயத்துக்கு பணிக்கப்பட்ட தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தலைக்கு ஒரு வேலி வீதம் 400 வேலி நிலம் மான்யமாக அளிக்கப்பட்டிருக்கிறது. வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல்லை இவர்கள் பெற்றார்கள். இந்தப் பெண்கள் இறந்தாலோ அல்லது வெளியூர்களுக்குச் சென்றுவிட்டாலோ உரிமையுள்ள இவர்களது குடும்பத்தார் நிலத்தின் பலன்களைப் பெறமுடியும்.

பரிசாரகர் பண்டாரி கணக்கர்

இந்த ஆலய ஊழியத்துக்காக பரிசாரகர், பண்டாரி, கணக்கர் போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி இங்கு 4 பண்டாரிகளும், 170 மாணிகளும், 6 கணக்கர்களும், 12 கீழ்கணக்கர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். சிலர் நிரந்தர ஊழியர்கள். மற்றையோர் பல்வேறு ஊர்களிலிருந்து சுழற்சி முறையில் கோயில் பணியில் இருப்பார்கள். கோயில் பண்டாரம் (stores) கருவறைப்பணி, கணக்குப்பணி இவற்றில் இருப்போர் கோயிலுக்குரிய பெரும் சொத்துக்களை பராமரிப்பவர்கள் என்பதால் இவர்களுக்குச் சொந்தமாக நிலம், பொருள், உறவினர் ஆகியவை இருத்தல் அவசியம். கருவூலத்தில் பொன், நவமணிகள், நெல் போன்ற விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பதால் இங்கு பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை இதனால் அறிய முடிகிறது.


காவலர்கள்

பெரிய கோயில் பண்டாரங்களில் விலை உயர்ந்த பொருட்கள் குவிக்கப்பட்டிருந்ததால், இவை அனைத்தும் சோழ மண்டல மக்களுக்குச் சொந்தம் இதில் எந்தவித தவறும் நடந்துவிடக்கூடாது என்பதால் மன்னன் இவைகளுக்குத் தகுந்த காவலர்களை நியமித்தான். சோழ மண்டலம் முழுவதிலும் 118 ஊர்களிலிருந்து மெய்க்காவலர்கள் நியமிக்கப் பெற்றனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

ஆலயத்திற்குக் கொடைகள்

இராஜராஜேச்சரத்தில் திருவிளக்குகள் ஏற்றுவதற்காக நெய் முதலானவை கிடைக்க ஆயிரக்கணக்கான ஆடுகள், பசுக்கள், எருமைகள் ஆகியன கொடுத்திருந்தான். ஒரு விளக்குக்கு நாள் ஒன்றுக்கு ஓர் உழக்கு நெய் அளிக்க வேண்டும். இதற்காக பணமாகவோ நிலமாகவோ அளிக்காமல் ஊருக்கும் பயன்படும் விதத்தில் கால்நடைகளையே அளித்திருந்தான். மன்னன் மட்டுமா? அவன் அமைச்சர்கள், அரண்மனைப் பெண்டிர், உயர் அதிகாரிகள் அனைவருமே இந்த கொடையில் பங்கு பெற்று கொடைகள் அளித்து மகிழ்ந்தனர். காசு ஒன்றுக்கு 2 ஆடும், காசு இரண்டுக்கு 1 பசுவும், காசு மூன்றுக்கு ஒரு எருமையும் விற்கப்பட்டதாகத் தெரிகிறது.

பல்வேறு இடங்களில் வாழ்ந்தவர்கள் இந்தக் கொடைகளை வாங்கிக்கொண்டு நாள்தோறும் உழக்கு நெய் அளிக்க ஒப்புக்கொண்டனர். அவன் எவ்வளவு கால்நடைகள் வைத்திருந்தாலும் அவன் கோயிலுக்குத் தரவேண்டியது ஒரு உழக்கு நெய்தான், மீதம் அவன் சொந்தத்துக்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான அவசியப் பண்டங்களின் விலைக் கட்டுப்பாடு

இன்றைய தேதியில் நாமெல்லாம் விலைவாசி உயர்வு பற்றி பேசிப்பேசி பலன் எதுவுமின்றி தவித்து வருகிறோமல்லவா? ஆனால் அன்று மாமன்னன் ராஜ்ராஜன் விலைவாசி உயராமல் இருக்கக் கடைப்பிடித்த ஒரு சிறிய வழக்கத்தைப் பார்க்கலாம். ஆலயத்தில் விநாயகருக்கு நாள்தோறும் வாழைப்பழம் நிவேதனம் செய்ய அறக்கட்டளை அமைத்திருந்தான். அப்படி விநாயகருக்கு தினந்தோறும் 150 வாழைப்பழம் வழங்குவதற்கு 360 காசுகளை முதலாகப் போட்டு ஆலயத்தின் பண்டாரத்தில் (Treasury) வைத்திருந்தான். இது என்ன வேடிக்கை? 300 காசுகள் முதல் போட்டு தினந்தோறும் 150 வாழைப்பழமா? ஆம்! ஒரு நாள் நிவேதனத்துக்கு 150 பழங்கள் தேவை என்றால் ஆண்டொன்றுக்கு (360x150=54000) பழங்கள். அன்றை வாழைப்பழ விலை ஒரு காசுக்கு 1200 பழங்கள். ஒரு வருடத்திற்கு வேண்டிய தொகை 45 காசுகள். இந்தத் தொகையை ஆண்டு வட்டியாகப் பெறும் மூலதனம் 360 காசுகள் என்பதிலிருந்து வட்டி விகிதம் 12.5% என்று தெரிகிறது. உள்ளூர் வணிகர்கள் வட்டிக்குப் பணம் வாங்கினார்கள். அந்த வட்டியைக் கணக்கிட்டே அரசன் 360 காசுகளை மூலதனமாகப் போட்டு தினந்தோறும் தேவையான வாழைப்பழங்களை நிவேதனத்துக்குப் பெற்றான் என்பதிலிருந்து, மன்னனுடைய பொருளாதார அறிவையும், விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கும் வழிகளையும் தெரிந்திருந்தான் என்பது புரிகிறது. மன்னனுடைய இந்த ஏற்பாட்டின்படி மூலதனம் அப்படியே இருக்கும், ஆண்டு வட்டி வருமானத்தை மட்டும் செலவுக்கு எடுத்துக் கொள்வார்கள். அப்படி வட்டிக்கு பண்டாரத்திலிருந்து பணம் வாங்கிக்கொள்ள வர்த்தகர்கள் முன்வந்தார்கள்.

வாழைப்பழ எடுத்துக்காட்டினைப் பார்த்தோம். அதுபோலவே செண்பக மொட்டு, இலாமிச்சம், பருப்பு, மிளகு, சீரகம், சர்க்கரை, நெய், புளி, தயிர், கொள்ளு, உப்பு, வாழையிலை, வெற்றிலை, பாக்கு, சிதாரி, கற்பூரம், விறகு, பழைய அரிசி ஆகிய பொருட்களின் விலைகளும் கால்நடைகளின் விலைகளும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன என்பதை தஞ்சை கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

கல்வெட்டில் செதுக்கப்பட்ட மன்னன் அளித்த நிவந்தங்கள்

தஞ்சை இராஜராஜேச்சரத்தில் உள்ள இராஜராஜ சோழனின் முதல் கல்வெட்டு கூறும் செய்தி இது:- "நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டு இருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர் ஆடவல்லான் என்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்சேய் முக்காலே மூன்று மஞ்சாடி நாளதினாலேயே டுத்த பொன்னின் பத்மாஸன ஸ்ரீபலி தலம் ஒன்று மேற்படி கல்லால் நிறை தொள்ளாயிரத்து தொன்னூற்றைய்ங் கழஞ்சரையே நாலுமஞ்சாடி".

மன்னன் ராஜராஜன் இத்திருக்கோயிலுக்கு அளித்த ஆயிரக்கணக்கான பொருட்கள் வரிசையில் முதலில் குறிப்பிடப் பெற்றவை 829 கழஞ்சு எடையில் செய்யப்பெற்ற ஸ்ரீபலி எழுந்தருளும் தேவர் பொன் திருமேனியும் 995 கழஞ்சு எடையில் செய்யப்பெற்ற பொன்னாலான பத்மத்துடன் கூடிய ஸ்ரீபலிபீடம் என்பதையும் அறியமுடிகிறது.

இங்கு "ஸ்ரீபலி" என்று குறிப்பிடப்படும் சொல்லுக்கு "அர்ப்பணித்தல்" என்று பொருள். மாமன்னன் காலத்தில் இந்தக் கோயிலில் தினமும் வாத்திய இசையோடு கூடிய நாட்டியம் எனும் ஆடற்கலையும் ஈசனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது எனும் செய்தி இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட வாத்தியக் கருவிகள்

ஸ்ரீராஜராஜீச்சரத்தில் பல வாத்தியக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. குழல், உடுக்கை, இலைத்தாளம், கொட்டி மத்தளம், கின்னரம், பறை, மெராவியம், வங்கியம், பாடவியம், வீணை, முத்திரைச்சங்கு, சகடை ஆகியவை இவை. இவற்றில் மெராவியம் என்பது நாகசுரம் போன்ற ஒரு குழல் இசைக்கருவியாக இருக்கலாம் என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. பாடவியம் என்பதோர் மற்றொரு இசைக்கருவி. இது பற்றி ராஜராஜன் கல்வெட்டுகளில் காணப்படும் செய்தி.

"திருவிடைமருதுடையார் கோயிலில் பாடவியத்திற்கு முன்பு நிவந்தமில்லாமையில் அத்தேவர்க்கு பாடவியம் வாசிக்க நித்த நெல்லு இருதூணியாக அரையன் திருவிடைமருதூருடையானான மும்முடிச்சோழ நிருத்தப் பேரரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் காணியாகக் குடுத்தோம்..."

"திருமுகப்படியே திருவிடைமருதூருடையார் கோயிலில் பாடவியக் காணியுடையார் ஸ்ரீராஜராஜதேவர் பெருந்தனத்து காந்தப்பரில் அரையன் திருவிடைமருதுடையானான மும்முடிச்சோழ நித்தப் பேரரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் காணியாகக் குடுத்த இப்பாடவியம் வாசிப்பானுக்கு நித்தம் நெல்லு இருதூணியாக ஒராட்டைக்கு நெல்லு இருநூற்று நாற்பதின் கலம்..." என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீவிமானம் பொன்வேய்ந்தது

இராஜராஜன் திருவாயிலிலுள்ள ஒரு சிதைந்த கல்வெட்டின்படி இராஜராஜேச்சரத்துக்கு மன்னன் விமானம் முழுவதும் பொன் வேய்ந்தான் என்று தெரிகிறது. இதுதவிர மன்னனின் தமக்கையார் குந்தவை நாச்சியார் (அக்கன் என்று குறிப்பிடப்படுபவர்) பட்டத்தரசி ஓலோகமகாதேவியார், மற்றொரு மனைவியான சோழமகாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கியமகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, இலாடமாதேவி ஆகியோரும் கொடைகள் அளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே மன்னனுடைய தேவிகளாவர்.

நாயக்க மன்னர்கள் ஆட்சியில் பெரிய கோயில்

தஞ்சையை செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாதநாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய அரசர்கள் கி.பி.1535 முதல் 1675 வரை ஆண்டுகொண்டிருந்தார்கள். இவர்கள் காலத்தில் ஆலயத் திருப்பணிகளும், ஆலயங்கள் பராமரிப்பும் மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. ஆலயங்களில் இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கவின் கலைகள் வளர்ச்சி பெற்றன. குறிப்பாக ஆந்திரப் பகுதியிலிருந்து இங்கு வந்த புதிய கலையான பாகவத மேளா எனும் இசைநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றன. சோழ மன்னர்கள் விட்டுச்சென்ற இசைப் பாரம்பரியத்தோடு, வளமும் புதுமையுமான நாயக்க மன்னர்களின் இசை மரபுகளும் சேர்ந்து கொண்டன. தஞ்சை கலைகளின் இருப்பிடமாக மாறியது. இவர்கள் காலத்தில்தான் ஆலயத்திலிருந்த மகாநந்தி புதிதாக அமைக்கப்பட்டது, சோழர்களின் நந்தி இப்போது வராகி அம்மன் கோயிலுக்கருகில் இருக்கிறது. பிரகாரத்தில் சுப்பிரமணிய சுவாமிக்குப் புதிய கோயில் கட்டப்பட்டது.

ஆலயத்தில் மூர்த்திஅம்மன் மண்டபம், மல்லப்ப நாயக்கர் மண்டபம் ஆகியவை நிருவப்பட்டன. செவ்வப்ப நாயக்கரும் அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இந்நகரின் பொற்கொல்லர்களுக்கு சில உரிமைகளை வழங்கினர்.

மராட்டியர் ஆட்சி காலத்தில்

கி.பி. 1675 தொடங்கி 1850 வரையில் தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஏகோஜி, சஹாஜி, முதலாம் சரபோஜி, துளஜேந்திரராஜா, பாவாசாகிப், சுஜான்பாயி, பிரதாபசிம்ம ராஜா, இரண்டாம் துளஜா, அமரசிம்மன், இரண்டாம் சரபோஜி, சிவாஜி, காமாட்சிபாயி ஆகியோர் ஆண்டு வந்தார்கள். இவர்கள் காலத்தில் ஆலயத்தின் பல பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. கலைகள் ஏற்றம் பெற்றன. சிற்ப, சித்திர, நாட்டிய, இசை போன்ற கலைகள் வளர்ச்சியடைந்தன.

இரண்டாம் சரபோஜி காலத்தில் திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. சரபோஜியின் போஸ்லே வம்ச வரலாறு கல்வெட்டில் வெட்டப்பட்டது. 1729ல் குடமுழுக்கு நடைபெற்றது. விமான உச்சியில் அப்போது ஒரு புதிய கலசம் வைக்கப்பட்டது. அதில் 'ராசா சரபோசி மகாராசா உபையம்' என்று எழுதப்பட்டிருந்தது. கடைசி மராட்டிய மன்னனான சிவாஜி காலத்தில் 7-9-1843ல் மற்றொரு குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது. 1798 முதல் 1832 வரை தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி பல அறப்பணிகள் செய்தான். இவன் காலத்தில் பிரகாரத்துக்குக் கல் தளம் அமைக்கப்பட்டது. வடகிழக்கிலுள்ள மண்டூக தீர்த்தக் கிணறு புதுப்பிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் ஒரு கணபதி ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவிலும்

பிரிட்டிஷ் ஆட்சியில் இவ்வாலயம் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. யுத்த காலத்தில் சிப்பாய்களும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது விமானப்படை தாக்குதலை சமாளிக்க நிறுவப்பட்ட ஒரு படையும் இவ்வாலயத்தினுள் முகாமிட்டிருந்தனர். சுதந்திர இந்தியாவில்கூட பல ஆண்டுகள் இவ்வாலயத்துக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தன. இது தொல்பொருள் இலாகா வசம் இருப்பதால் அவர்கள் இதனை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்துபோகவும் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு மக்கள் சிறிது சிறிதாக இவ்வாலயத்தின் பெருமை கருதி வரத் தொடங்கினர். சுற்றுலாப் பயணிகளுக்கும் இது ஒரு முக்கிய இடமாகக் குறிக்கப்பட்டது. ஒரு காலகட்டத்தில் இவ்வாலய அர்ச்சகர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட திணறியது நிர்வாகம். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இங்கு சுற்றுலா கூட்டமும், உள்ளூர் கூட்டமும் அலைமோதுகிறது. தென்னக பண்பாட்டு மையம் தங்கள் கலை நிகழ்ச்சிகளையும், நாட்டியம், இசை போன்றவற்றை இவ்வாலயத்தின் நந்தி மண்டபம் அருகே நடத்துகின்றனர். ஆலயம் புத்துயிர்பெற்று பழம்பெருமையை மீண்டும் பெறுவதற்கான வெற்றிப் பயணத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பெருமையை ஒரு முறையாவது நேரில் வந்து பார்ப்பவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும். காலங்கள் மாறினாலும், மன்னன் வாழ்ந்த அரண்மனை, நகரம் இவை அழிந்து போனாலும், அவன் எழுப்பிய இந்த வானுயர இராஜராஜேச்சரம் காலம் காலத்துக்கும் நிலைத்து நின்று, மன்னன் ராஜராஜனின் புகழை உயர்த்திப் பிடிக்கும்.

நன்றி: முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம், "தஞ்சாவூர்" "இராஜராஜேச்சரம்"
ஆகிய நூல்களின் ஆசிரியர்.

தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்