பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 31, 2015

89. சமூகம் - மிருகங்களும் பக்ஷிகளும்


 ''கொல்லா விரதம் குவலய மெல்லாமோங்கி                                                        எல்லார்க்கும் சொல்வதென் இச்சை பராபரமே''         - தாயுமானவர்.
                                                                  
             லெள‌கிக விஷயங்களில் மஹா நிபுணரும், சிறந்த "வேதாந்தப் பயிற்சியுடைய வருமாகிய என் நண்பரொருவர் (அவருக்கு 'கோபால பிள்ளை' என்ற புனை பெயர் சூட்டுகிறேன்) இன்று பகல் நேரத்தில் என்னிடம் வந்து சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்.

            அவர் என்னிடம் சொன்னார்:- 'நீங்கள் பத்திரிகைக்கு விஷயங்கள் எழுதுவதில், எந்த வகுப்பினருக்கும் மனவருத்தம் நேரிடாதபடியாக எழுதுவதே நன்று. 'இன்சொலால் அன்றி இரு நீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே.' பிறருக்குக் கோபம் ஏற்படாத வகையில் எவ்வளவோ எழுத இடமிருக்கிறது. உலகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்பதும், உலகத்தாருக்கு உங்களால் இயன்றவரை நன்மை செய்யவேண்டு மென்பதுமே, நீங்கள் பத்திரிக்கைக்கு வியாசங்கள் எழுதுவதின் நோக்கம். அந்த நோக்கம் விரைவில் நிறைவேற வேண்டுமானால், நம்முடைய கொள்கைகளைச் சிறிதேனும் கோபமில்லாமலும், ஆத்திரப்படாமலும், பிறர் யாவரேயாயினும் அவர் மனம் சிறிதேனும் நோவாமலும், முற்றிலும் இன் சொற்களால் எழுதுவதே சிறந்த வழியாகும்' என்றார்.

             இது கேட்டு நான்:- 'மிகவும் நன்றாகச் சொன்னீர்கள். இதுவே என் சொந்த அபிப்பிராயமும். ஆனாலும், ஸ்திரீகளின் நிலைமை, கீழ்ச் சாதியாரின் நிலைமை, ஏழைகளின் நிலைமை, மிருக பக்ஷிகளின் நிலைமை-இவற்றைக் குறித்து எழுதும்போது, மேற்படி மாதர் முதலான எளிய வகுப்பினருக்குச் சிறிதேனும் ஈரம் இரக்க மின்றிக் கொடுமைகள் செய்யும் மக்களின் மீது சில சமயங்களில் என்னையும் மீறி எனக்குக் கோபம் பிறந்து விடுகிறது. ஆனால், இந்தக் கோபத்தையும் கூடிய சீக்கிரத்தில் முயற்சி பண்ணி அடக்கி விடுகிறேன். நீங்கள் சொன்ன விதியையே எப்போதும் பரிபூரணமாக அனுஷ்டிக்க முயலுகின்றேன். ஏனென்றால், கோபச் சொற்கள் நமது நோக்கத்தின் நிறைவேறுதலுக்கே, நீங்கள் குறிப்பிட்டவாறு, தடையாகி முறிகின்றன. ஆடு மாடு தின்போரை நாம் வாய்க்கு வந்தபடி வைதால், அதனின்றும் அவர்களுக்கு நம்மீது கோபம் அதிகப்படுமே யொழிய, அவர்கள் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்த வழியுண்டாகாது. தக்க நியாயங்கள் காட்டுவதும் அவர்களுடைய காருண்யத்தை நாம் கெஞ்சுவதுமே மனிதர் நாம் சொல்லும் கக்ஷியை அங்கீகரிக்கும்படி செய்யும் உபாயங்களாம்' என்றேன்.

               அப்போது என் நண்பர்:- ''மிருகங்களைக் கொன்று தின்னும் அநியாயத்தை நினைக்கும் போது,எனக்கும் அடக்கமுடியாத வயிற்றெரிச்சல் உண்டாகத்தான் செய்கிறது. அவற்றை வெட்டும் போது, நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா?ஆட்டை வெட்டப்போகும் ஸமயத்தில், அது தலையை அங்குமிங்கும் அசைத்து விட்டால் வெட்டுசரியாக விழாதென்பதை உத்தேசித்து, அதன்வாய்க் கெதிரே பச்சைக் குழையைக் காட்டுகின்றார்கள். அதுகுழையைத் தின்பதற்காக முகத்தை நேரே நீட்டும்சமயத்தில் திடீரென்று ஒரே வெட்டு வெட்டி அதன் தலையைத் துண்டித்து விடுகிறார்கள். அங்ஙனம் வெட்டும்போது பார்த்தால் வெட்டுவோனிடம் நமக்கு மிகுந்த குரோதம் உண்டாகத் தான் செய்கிறது. அவனை க்ஷமிப்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது.  இத்தனை சுலபமாக ஒரு ஆட்டை வெட்டிக் கொன்று தீர்த்து விடுகிறார்கள். ஒரு ஆட்டிற்கு உயிர் அளிக்க இவர்களால் முடியுமா?

'சில தினங்களுக்கு முன்பு, சங்கரநயினார்கோயிலுக் கருகே ஒரு கிராமத்திற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு மாடன் கோயிலில் பெரிய ஜனத்திரள் கூடிபூஜை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த மாடசாமி யார் தெரியுமா? அந்த கிராமத்தில் பல வருஷங்களின் முன்னே ஒரு மறவன் இருந்தானாம். அவன் கொலை, களவு முதலிய செயல்களில் மிகுந்த வீரனாகவும் ஏழை எளியோர் மீது மாத்திரம் கிருபை யுடையவனாகவும் இருந்தானாம். அவன் செத்த பின், அவனை அந்த இடத்தில் ஸமாதி வைத்து, அந்த ஸமாதியில் ஓர்கோயில் கட்டி அந்த மறவனையே மாடசாமியாகச் செய்து, அந்தப் பக்கத்துக் கிராமத்தார் கும்பிட்டு வருகிறார்கள். அந்தக் கோயிலில் வேடிக்கை பார்க்கும் பொருட்டாக நான் சில சிநேகிதர்களுடன் போயிருந்தேன் அங்கே இருநூறு, முந்நூறு கழு மரங்கள் நாட்டி அவற்றில் ஆடுகளைக் கோத்து வைத்திருக்கிறார்கள்.அந்த ஆடுகள் கழு மரங்களில் குற்றுயிராகத் துடித்துக் கொண்டிருக்கையிலே நான் பார்க்கவில்லை. அப்போது பார்த்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ, அறியேன். அவை செத்துப் போய் இரத்தமும் நிணமும்ஒழுகிக் கொண்டிருக்கையிலே நான் பார்த்தேன். அந்தக்காட்சியை நினைக்கும் போது, இப்போதும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. ஆஹா! என்ன கொடும்பாவம்! என்ன மஹாபாதகம்!' என்று கூறி, என் நண்பராகிய கோபால பிள்ளை மிகவும் பரிதாபப்பட்டார்.

            அப்போது நான் சொன்னேன்:- ''சில தினங்களின் முன்பு பாரஸீகத்தின் பொம்மை ராஜாவாகிய ஷா சக்கரவர்த்தி பாக்தாது நகரத்திற்குத் திரும்பி வந்தாராம். அதாவது, அவர் ஐரோப்பாவில் சுற்றுப்பிரயாணம் பண்ணி விட்டுத் தம் தேசத்திற்கு வருகையிலே பாக்தாது நகரத்திற்கு விஜயம் பண்ணினாராம். அப்போது, அவருடைய வரவை அலங்கரிக்கும் பொருட்டாக பாக்தாது நகரத்தில் 80 ஆடோ 100 ஆடோ வெட்டப்பட்டதாக சுதேசமித்திரன் பத்திரிகையில் தந்தி சமாசாரம் வந்திருந்தது. அதைப் படித்தபோது என் வயிற்றில் நெருப்புப் பந்தம் விழுந்தது போலிருந்தது. ஆனால், நமது தேசத்து சில்லரைத் தெய்வங்களின் கோயில்களிலே பூஜை தோறும், சில இடங்களில் 1,000 ஆடு 10,000 ஆடு வீதம்கூட வெட்டப்படுவதை நினைக்கும்போது எனக்கு அடக்க முடியாத கோபமுண்டாகிறது.

 திருநெல்வேலிக்கருகே ''குரங்கிணி யம்மன்'' கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. அங்கு வருஷோத்ஸவ காலங்களில் கணக்கில்லாத ஆடுகள் வெட்டப்படும் என்று கேள்விப்படுகிறேன்.

 இதே மாதிரி சென்னைப் பட்டணத்திற் கருகேஒரு கிராமத்தில் ஒரு அம்மன் கோயில் இருக்கிறது. இன்னும் நாடு முழுமையிலும் இம்மாதிரியான கோயில்கள் எத்தனையோ இருக்கின்றன. இவற்றில் நடக்கும் கொலைகளைத் தடுக்கும்படி அந்தக் கோயில் தர்மகர்த்தாக்களையும் பொது ஜனத் தலைவர்களையும் காலில் விழுந்து கேட்டுக் கொள்வதாகப் பத்திரிகைக்குஎழுதப் போகிறேன். ''கோபச்சொற்கள் சொல்வதிலும் வைவதிலும் கார்யம் இல்லை'' என்று நீங்கள் சொல்லுகிறீர்களே, நாம் என்ன செய்வோம்?' என்றேன்.

இங்ஙனம் நெடுநேரம் ஜீவநாசத்தின் அநியாயத்தையும் அதனால் மனிதருக் குண்டாகும் எண்ணற்ற பாவங்களையும் அவற்றால் உண்டாகும் நோய் சாவுகளையும் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த சம்பாஷணை முழுவதையும் இங்கு எழுத இடமில்லை. எனினும், நான் கோபால பிள்ளையிடம் வாக்குக் கொடுத்தபடியே இங்கு வேண்டுதல் செய்கிறேன். 

'தமிழ் நாட்டு ஜனத்தலைவர்களே, உங்கள் காலில் வீழ்ந்து கோடிதரம் நமஸ்காரம் செய்கிறேன். மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்துவதற்கு வழி செய்யுங்கள்.' 


88. சமூகம் - மிருகங்களைச் சீர்திருத்தல்


              மனிதனைச் சீர்திருத்த லக்ஷத்தொன்று உபாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மிருகங்களைச் சீர்திருத்த நாம் முயற்சி செய்யவில்லை.

             கோயில், குளம், அரண்மனை, நீதிஸ்தலம், வீடு, மன்று முதலிய எண்ணற்ற விதங்களால் மனிதர் தம்மைத்தாமே சீர்திருத்திக் கொள்ள முயல்கின்றார்கள். பள்ளிக்கூடமே உபாயம் என்றும் ஸகல மனுஷ்யருக்கும், எழுத்துப் படிப்புச் சொல்லித் தீரவேண்டும் என்றும் ஐரோப்பியக் கல்விநிபுணர்கள் ஸித்தாந்தம் பண்ணுகிறார்கள். இது நிற்க மிருகங்களையோ, முதலாவது தின்கிறோம். ஆடு, மாடு, கோழி, காடை, கவுதாரி, புறா, குயில், குருவி, வாத்து, பன்றி, மான் முதலிய பல ஜந்துக்களை உயிரோடு வெட்டித் தின்கிறோம்; வேட்டையாடுகிறோம். யானை முதல் முயல் வரை பலஜந்துக்களை, புலி, கரடி, சிங்கங்களை துஷ்டமிருகங்கள் என்றும், ஊரும் பாம்பு தேள் முதலியவைகளை துஷ்ட ஜந்துக்கள் என்றும் நாம் சொல்லுகிறோம். ஏன்? அவைநம்மைக் கொல்வதனாலே.

           எத்தனையோ ஜந்துக்களை நாம் கொல்லுகிறோம். நமக்கு மிருக பாஷைகளில் என்ன பெயரோ? துஷ்ட மனிதன் என்ற பெயரிருக்கலாம். பசுக்களையும் மாடுகளையும் நாம் வதைக்கிறோம். நமக்கு வதைப்பதில் எத்தனை ஸ்வதந்திரமோ அவ்வளவு ஸ்வதந்திரம் அவற்றிற்கும் உண்டு. நீ மிருகத்தைவிட அதிக புத்திசாலியென்று நினைத்தால் அதைச் சீர்திருத்து. அப்படியே, சீமையில் சில குரங்குகளைச் சில ஸர்க்கஸ் கம்பெனியார் கால் சட்டை, கோட், தொப்பி, கண்ணாடி, பூட்ஸ் வகையறா மாட்டி, சாராயம் கொடுத்து, ஸிகரெட்டுப் பிடிக்கச் சொல்லி, உடுப்பு மாட்டி, உடுப்புக்கழற்றி, மேஜையிற் தீனி தின்று, அமளிப் படுத்தும்படி கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைக் காட்டி காசு வாங்கி மனிதன் பிழைத்திருக்கிறான்.

            இரக்கத்தைக் காணோம். அவை பரஸ்பரம் ஹிம்சை இல்லாமல் எல்லாம் எல்லாவற்றின் ஹிதார்த்தமாக வாழ்விக்க உபாயம் உண்டாக்கலாம். நமது முன்னோர் பசுவை மாதா என்று சொல்லி வணங்கினார்கள். நாம் அவர்களை(ஈக்வாலிடி) ஸமத்வம், (லிபர்டி) விடுதலை, (ப்ரெடெர்னிடி),உடன்பிறப்பு தெரியாத மூடர்கள் என்று சொல்லி மேற்படிபசுக்களைக் கறி சமைத்துத் தின்ன இச்சிக்கிறோம். அதன்பாலை ஊட்டி நம்முடைய குழந்தைகளை வளர்த்தோம்.ஏன்? நினைப்பில்லாமல்.

போடா!

வெள்ளைக்காரன் சொன்னான்; ''யோக்கியதை உத்தமமார்க்கம்''; நியாயமான வார்த்தை.

மாட்டை நாம் தாய் போலவே நினைப்பது யோக்யதையா? கறி சமைத்துத் தின்பது யோக்யதையா? குயில் பாடுகிறது. கந்தருவர் கேட்டுத் தலை அசைக்கிறார்கள். நீ ஏன் அம்பு போட்டு அதைக் கொல்லுகிறாய்?

மிருங்களுக்குப் பள்ளிக்கூடம் போட்டுஅவற்றிற்கு நல்ல வழி காண்பித்து அவற்றைச் சீர்திருத்துதல் மிகவும் அவசியம். ஆனால் ஹிந்துக்கள் அத்தனை பேருக்குமே இன்னும் பள்ளிக்கூடம் போடவில்லையே? ஹிந்துக்களில் நூற்றுக்குப் பதினொருவர் மாத்திரமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்று கேள்விப்பட்ட ஞாபகமிருக்கிறதே. அப்படியிருக்க, அதற்கு முன்பு, மிருகங்களுக்குப் பள்ளிக் கூடம் போட முற்படலாமோ என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். அங்ஙனம் கூறலாகாது.

ஏனென்றால், நம்முடைய கடமையை நாம் செய்ய வேண்டும். நாம் கூடுமானால், ஹிந்துக்களுக்கும் பள்ளிக்கூடம் போடுவோம். அவர்கள் சரிப்பட்டு வரவில்லையானால் மிருகங்களுக்குப் பள்ளிக்கூடம் போட்டு அவைகளைச் சீர்திருத்தும் போது, அதை ஹிந்துக்களும் மற்ற ஜாதியாரும் கண்டு பயனடையக் கூடும்.

தன்னைத்தானே திருத்திக் கொள்ளாதவன் பிற ஜந்துக்களைத் திருத்த அதிகாரம் பெற மாட்டான். தன்னைத்தானே திருத்திக் கொள்வதே பிரதானம். தன்னைத் திருத்தி அமரனாகச் செய்துகொள்க. அதுவே ஒருவன் செய்யவேண்டிய தலைமைத் தொழில்.


87. சமூகம் - நானா விஷயங்கள்


                                         மிருகங்களை நாகரீகப் படுத்தும் வழி

              "ஸர்க்கஸ்" கம்பெனிகளிலே புலி, சிங்கம், யானை, கரடி முதலியவைகளைப் பூனைக்குட்டிகள் போலே பழக்கி வைத்து விடுகிறார்கள். "கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்; கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்; ஒரு சிங்க முதுகின் மேல் கொள்ளலாம்; கட்செவி* (*பாம்பு) யெடுத்தாட்டலாம்" என்று தாயுமானவரும் சொல்லியிருக்கிறார். மனுஷ்ய சரித்திரம் எழுதப்படத் தொடங்கிய காலத்திற்கு முன்னே, மனிதருக்கிடையே எழுத்துத் தொழில் பழக்கப்படத் தொடங்கிய காலத்திற்கும் வெகு காலத்திற்கு முன்னரே, மனிதர் மற்ற மிருகங்களுடன் போராடிப் போராடி, வென்று வென்று, தம் மேன்மையை நிலைநிறுத்திக் கொண்டு விட்டனர். காட்டில் மனிதன் கிழங்குகள் பறித்துண்ணப் போனவிடத்தில் தனியாகவும், மற்ற மனிதருடனும், தனிப்பட்ட அல்லது கூட்டமாக வந்து நின்ற காட்டுப் பன்றிகளுடன் போராடி அவற்றைச் சில சமயங்களில் வென்றும், சில சமயங்களில் அவற்றாலே கொல்லப்பட்டு மடிந்தும் வந்து கொண்டிருந்தான்.

            கடைசியாகக் காட்டுப்பன்றிக் குலம் தோல்வியை அங்கீகரித்துக் கொண்டது. இங்ஙனமே, கணக்கற்ற, கணக்கற்ற, கணக்கற்ற துஷ்ட மிருகங்களுடனும் பாம்புகளுடனும் போராடிப்போராடி, மண்ணுலகத்தின் மீது, மனிதனேஅரசனாகவும் மற்றைய ஐந்துக்க ளெல்லாம் இங்கு வாழ்வதற்கு இயற்கை உரிமை இல்லாத (அதாவது,''மனிதக் கூட்டத்தார் இஷ்டப்பட்டு உயிர் தரித்திருக்க இடங்கொடுத்தால் உயிர் வாழலாம்; இல்லாவிட்டால் ஜீவித்திருக்கும் பாத்யதை அவற்றுக்கில்லை  யென்று மஹா நீசத் தண்டனை மனித ஜாதியால் விதிக்கப்பெற்ற) அடிமைக் குடிகளாகவும் ஏற்படும் நிலைமை யுண்டாயிற்று. இவற்றுள்ளே மனிதனைக் கொல்லக்கூடிய வலிமை படைத்தன சில குலங்கள். மனிதனாற் கொல்லப்படத்தக்க மனிதனைக் காட்டிலும் பலம் குறைந்த ஐந்துக் குலங்கள் கணக்கற்றன. கணக்கற்றன, கணக்கற்றன, பல பல, பற்பல, பல பல, பல பல.

            இத்தனை ஜந்துக்களையும் மனிதன் தந்திரத்தால் அடிமைப்படுத்தி விட்டான். தீயின் பலத்தால் மனிதன் மிருகங்களை ஜயித்தான். கை பலத்தால் ஆட்டைக்கொன்றான். வில்லின் பலத்தால் புலியைக் கொன்றான். தீயின் பலத்தால் யானையையும் சிங்கத்தையும் வென்றான். முன்னொரு காலத்தில் சிங்கக் குலத்துக்கும் மனிதக் குலத்துக்கும் கொடிய போராட்டம் நிகழ்ந்தது. சிங்கக்குலம் தோற்றுவிட்டது. சிங்கத்தின் புஜபலத்தையும் வீரத் தன்மையையும் மனிதன் தீயின் சக்தியால் வென்றான். இயற்கை தன் ரஹஸ்ய சக்திகளில் ஒன்றை மனிதனுடைய தந்திரத்திற்கு வெளிப்படுத்திற்று. இத்தனை கோடி, கோடி,கோடி, மிருகங்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் சேர்ந்து, பூமண்டலத்தில் ஜீவலோகம் உற்பத்தியான கோடானு கோடி வருடங்களுக்கு முன்பு முதல் இன்றுவரை, தீ கண்டுபிடிக்கும் தந்திரம் தெரியாமற் போய்விட்டது.

               இரண்டு சிக்கிமுக்கிக் கல்-துண்டுகளை ஒன்றுக் கொன்று தட்டினால் தீயுண்டாக்கி விடலாம். இத்தனை கோடானுகோடி அடிமை ஜந்துக்களுக்கும் இன்று வரை இந்த சாதாரண யுக்தி புலப்படாமல் போனது வியப்புக்குரிய செய்தி யன்றோ? இதுபற்றியே, முற்கால ரிஷிகள் தீயை முதற் கடவுளாகப் போற்றினர் போலும். மனிதனுக்கு இங்ஙனம் கிடைத்த வெற்றியையும் பூமண்டலாதிக்கத்தையும் அவன் நியாயமான வழியில் உபயோகப் படுத்தவில்லை. குடிகளைப் பட்டினி போட்டுவிட்டு தான் தீர்வை கறந்து வாங்கித் தன் வயிற்றில்அஜீரணமுறப் புதைக்கும் கொடுங் கோலரசனைப் போல், தன் குடிகளாகிய மிருக பக்ஷி கீடங்களில் பலவற்றைத் தின்று பிழைக்கும் ஈன வழக்கத்தைக்கைக் கொண்டிருக் கிறான். மனிதன் செய்யும் அநியாயங்களில் மாம்ஸ போஜனமே மிகவும் இழிவான அநியாயமென்று என் புத்திக்கு நிச்சயமாகப் புலப்பட்டிருக்கிறது.

மனிதன் செய்யக்கூடிய பாபங்கள் அனைத்திலும்இதுவே மிகக் கொடிய பாபம் என்று என் புத்திக்கு ஐயந்திரிபற விளங்கியிருக்கிறது.

மிருகங்களை நமக்கு ஸகாக்களாக வைத்துக்கொண்டால், அவற்றால் எண்ணிறந்த பயன்கள் எய்தலாம். அவற்றை நாம் அடிமைகள் ஆக்கிவிட்டோம். ஒரு ராஜாதன் குடிகளை அடிமைகள் போலே நடத்துகிறான். அவர்களுக்கு நல்ல சோறு கிடைக்காமல் இருக்கும் போது தீர்வையை உறிஞ்சுகிறான். அவர்களுக்கு ஸ்வதந்திரம் கொடுக்கவில்லை. நாகரீகம் கொடுக்க விரும்பவில்லை. மற்றொரு ராஜா தன் குடிகளைத் தனக்கு ஸமானமான அந்தஸ்துடையவர்களாக மதிக்கிறான். கொஞ்சமாகத் தீர்வையை வாங்கிக் கொண்டு, குடிகளுக்கு சோற்றுப் பயமில்லாமலும் பஞ்ச மரணங்கள் இல்லாமலும் காப்பாற்றுகிறான். அவர்களுக்கு எல்லாவித மனுஷ்ய ஸ்வதந்திரங்களும் ஜீவாதார உரிமைகளும் கொடுத்து மேன்மைப்படுத்துகிறான். கல்வி, காட்சி முதலிய பல்வகை பயிற்சிகளாலும் அவர்களை எல்லா விதங்களிலும் எப்போதும் நாகரீகப்படுத்த விரும்புகிறான்.

முதற்சொன்ன ராஜாவுக்கு ஏதேனும் ஆபத்துக் காலம் நேரிட்டால், அப்போது அவனுடைய குடிகள் எல்லா விதத்திலும் பயன்பட மாட்டார்கள். அந்த ஆபத்தை ஸகல விதங்களிலும் மிகுதிப் படுத்த முயற்சி செய்வார்கள். இரண்டாவதிற் சொன்ன ராஜா, தன் குடிகளை நடத்தும் நேர்மையினாலேயே மிகவும் பயன் பொருந்தியவனாய், எவ்வித ஆபத்திற்கும் உட்படாமலே நல் வாழ்வு வாழ்ந்திருப்பான்.

            மனிதன், மிருகங்களாகிய தன் தோலிவியுற்ற குடிகளின் விஷயத்தில், இரண்டாவது சொன்ன ராஜாவைப் போல் நடந்து கொள்ளாமற் முதற் சொன்ன ராஜாவைப்போல் நடந்து கொண்டு வருகிறான். மிருகங்களும் பரஸ்பரம் தின்னுகின்றன என்பதைச் சில மனிதர் தாம் செய்யும் மாம்ஸ போஜனத்திற்கு ஆதாரமாகச் சொல்கிறார்கள். "யதா ராஜா, ததா பிரஜா". அரசன் எப்படியோ, அப்படியே குடிகளும் அரசனே குடிகளைத் தின்றால், குடிகள் தம்மால் இயன்றவரை கொன்று தின்னாமல் விடுவார்களா?

            மிருகங்கள் ஸர்க்கஸ் கம்பெனியில் பழக்கப்பட்டு வரும் மாதிரியைப் பார்த்தால், அவற்றின் உதவியைக் கொண்டு நாம் எத்தனையோ புதிய புதிய வழிகளில் காரிய ஸாதனை செய்து கொள்ள வழிகள் கண்டுபிடிக்கலாம் என்பது விளங்குகிறது.

            அவற்றைத் துணைவர்போல நடத்தி மிகவும் வலிய வாழ்வு வாழ்வீர்களா அன்றி, அவற்றை அடிமைகளாக நடத்தி வருத்துவீர்களா? மனிதர்களே, உங்களுக்கு எந்த வழி ஸம்மதம்?

            உண்மையாக, அவற்றை நாகரிகப்படுத்தி அவற்றால் வாழ்வைப் பல துறைகளிலும் அதிகப் பயன்படச் செய்ய விரும்புவீர்களேயானால், அதற்கு ஓர் மார்க்கம் தான் இருக்கிறது. அதாவது அன்பு.


Saturday, May 30, 2015

86. சமூகம் - குரு


                                                                  
              இக்காலத்தில், பிராமணர் தமக்கு சாஸ்திரங்களிற் சொல்லப்பட்ட ஆறு தொழில்களை மறந்து பெரும்பாலும் வேறு தொழில் செய்து வருகிறார்கள். இருந்தாலும், ஐரோப்பா முதலிய இதர தேசத்துக் குருக்களைக் காட்டிலும், நமது தேசத்துப் பிராமணர்கள் சிறந்தவர்கள் என்று ''அமிர்தபஜார்'' பத்திரிகை சொல்லுகிறது. ''புரோஹிதத் தொழிலும் சாஸ்திரப் படிப்பும் விடாமலிருக்கும் பிராமணர் இப்போது கூடப் பல இடங்களில் விசாலப் பயிற்சியும், அதனால் உண்டாகும் பெருமைகளும் இல்லாதிருந்த போதிலும், நல்லொழுக்கம் வைதீக புத்தி முதலியவற்றில் பிறதேசத்து குருக்களிலும் மேல்'' என்பது அந்தப் பத்திரிகையின் கொள்கை. இது சம்பந்தமாக எழுதி வருகையில், மேற்படி பத்திரிகை பின்வரும் கதையைச் சொல்லுகிறது.

            ஐம்பதறுபது வருஷங்களுக்கு முன்பு நவத்வீபத்தில் ராமநாதர் என்ற தர்க்க சாஸ்திரி இருந்தார். மேற்படி ராமநாத சாஸ்திரியிடம் கிருஷ்ண நகரத்து மஹாராஜா பூதானம் வாங்கிக் கொள்ளும்படி வேண்டினார். அதற்கு சாஸ்திரி சொன்னாராம்:- என் குடும்ப ஸம்ரக்ஷணைக்கு வேண்டிய தானியம்என்னுடைய கழனியிலிருந்து வருகிறது. கொல்லைப் புளிய மரத்தின் பசுந்தழைகளைக் கொண்டு எனது பத்தினி ருசியான குழம்பு வைக்கப் படித்திருக்கிறாள். உன்னிடமிருந்து நான் பூதானம் வாங்கிக் கொள்ளமாட்டேன். எனக்கு வேண்டிய செல்வமெல்லாம்என்னுடைய வீட்டில் இருக்கிறது? என்று,  மேற்படி கதை நம்பத்தக்கது. இப்போது சென்னப்பட்டணத்தில் பெரிய தமிழ்ப் பண்டிதராக விளங்கும் ஒரு வேதியர், சில வருஷங்களுக்கு முன்பு, தென்னாட்டு ஜமீன்தார் ஒருவரிடம், தாம் பூதானம் வாங்கிக் கொள்ள விரும்பவில்லை யென்று சொல்லிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். விதி விலக்கான சிற்சில விசேஷமனிதரைத் தவிர, மற்றப்படி பணவிருப்பம் எல்லாருக்கு முண்டு. ஆனாலும், லௌகிக ஆசை விஷயத்தில், ஐரோப்பியப் புரோகிதர், குருக்கள் முதலியவர்களைக் காட்டிலும், நமது தேசத்து''ஐயன்மாரை'' கொஞ்சம் நேர்மையுடையவர் களாகவேநினைக்கவேண்டும். காசுக்கும் அதிகாரத்திற்கும் எல்லாருந்தான் வாயைப் பிளக்கிறார்கள். ஆனாலும்,ரோமபுரியில் கிறிஸ்தவக் குருக்கள் ஐரோப்பா எல்லை முழுதிலும் பூமியாட்சி விவகாரங்களில் தலையிட்டு, ராஜாக்களுடன் கூடியும் பகைத்தும்  கலகங்கள் ஏற்பட்டுத்தியது போல் நமது தேசத்துப் புரோஹிதரும் குருக்களும் செய்ததில்லை. தமிழ் நாட்டில் வன்னியரும் மறவரும், நாயகரும் துருக்கரும், அரசும் அதிகாரமும் செலுத்துகையில், குருக்கள் தெய்வ பக்தியை மறந்து பணத்துக்காகச் சூழ்ச்சிகள் செய்யவில்லை. இக்காலத்திலே கூட, ஒரு ஆங்கிலேய கிறிஸ்தவப் பாதிரிக்குக் கிடைக்கும் வரிம்படியில் நூறில் ஒரு பங்குகூட அதே தொழில் செய்யும் புரோகிதப் பிராமணருக்குக் கிடைப்பதில்லை. இதையெல்லாம் உத்தேசித்து நான் 'அமிர்தபஜார்' பத்திரிகையின் கருத்தை ஒப்புக் கொள்கிறேன்.


Friday, May 29, 2015

85. சமூகம் - விசாரணை



கைதிகளை அன்புடன் நடத்தவேண்டும். அவர்களும்மனிதர்தானே? ஏன் குற்றம் செய்தார்களேன்று கோபிக்கிறாயா?  ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள். ஒழுங்கானபடி யிருந்தால் செய்திருப்பார்களா? தெளிந்த புத்தியிருந்தால் நடந்திருக்குமா? நல்ல ஸஹவாஸத்திலே பழக்கப்படுத்தி யிருந்தால் இந்த நிலைக்கு இழிந்திருப்பார்களா?  ஜன சமூஹத்திலே சிலரை நாகரீக நிலைமைக்குக் கீழே அமிழ்த்து வைத்த குறை யாரைச் சேர்ந்தது? இப்போதுகூட சிறுபிள்ளைகள் குற்றம் செய்தால் கடூர தண்டனைவிதிப்பதில்லை. 'திருத்தம் கூட'த்திலே போடுகிறார்கள். அமெரிக்கா, முதலிய நாகரீக தேசங்களில், கைதிகளுக்கு நாள்தோறும் அதிக ஸௌகர்யங்களும் க்ஷமையும் இரக்கமும் காட்டி வருகிறார்கள். பழைய காலத்தில் இங்கிலாந்திலும் நமது தேசத்திலும் பெரும்பாலும் எல்லாத் தேசங்களிலும் சொற்பக் குற்றங்களுக்கெல்லாம் மிகவும் கடூர தண்டனை விதித்து வந்தார்கள். இக்காலத்தில் எந்ததேசத்திலும் அப்படி நிஷ்டூரமான தண்டனை கிடையாது. விசேஷமாக, ராஜ்ய சம்பந்தமான குற்றங்கள் செய்து சிறைப்படுவோரை இங்கிலாந்து முதலிய தேசங்களில் ஸாமான்யக் கைதிகளைப் போல் நடத்துவதில்லை. பலவிதமான குற்றங்களுக்குத் தண்டனை குறைந்து வருகிறது. மேலும் புராதன ராஜ்யங்களிலே மதத் திருத்தம், ராஜ்யத்திருத்தம் முதலியவற்றை விரும்புதல் குற்றம் என்று நீதிக்காரர் பாவித்திருக்கும் பல திருஷ்டாந்தங்கள் உண்டு. இப்போது அப்படியில்லை. பெரும்பான்மையான தேசங்களில் மேற்கண்ட திருத்தக்காரருக்கு ராஜ்ய ஸன்மானமும் உயர்ந்த பதவிகளும் கிடைக்கும்.ஆனால், இக்காலத்திலே கூட சில தேசங்களில் ராஜ்யத் திருத்தம், மதத் திருத்தம் முதலியவற்றை நீதிக்காரர், குற்றமென்று சொல்லாவிட்டாலும், சற்றே சினந்த முகத்துடன் நோக்குகிறார்கள். இப்படி நடப்போர் நீதி சாஸ்திரத்தின் ஆதார வலிமைகளை நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை.

                                              தண்டனையின் கருத்து

குற்றஞ் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் அவன் அக்குற்றஞ் செய்யாதபடி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்யவேண்டும். இந்தக்கருத்துடன் தண்டனை செய்வோரையே தர்ம தேவதை க்ஷமிக்கலாம். பழிக்குப் பழி வாங்கிவிட வேண்டும் என்ற கருத்துடன் தண்டனை செய்கின்ற அதிகாரம் மனிதனுக்கே கிடையாது. ஏழையைப் பணக்காரனாக்கினால் பிறகு திருடமாட்டான். பேராசைக்காரனைக் கொஞ்சம் ஏழையாக்கினால் பிறகு திருடமாட்டான். மூடனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்தால், இந்திரியங்களைக் கட்டியாள முடியாதவனை விரதங்களிலே போட்டால், உயர்ந்த பதவியிலிருப்போர் எப்பொழுதும் நியாயத்தையே செய்து காட்டினால், பிறகு களவு இராது.

பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால், சிறைச்சாலைகள் குறையும்  என்பதை அநேக நீதிசாஸ்திரக்காரர் தெரிந்து சொல்லுகிறார்கள். வாத்தியார் களின்தொகை அதிகப்பட்டால் போலீஸ் ஸேவகரின் தொகை குறையும். நியாயமான அதிகாரத்தின் கீழ் பள்ளிக்கூடமும் வாத்தியாரும் மிகுதிப்படும்; போலீஸ் ஸேவகமும் சிறைச்சாலையும் குறையும்.

                                                                க்ஷமை

பொதுவாக அநேகரிடத்தில் ஒரு  துர்க்குணமிருக்கிறது. தான் ஒரு குற்றஞ்செய்தால், அதைச் சுண்டைக்காய் போலவும், அதே குற்றத்தை மற்றவன் செய்தால், அதைப் பூசனிக்காய் போலவும் நினைக்கிறார்கள். மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தால் வெண்கலம். மனிதனுக்கு, உண்மையாகவே புத்தித் தெளிவும் யோக்யதையும் தொடங்கும் போது, பிறர் குற்றங்களை க்ஷமிக்கவேண்டுமென்ற எண்ணமுண்டாகிறது. மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான்; அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான்; அல்லது, பொய்க் காரணங்கள் சொல்லி அது குற்றமில்லை என்று ருஜூப்படுத்த முயற்சி செய்கிறான். குற்றத்திற்குக் காரணம் அறியாமை; அதை நீக்கும் வழி ஸத்ஸங்கமும் தைர்யமும். பிறர்  குற்றங்களை க்ஷமிக்கும் குணம் குற்றமில்லாதவர்களிடத்திலே தான் காணப்படும். குற்றம் செய்வோர் பரஸ்பரம் மிகுந்த எரிச்சலோடிருப்பார்கள். ஒரு தொழிலைச் சேர்ந்தவர்களுக்குள்ளே பொறாமையுண்டாவது ஸஹஜந்தானே!

                                                                நீதி

நீதி என்பது பொது ஒழுக்கம். ஒரு கிராமத்தில் வலியவனுக்கு வேறு நியாயம்; எளியவனுக்கு வேறு நியாயமாக இருந்தால், அங்குள்ள நீதிக்காரரை உடனே மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், கிராமம் விரைவில் அழிந்துவிடும். 

ஜனங்கள்குற்றஞ் செய்யாமல் நீதிக்காரர் பார்த்துக்கொள்ள வேண்டும்.நீதிக்காரர் குற்றஞ் செய்யாமல் ஜனங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். நீதிக்கா ரரிலே இரண்டு பெரிய பிரிவு உண்டு; நியாயஸ்தலங்களிலிருந்து நீதியைப் பரிபாலனம் செய்வோர் ஒரு பகுதி; நீதி (சட்ட) சபைகளிலிருந்து விதிகள் ஏற்படுத்துவோர் மற்றொரு பகுதி; இவ்விரு திறத்தாரும் கோணல் வழியிலே இறங்காமல் அடக்க வேண்டிய பொறுப்பு பொது ஜனங்களைச் சேர்ந்தது.

                                                            வாக்குச் சீட்டு

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா - அநேகதேசங்களில் சட்டங்கள் செய்யும் ஸபைக்கு "ஜனஸபை" என்றுபெயரிட்டு ஸபைக்காரர் (மெம்பர்) ஒவ்வொருவரையும் பொதுஜனங்கள் வாக்குச் சீட்டுப் போட்டு நியமனம் செய்யும் வழக்கம் பலவாறாக நடை பெற்று வருகிறது.  ஜனஸபையார் நியாயமில்லாத சட்டங்கள் செய்தால், அடுத்த தடவை ஜனங்கள் தம்மைத் தள்ளி விடுவார்கள் என்ற பயம் இருக்கவேண்டும். ஜனங்களுடைய அதிகாரத்திற்குட்படாத சட்ட ஸபையார் மனம்போனபடி யெல்லாம் சட்டம் போடுவார்கள். அதிலே பல விபரீதங்கள் ஏற்படும். வாக்குச்சீட்டு (வோட்) விஷயத்தில் பலவித அனுஷ்டானங்கள் இருக்கின்றன. இங்கிலாந்திலே வாக்குச் சீட்டுப்போடும் உரிமை சிலருக்கில்லை. பிரான்ஸ் தேசத்திலே எல்லாரும் சீட்டுப்போடலாம். அமெரிக்காவிலே பல ஜில்லாக்களிலே பெண்கள் ஜனஸபைக்குச் சீட்டுப் போடுகிறார்கள். இந்த முறையை தேசமுழுமைக்கும் பொதுவாக்கி, ராஜ்யத்தில் ஆணையும் பெண்ணையும் நிகராக்கி விடவேண்டும் என்று அந்த நாட்டிலே மிஸ்டர் ஹியூஸ், மிஸ்டர் வில்ஸன் போன்ற பெரிய செல்வாக்கு உடைய தந்திரிகள் விரும்புகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அமெரிக்காவில் எல்லா நாடுகளிலும் பெண் சீட்டு வழக்கமாய் விடும் என்று தோன்றுகிறது. வாக்குச் சீட்டே புருஷ லக்ஷணமென்று மேற்கு தேசத்தார் சொல்லிக்கொண்டு வந்தார்கள். இப்போது பெண்ணுக்குக்கூட அந்த உரிமை இல்லாவிட்டால் இழிவுஎன்று தீர்மானம் செய்து வருகிறார்கள்.


84. சமூகம் - பழைய உலகம்


             இந்த உலகம் மிகப் பழமையானது. இதன் வடிவம் புதிதாகத் தோன்றும். இயற்கை பழமை; தனி வேப்பமரம் சாகும்; ஒன்றை வேப்பமரம் பிறக்கும்; வேம்புக்குலம் எந்நாளு முண்டு.பூமியுள்ளவரை வெயில் என்றைக்கும் இப்படியே அடிக்கும். மழை, காற்று, பிறப்பு, வளர்ப்பு, நோய், தீர்வு, கட்டு, விடுதலை, தீமை, இன்பம், துன்பம், பக்தி, மறதி, நரைப்பு, துயரம், கலக்கம் - எல்லாம் எக்காலத்திலுமுண்டு.

             கருவிகள் மாறுபடுகின்றன; இயற்கை செல்கின்றது. ஏன் சொல்லுகிறேன், தெரியுமா? நமக்கெல்லாம் தெரியாமல் ஆகாசத்திலிருந்து புதிய நாகரீகம் ஒன்று குதித்திருப்பதாகச் சிலபள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் சொல்லிக்  கொள்ளுகிறார்கள். நான் அதை நம்பவில்லை. உலகமே பழைய உலகம்.

             ஏழை பாடு எப்போதும் கஷ்டம். பணக்காரனுக்குப் பலவித சௌக்கியங்களுண்டு. கோயில் காத்தவனுக்குப் பஞ்சமில்லை. சாமிகள், முக்கால் வாசிக்குக் குறையாமல், பாதி கல் பாதி சாமி. முழுச்சாமி இருந்து கோயில் நடத்தினால், உடனே கிருதயுகம் பிறந்துவிடாதா?

            எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் இதே கதைதான் நடந்து வருகிறது. எவன் கை ஏறியிருக்கிறதோ அவன் பாடு கோலாஹலம். ஏழைக்குக் கஷ்டம்.

            பணக்காரன் - ஏழை என்ற பிரிவு முன் காலத்தில் எப்படி உண்டாயிற்று? குடி, படை என்ற இரண்டாக மனித ஜாதிஏன் பிரிந்தது? எல்லாரும் ஒன்றுகூடி உழுது பயிரிட்டுப் பிழைக்கும் கிராமத்தில் வேற்றுமை எந்தக் காரணத்தினால் வந்தது? இவையெல்லாம் எஜமானன் விசாரணைகள். இந்த நிமிஷம் ஸௌகர்யமில்லை. ஏழை பணக்காரன் விஷயத்தை மாத்திரம் இப்போது கருதுவோம்.

            ஒரு செட்டி வியாபாரத்தில் ஏழையாய் நொந்து போய் தனது வீட்டுப் பஞ்சாங்கத்தையரிடம் 'பணக்காரனாவதற்கு என்னசெய்யலாம்?' என்று கேட்டான். நவக்ரஹ பூஜை நடத்த வேண்டும் என்று அய்யர் சொன்னான். எவ்வளவு பணம் செலவாகுமென்று செட்டி கேட்டான். பத்துப் பொன்னாகுமென்று பார்ப்பான் சொன்னான். அதற்குச் செட்டி சொல்லுகிறான்: - "என்னிடம் இப்போது கொழும்புக்காசு, தென்னைமரம் போட்டது, ஒற்றைக்காசுக்கூட  கிடையாது. இந்த நிலைமையில் என்ன செய்தால் பணம் கிடைக்கு மென்று உம்முடைய சாஸ்திரம் பேசுகிறது. அதைச் சொல்லும்" என்றான்.

           அப்போது பார்ப்பான் சொன்னான்:- "நீ போன ஜன்மத்தில் பிராமணருக்கு நல்ல தானங்கள் செய்திருக்கமாட்டாய். அதனால் இந்த ஜன்மத்தில் உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. உனக்குச் பிராயச்சித்தம் நம்முடைய சாஸ்திரத்தில் கிடையாது. இந்த ஜன்மத்தில் இனியேனும் புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிறவியில் உனக்குச் செல்வமுண்டாகலாம்."

இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்கு ரஸப்படவில்லை. எனக்கும் பயனுடையதாகத் தோன்றவில்லை. அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்க்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப்பற்றி எனக்கு அதிக சிரத்தை யில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவது தான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு.

எவ்விதமான மிருக பக்ஷியும் கூட்டம் கூடி கக்ஷி கட்டித் தன் குலத்தைத் தானே அழிப்பது வழக்கமென்று தோன்றவில்லை.மனித ஜந்து ஒன்றுக்கே இவ்வழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகிறது. ஹோமர் கால முதல் கான்ஸ்டண்டைன் ராஜா காலம் வரையிலும் யவன தேசத்தில் போர் நிற்கவில்லை. புயற் காற்றடித்த இரவிலேகூட களவு நிற்கவில்லை. தீமை எக்காலத்திலுமுண்டு. விஷத்துக்கு மாற்றும், நோய்க்குத் தீர்வும், மிடிமைக்குச் செல்வமும், மடமைக்குக் கல்வியும் எக்காலத்திலும் தேடலாம். தேட வேண்டுமானால், அதற்கு உபாயங்களும் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே யிருப்பதன்றி மாறுபடுவதில்லை. மனிதர் கருவிகளையே மாற்றுகின்றனர். மற்றபடி பழமையை விடாமல் நடத்தி வருகிறார்கள்.

ஒரு வியாபாரத்தில் ஒரு லாபம் கிடைக்க வேண்டுமானால், ஒரேடியாக ஸுர்ய மண்டலத்துக்குத் தாவிப்போக முடியாது. பழைய வழக்கப்படி மெதுவாக ஒவ்வோர் அடியாகத்தான் போக வேண்டும். பதறின காரியம் சிதறும். மெதுவாகச் செல்வோனே குறியடைவான். பழைய வழி தான் நல்ல வழி. அதுதான் எப்போதுமே நடக்ககூடிய வழி. உலகத்தில் எல்லாக் காரியமும் படிப்படியாகத்தான் ஏறுகிறது. படீலென்று ஏறினால், படீலென்று விழ நேரிடலாம். காற்றாடி துள்ளிப் பாய்கிறது. சூரியன் ஒரே கணக்காக நடக்கிறான் அவன் நெறி மாறுவதில்லை, தாழ்ப்பதில்லை. செல்லுகிறான்: எப்போதுமே ஏறிச் செல்லுவான்,பழைய வழிதான் வியாபாரத்துக்குச் சரியான வழி.


83. சமூகம் - செல்வம் (2)


             "பணமில்லாதவன் பிணம்" என்று பழமொழி சொல்கிறது. இதன் கருத்தைத் தான் திருவள்ளுவர் வேறொரு வகையிலே "பொருளில்லார்க் கிவ்வுலகமில்லை" என்று சொல்லியிருக்கிறார்.

              இந்த உலகிலுள்ள எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் வறுமைத் துன்பம் கொடியது. இவ்வுலகத்தில் எல்லாச் சிறுமைகளைக் காட்டிலும் ஏழ்மையே அதிகச் சிறுமையாவது. "இன்மையின் இன்னாததில்" என்றும் "இல்லானை இல்லாளும் வேண்டாள்; மற்றீன் றெடுத்த தாய் வேண்டாள்; செல்லாதவன் வாயிற் சொல்" என்றும் முன்னோர் சொல்லியிருக்கிறார்கள்.

             இங்ஙனமே, ஏழ்மையின் நிகரற்ற இகழ்ச்சியையும், துன்பத்தையும் விளக்குவன வாய்த் தமிழ்ப் பண்டைத் நூல்களிலும், காவியங்கள் முதலியனவற்றிலும் காணப்படும் வசனங்களையும் உதாரணங்களையும் எடுத்துக்காட்ட முயன்றால், அத்தொகுதி ஆயிரம் சுவடிகளுக்கு மேலாய் விடும். இவ்விஷயமாக இதர பாஷைகளிலுள்ள நூல்களிலும் இவ்வாறே செறிந்து கிடக்கும் வாக்கியங்களும் திருஷ்டாந்தங்களும் கணக்கில்லாதனவாம்.

             எல்லா தேசங்களிலும் எல்லா பாஷைகளிலும் அறிஞரெல்லாம் ஒருங்கே வறுமைதான் எல்லா நரகங்களைக் காட்டிலும் மிகக் கொடிது என்பதை அங்கீகாரம் செய்திருக்கிறார்கள். ஆதலால், இந்த விஷயத்துக்கு நாம் மேற்கோளாதாரங்களை அதிகமாகக் காட்டவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வறுமை மிகமிகப் பெரிய இகழ்ச்சியும் துன்பமுமாகும் என்பது கற்றோர்க்கு மட்டுமே யல்லாது கல்லாதார்க்கும் நன்குதெரிந்த விஷயமேயாம்.

              எல்லா உயிர்களும் மரணத்துக்கு அஞ்சுகின்றன. ஆனால், வறுமை மரணத்திலும் பெரிய துன்பமென்றுணர்ந்த ஏழைகள் மாத்திரமே "தெய்வமே எனக்கொரு சாவு வராதா" என்று சில சமயங்களில் வேண்டுவது காண்கிறோம்.

              இந்த ஏழ்மை இத்தனை கொடிதாக ஏற்பட்ட காரணந்தான் யாதெனில் சொல்லுகிறேன். உணவு தான் ஜீவ ஜந்துக்களின் அவசரங்களனைத்திலும் பெரிய அவசரமானது.

 "மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை                                                                                     தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்                                                                                     கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்                                                                                     பசி வந்திடப் பறந்துபோம்"

             எனவே, இவ்வுலக இன்பங்கள், பெருமைகள் எல்லாவற்றிற்கும் அஸ்திவார பலம் உணவு. உணவு இல்லாத இடத்தில் அவை நிற்க வழியில்லை. மேலும், வெறுமே, உயிர் தரித்திருப்பதற்குக் கூட ஆஹாரம் அவசியமாயிருக்கிறது. சோறில்லாவிட்டால் உயிரில்லை. இது கொண்டே, பெரும்பான்மையோருக்கு அன்றாடம் உணவு கிடைக்குமென்ற உறுதி யில்லாமலும், பலருக்கு உணவே கிடையாதென்பது உறுதியாகவும் ஏற்படுத்திவைக்கும் வறுமையை இத்தனை பெரிய கொடும் பகையாகக் கருதி மனிதர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த விஷயத்தில் மனித ஜாதியாரின் நிலைமைமற்ற மிருகங்கள் பக்ஷிகள் நிலைமையைக் காட்டிலும் அதிக பரிதாபகரமாகவும் இழிவாகவும் ஏற்பட்டிருக்கிறது. திருஷ்டாந்தமாக, பன்றி ஜாதி அல்லது நாய் ஜாதியை எடுத்துக் கொள்ளுங்கள். பலஹீனமான நாயொன்று ஏதேனும் ஆஹாரம் தின்று கொண்டிருக்கும்போது அகஸ்மாத்தாக அங்கே பலசாலி நாயொன்று வருமாயின் அந்தச் சமயத்தில் மாத்திரம் பலமில்லாத நாய் அவ்வுணவைப் பலசாலி நாய்க்குக் கொடுத்துவிட்டுத் தான் டிப் போய் விடும்படி நேருகிறது. ஆனால், சில சில சமயங்களில் மாத்திரம் இந்தஸம்பவம் நிகழ்வதல்லாமல், எப்போதுமே (மனித ஜாதி யிலிருப்பது போல)  இஃது நியதமாக நடைபெறுவதில்லை.

            மேலும், நான்கு பன்றிகள் அல்லது நான்கு நாய்கள் கூடி யாதேனும் ஒரு ஊரில் அல்லது ஒரு காட்டில் கிடைக்கக் கூடிய ஆஹார முழுதும் தங்களுக்கே தஸ்தாவேஜூப்படி சொந்தம் என்றும் தாங்களாக இஷ்டப்பட்டு தாங்கள் திட்டம் செய்து கொடுக்கும் அளவுப்படி தான் மற்றெல்லாப் பன்றிகள் அல்லது எல்லா நாய்களும் உண்ணக் கூடுமென்றும் விதி போடுகிற வழக்கம் (மனிதருக்குள் இருப்பதுபோல்) அந்த ஜந்துக்களிடையே காணப் படுவதில்லை. சிறு தொகையான மனிதருக்கு அடுத்தவேளை ஆஹாரம் கிடைப்பது நிச்சயமாகவும் பெருந்தொகையோர்க்கு அடுத்த வேளை சோறு நிச்சயமில்லாமலும் ஏற்பட்டிருக்கும் ஸம்பிரதாயம் மனிதரைத் தவிர வேறெந்த ஜாதி ஜீவர்களிடத்திலும் கிடையாது. 'காக முறவு கலந்துண்ணக் கண்டீரே?'

           எனவே, மிகவும் முக்கியமானதும் ஜீவஜாதிகளுக்கு பரம அவசியமானதுமாகிய இந்த அம்சத்தில், மனிதருடைய நாகரீக நிலை மற்றெல்லா மிருகங்கள் பக்ஷிகள் முதலியவற்றின் நாகரீக நிலையைக் காட்டிலும் தாழ்வானது என்பதில் சிறிதேனும் ஸந்தேஹமில்லை. இதில் வேறொரு விஷயம் யாதெனில், மனித ஜாதிக்குள்ளே கூட மற்றெல்லா வகுப்பினரைக் காட்டிலும் ஹிந்துக்கள் அதிக இகழ்ச்சியடைந்து அதிக பரிதாபகரமான ஸ்திதியிலிருக்கிறார்கள்.

             முற்காலத்திலே இந்தியா செல்வத்துக்கும், கல்விக்கும், ஞானத்துக்கும், தியானத்துக்கும், பக்திக்கும்,வீரத்துக்கும், பராக்கிரமத்துக்கும், சாஸ்திரங்களுக்கும், பலவிதமான கைத்தொழில்களுக்கும் விசேஷ ஸ்தலமாக விளங்கி வந்தது. இக்காலத்திலே, இந்தியா பஞ்சத்துக்கும், பசி மரணத்துக்கும், வறுமைக்கும் சிறுமைக்கும், தொத்து நோய்களுக்கும் சாசுவத ஸ்தலமாயிருக்கிறது.  இந்தியதேசத்தார் அழிவுறுவதுபோல் மற்றபடி பூமண்டல முழுதிலும் எந்நாட்டிலும் மனிதர் இவ்வாறு வருஷந் தவறாமல் வேறுகாரணம் யாதொன்று மில்லாமல் சுத்தமான பஞ்சக் காரணமாக பதினாயிரம் லக்ஷக் கணக்கில் மடிந்து போகும் ஆச்சர்யத்தைக் காணமுடியாது. மனித ஜாதியார்களுக்குள்ளேயே இப்படியென்றால், மற்ற மிருகங்கள், பட்சிகள், பூச்சிகள் வருஷந் தவறாமல் கூட்டங் கூட்டமாக வெறுமே சுத்தமான பட்டினியால் மடியும் அநியாயம் கிடையாதென்பது சொல்லாமலே விளங்கும்.

              இங்ஙனம், மனித ஜாதிக்கே பொது இகழ்ச்சியாகவும், பொதுக் கஷ்டமாகவும் ஹிந்துக்களுக்கு விசேஷ அவமானமாகவும் விசேஷ கஷ்டமாகவும் மூண்டிருக்கும் இந்த வறுமையாகிய நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்து அந்த நோயை நீக்கி இந்தியாவிலும் பூமண்டலத்திலும் ஸகல ஜனங்களுக்கும் ஆஹார சம்பந்தமாக பயமில்லாதபடி அரை வயிற்றுக் கஞ்சியேனும் நிச்சயமாகக் கிடைப்பதற்கு வழிகள் எவை என்பதைப் பற்றி ஒவ்வொரு புத்திமானும் ஆராய்ச்சி செய்தல் இவ்வுலகத்திலுள்ள எல்லா அவசரங்களைக் காட்டிலும் பெரிய அவசரமென்று நான்கருதுகின்றேன்.  இவ்விஷயத்தைக் குறித்துத் தமிழ் நாட்டுமக்களில் வேறு பலரும் தத்தமக்குப் புலப்படும் உபாயங்களை நமது ''மித்திர''னுக் கெழுதியனுப்பும்படி வேண்டுகிறேன்.

              பூ மண்டலத்தில் அபார நலத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ந்த முக்கியமான கருவிகளில் ஒன்றாக நிற்கும் பெருமையும் புகழும் ''சுதேசமித்ரனுக்'' கெய்துக. மனித ஜாதி முழுமைக்கும் பேரவசியமான இந்த மஹாமஹோபகாரத்தை நடத்துவதற்கு உறுதியான தந்திரங்களைக் காட்டிக் கொடுப்பதாகிய நிகரற்ற மஹிமை தமிழ்நாட்டு மேதாவிகளுக் கெய்துக.

              உலகத்தில் செல்வத்தின் சம்பந்தமான ஏற்றத்தாழ்ச்சிகள் மற்ற எல்லாக் காரணங்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் காட்டிலும் மிகக் கொடியனவாக மூண்டிருக்கின்றன.

             மனுஷ்ய நாகரீகம் தோன்றிய கால முதலாக எல்லா ஜனங்களும் ஸமானமாக வாழவேண்டும் என்ற கருத்து ஞானிகளாலும் பண்டிதர்களாலும் வற்புறுத்தப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், ஒருவன் மிகவும் பலசாலியாக இருக்கிறான். அவனைப் பலமில்லாதவர்கள் மேன்மை யுடையோனாகக் கருதுகிறார்கள். அவனும் அதில் மகிழ்ச்சி கொண்டவனாய் பலமில்லாதவர்களை வேறு சிருஷ்டியாக நினைத்து மிக இழிவாக நடத்தத் தொடங்குகிறான்.

            இங்ஙனமே அழகுடையவன் அழகில்லாதவர்களைத் தாழ்வாக நினைக்கிறான். கல்வியுடையோர் கல்லாத மக்களிடம் வைத்திருக்கும் இகழ்ச்சியோ சொல்லுந் தரமன்று. 'விலங்கொடு மக்களனையர் இலங்கு நூல் கற்றாரோ டேனையவர்.' அதாவது, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் எத்தகைய பேதமிருக்கிறது, அத்தனை பேதம் கற்றாருக்கும் கல்லாதாருக்கு மிடையே உளது. இந்தக் குறள் கல்விப் பெருமையுடையோர் அஃதில்லாதாரின் விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தை நன்கு விளக்குகிறது. இங்ஙனமே, பாடத் தெரிந்தவன் அது தெரியாதவரைக் குறைவாக எண்ணி நடத்துகிறான். நெட்டையாக இருப்பவன் குள்ளனைக் குறைந்த ஜாதியாக எண்ணுகிறான். மேற் குலத்திற் பிறந்தவன் தாழ்ந்த குலத்தானை இகழ்ச்சி செய்கிறான். சுருங்கச் சொல்லுமிடத்தே, யாதேனுமொரு வித விசேஷ அநுகூலம் படைத்தோர் அஃது படையாதவரை இழிவாக எண்ணி நடத்துகிறார்கள். இங்ஙனம் கோடிவிதமான காரணங்களைஉத்தேசித்து மனிதருக்குள்ளே எண்ணற்ற பேதங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த பேதங்களால் ஏற்படும் கஷ்டங்களும் மனஸ்தாபங்களும் பொறாமைகளும் கர்வங்களும் போராட்டங்களும் எண்ணற்றனவாகின்றன. இதனால் இவ்வுலகத்தில் மனித வாழ்க்கை நரக வாழ்க்கை போல தீராத் துன்பமாக முடிந்திருக்கிறது.

              ஏனென்றால், ஒருவன் எத்தனை விசேஷ அநுகூலங்கள் படைத்திருந்த போதிலும், ஏதேனும் ஒருவிஷயத்தில் அவன் வேறு சிலருக்குக் குறைந்தவனாகவே இருக்கும்படி இயற்கை யமைப்பு இருக்கிறது.

             அளவிறந்த கல்வியுடையவன் கொஞ்சம் குள்ளனாக இருந்தால் போதும். பிடித்தது சனி! நெட்டை மனிதரைக் கண்டு அவன் பொறாமை கொள்வதினின்றும் நெட்டையாட்கள் அவனை இகழ்ச்சி செய்வதினின்றும் அவனுக்குப் பலவித அனர்த்தங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. அவன் தான் குள்ளனாகப் பிறந்ததைப் பற்றி ஓயாமல் மனம் நொந்து சாகிறான்.

             மிகுந்த செல்வமுடையவன் கொஞ்சம் கரு நிறமுடையவனாக இருந்தால் போதும். வந்தது வினை! செந் நிறமுடையவர்களாலே அவனுடைய வாழ்க்கை நரகத்தைப் போல் ஆக்கப்படுகிறது.

             இங்ஙனம் எத்தனையோ பேதங்களால் மனிதனுக்குப் பல தொல்லைகள் விளைகின்றன. எனினும், நான் தொடக்கத்திலே கூறியபடி செல்வத்தால் ஏற்படும் வேற்றுமைகளே சால மிகக்கொடியன. செல்வமுடையவன் செல்வமில்லாதவரிடத்துக் கொண்டிருக்கும் இகழ்ச்சியும், செல்வமில்லாதவன் செல்வமுடையோரிடத்தே கொண்டிருக்கும் பொறாமையும் வேறெந்த முகாந்திரத்தைக் கருதியும் மனிதருக்குள்ளே ஏற்படுவதில்லை.

'கண்ணுடையோ ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு                                                 புண்ணுடை யார் கல்லாதவர்'

என்று வள்ளுவர் சொல்லியபடி, படித்தவன் படியாதவனை வெறுமே குருடனாகக் கருதி நடத்துகிறான். பணமுடையவனோ பணமில்லாதவனைப் பிணமாக நினைக்கிறான்.
இதனிடையே மனித ஜாதி நாகரீகத்தில் முற்ற முற்ற, ஸமத்வம் அவசியமென்ற கொள்கை ஒரு புறத்தே பரவிக்கொண்டே வருகிறது. எத்தனை வேற்றுமைகள் குணத்தாலும் செய்கையாலும் பிறப்பாலும் மற்ற வீண் நியமங்களாலும் மானிடருக்குள் ஏற்பட்டிருந்த போதிலும், அந்த வேற்றுமைகளை யெல்லாம் புறக்கணித்துவிட்டு எல்லாரும் ஈசனுடைய மக்கள் அல்லது அம்சங்கள் என்ற பரம ஸத்யத்தை மனதில் தரித்து எல்லாரையும் நிகராக பாவிக்க வேண்டும் என்ற கருத்து வேத ரிஷிகளாலும், கிறிஸ்து, புத்தர் முதலிய அவதார புருஷர்களாலும் மனிதருக்கு வற்புறுத்திக் கூறப் பட்டன. அவர்களை ஒட்டி எண்ணிறந்த ஞானிகளும் பண்டிதர்களும் அக்கொள்கையைப் பலவகையாலே பரவச்செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

              இங்ஙனம், பரமார்த்த ஞானமுடையோர், ஆதிகாலம் தொட்டு, ஸமத்வக் கொள்கையைப் பரப்பிவருதல் ஒரு புறத்தே நிகழவும், சென்ற சில நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் பல வித்வான்கள் தெய்வத்தைப் பற்றி யோசனை செய்யாமல் வெறுமே மானிட வாழ்க்கை ஸூகமாகவும் ஸமாதானமாகவும் நடைபெறவேண்டும் என்கிற லௌகீக காரணத்தைக் கருதி ஸகல ஜனங்களும் ஸமாதானமாகவே நடத்தப்பட வேண்டும் என்கிற கருத்தைப் பிரசாரஞ் செய்துகொண்டு வருகிறார்கள். இக் கொள்கை, நாட்பட நாட்பட, ஐரோப்பாவிலும், அதன் கிளைகளாகிய அமெரிக்கா, ஆஸ்திரேலியாக் கண்டங்களிலும் ஐரோப்பிய நாகரீகத்தை அநுசரிக்க விரும்பும் ஜப்பான், இந்தியா முதலிய தேசங்களிலும் மிக விருத்தியடைந்துவருகிறது.

              ஒற்றைக் குடும்பத்தில் ஒரு பிள்ளை புத்திமானாகவும் கல்வியுடையவனாகவு மிருக்கிறான், மற்றொருபிள்ளை கல்வி யறிவற்ற மூடனாகவே இருக்கிறான்; ஒருவன் சிவப்பாக இருக்கிறான்; மற்றொருவன் கருநிற முடையவனாக இருக்கிறான். ஒருவன் பலசாலியாக இருக்கிறான்; மற்றொருவன பலஹீனனாக இருக்கிறான். ஒருவன் தைரியசாலியாக இருக்கிறான்: மற்றொருவன் கோழையாக இருக்கிறான். ஒருவன் நெட்டை; மற்றொருவன் குட்டை. ஒருவன் அழகுடையவன்; மற்றொருவன் முகமெல்லாம் அம்மைத் தழும்புடையவனாய் ஒரு கண் பொட்டையாக இருக்கிறான். எனினும், அறிவுடைய தாய் தந்தையர் இந்த மக்களுக்குள்ளே எவ்விஷயத்திலும் வேற்றுமை பாராட்டாமல் இவர்களை ஸகல விதங்களிலும் ஸமான அன்புடன் நடந்தி வருகிறார்கள்.

              அதுபோலவே, மனிதஜாதி முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி மானிடருக்குள்ள இயற்கையாலும் மானிடர்தாமாகவே ஏற்படுத்திக்கொண்ட அர்த்தமில்லாத கட்டுப்பாடு களாலும் எத்தனை வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், இந்த வேறுபாடுகளைக் கருதிச் சிலருக்கு அதிக ஸௌகரியங்களும், பலருக்குக் குறைந்த ஸௌகரியங்களும், சிலருக்கு மதிப்பும், பலருக்கு அவமதிப்பும், சிலருக்கு லாபங்களும், பலருக்கு நஷ்டங்களும் ஏற்படுத்தியிருப்பது தவறு என்பதும், ஒவ்வொருவரும் சகோதரரைப் போல் பரஸ்பர அன்புடனும், மரியாதையுடனும் வாழ்வதே நியாயம் என்பதும், நவீன ஐரோப்பிய ஸித்தாந்தங்களிலே மிகவும் முக்கியமான ஸித்தாந்தமாகும். இந்தக் கொள்கைக்கு எல்லா மதங்களும் சார்பாக இருப்பதை உத்தேசிக்கு மிடத்தே, இது  நாளடைவில் ஐரோப்பாவில் மாத்திரமின்றி உலக முழுமையிலும் பரிபூர்ணமாக வெற்றிபெறும் என்பதில் ஸந்தேஹமில்லை.

              இந்த ஸித்தாந்தம் பரிபூர்ண ஜயமடைந்து மனிதருக்குள்ளே ஸஹஜ தர்மமாக ஏற்பட்ட பிறகுதான், மானிடர் உண்மையான நாகரீகம் உடையோராவர்.

              மேலும், மானிடருக்குள்ளே இயற்கையால் ஏற்பட்டிருக்கும் வர்ண வேற்றுமைகள், உயர வேற்றுமைகள், சரீர பல வேற்றுமைகள் முதலியனவே மாற்ற முடியாதவை. செயற்கையால் உண்டாகிய கல்வி வேற்றுமைகள், செல்வ வேற்றுமைகள், ஜாதி பேதங்கள் முதலியன எளிதாக மாற்றிக்கொள்ளக் கூடியன.

              ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல தேசங்களிலும் ஏற்கனவே பிற்கூறிய வேற்றுமைகளை நீக்குவதற்குப் பலமான முயற்சிகள் நடைபெற்று வந்து நல்ல பயன்களும் ஏற்பட்டு விட்டன. எல்லாருக்கும் கல்வி கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் முக்கியமாக வலிமையடைந்து வருகிறது. தேசத்து மக்கள்அத்தனை பேருக்கும் கட்டாய மாகவும் இனாமாகவும் கல்வி கற்பித்துக் கொடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்.  இந்த முயற்சி இன்னும் அதிக பலம் அடையும்.  நாளுக்குநாள் இந்த முயற்சியில் சக்தியும் வேகமும் அதிகரித்து வருகின்றன. இதனினும் இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் அந்த முறையைக் கைப்பற்றி நடக்கும். இந்தியா, ஜப்பான் முதலிய தேசங்களிலும் படிப்புத் தெரியாதவர் ஒருவர்கூட இல்லாமற் போய்விடுவார்கள் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். ஜாதி பேதங்கள் இந்தியாவிலேயே சிதறுண்டு வருகின்றன வெனில் மற்ற நாடுகளைப் பற்றிப்பேச வேண்டியதில்லை.

              இதுபோலவே. செல்வத்தைக் குறித்த வேற்றுமைகளையும் இல்லாமற் பண்ணிவிட வேண்டும் என்ற கொள்கையும் உலகத்தில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. ஐரோப்பா விலேதான் இந்த முயற்சி வெகுமும்முரமாக நடந்து வருகிறது. ஒரு தேசத்தில் பிறந்தமக்கள் அனைவருக்கும் அந்த தேசத்தின் இயற்கைச் செல்வ முழுவதையும் பொது உடமையாக்கி விடவேண்டுமென்ற கொள்கைக்கு இங்கிலீஷில் 'சோஷலிஸ்ட்' கொள்கையென்று பெயர். அதாவது 'கூட்டுறவுக் கொள்கை.  'இந்தக் 'கூட்டுறவு வாழ்வு'க்  கொள்கை (சோஷலிஸ்ட்) ஐரோப்பாவில் தோன்றியபோது இதை அங்கு முதலாளிகளும் மற்றப்படி பொது ஜனங்களும் மிக ஆத்திரத்துடனும், ஆக்ரஹத்துடனும் எதிர்த்து வந்தார்கள். நாளடைவில் இக் கொள்கையின் நல்லியல்பு அந்தக் கண்டத்தாருக்கு மேன்மேலும் தெளிவுபட்டு வரலாயிற்று. எனவே, இதன் மீது ஜனங்கள் கொண்டிருக்கும் விரோதம் குறைவுபட்டுக் கொண்டுவரவே, இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கெனவே, ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின், ஸ்ரீ மான் மின்த்ரோத்ஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது உடமையாகிவிட்டது. இக் கொள்கை ஜர்மனியிலும், ஆஸ்திரேலியாவிலும், துருக்கியிலும் அளவற்ற வன்மைகொண்டு வருகிறது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரம்மாண்டமான பகுதியாக நிற்கும் ஸைபீரியா தேசம் ருஷியாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததாதலால், அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்துவிட்டது. அங்கிருந்து இக்கொள்கை மத்திய ஆசியாவிலும் பரவி வருகிறது.  ஐரோப்பாவிலுள்ள பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைக் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள்புரிந்து வருகிறார்கள்.

                   ஆனால், இந்த முறைமை போர், கொலை, பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவது எனக்குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக்கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க ஸமத்வம் ஸஹோதரத்வம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர், அவற்றைக் குத்து, வெட்டு, பீரங்கி, துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கை யென்று நான் நினைக்கிறேன். பலாத்காரமாக முதலாளிகளின் உடமைகளையும், நிலஸ்வான்களின் பூமியையும் பிடுங்கி  தேசத்திற்குப் பொதுவாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கை  ருஷ்யாவில் வெற்றி பெற்றதற்கு பல பூர்வகாரணங்களிருக்கின்றன. நெடுங் காலமாகவே, ருஷியாதேசத்தில் ஆட்சி புரிவோரின் நிகரற்றகொடுங்கோன்மையாலும், அநீதங்களாலும், செல்வர்களின் குரூரத்தன்மையாலும் பல ராஜாங்க புரட்சிகள் நடந்து வந்திருக்கின்றபடியால், இந்த மாறுதல் அங்கு அமைப்பது ஸுலபமாயிற்று. மற்ற ஐரோப்பிய தேசங்களில் முதலாளிகளும் செல்வர்களும் இன்னும் முற்றிலும் பலஹீனமடைந்து போகவில்லை. பெரும்பாலும்அவர்களிடத்திலேயே எல்லாப் பலங்களும் சக்திகளும் அமைந்திருக்கின்றன. அங்கெல்லாம்  ''சோஷலிஸ்ட்''  கூட்டுறவு வாழ்க்கைக் கட்சி ருஷ்யாவிலுள்ள சக்தியும் பராக்கிரமமும் பெற்றுவிடவில்லை. அங்ஙனம் பெறுவற்கு இன்னும் பல வருஷங்கள் செல்லும்  என்றே தோன்றுகிறது. தவிரவும், அங்ஙனம் ''சோஷலிஸ்ட்'' கட்சியார் பலமடைந்தபோதிலும், அந்த பலத்தைஉபயோகிப்பது நியாயமில்லை யென்று நான்சொல்லுகிறேன். ஏனென்றால், பிறருடைமையைத் தாம்அபகரித்து வாழவேண்டும் என்கின்ற கெட்ட எண்ணமுடையவர்களும் ஸர்வ ஜனங்களும் ஸமான ஸௌகர்யங்களுடன் வாழவேண்டும் என்கிற கருத்து இல்லாத பாவிகளும்  தம்முடைய கொள்ளை விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு, வாள், பீரங்கி, துப்பாக்கிகளால் அநேகரைக் கொலை செய்து, ஊர்களையும் வீடுகளையும் கொளுத்தியும் அநியாயங்கள் செய்வது நமக்கு அர்த்தமாகக் கூடிய விஷயம். அங்ஙனமின்றி,  எல்லா மனிதரும் உடன்பிறந்த சகோதரரைப் போல் ஆவார்கள் என்றும்,ஆதலால் எல்லாரையும் ஸமமாகவும் அன்புடனும் நடத்தவேண்டும் என்றும் கருதுகிற தர்மிஷ்டர்கள் தம்முடைய கருணா தர்மத்தை நிலை நிறுத்த கொலை முதலிய மஹாபாதகங்கள் செய்வது நமக்குச் சிறிதேனும் அர்த்தமாகக் கூடாத விஷயம் . கொலையாலும், கொள்ளையாலும், அன்பையும் ஸமத்வத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.    'இதற்கு நாம் என்னசெய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; என்று லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்ல தாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமே யொழிய குறைக்காது. பாபத்தை புண்ணியத்தாலே தான் வெல்லவேண்டும். பாபத்தை பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை. அதர்மத்தை தர்மத்தால் வெல்லவேண்டும்;  தீமையை நன்மையாலேதான் வெல்லமுடியும். கொலையையும் கொள்ளையையும்அன்பினாலும் ஈகையாலும் தான் மாற்ற முடியும். இதுதான் கடைசிவரை கைக்கூடி வரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து. சிறிது காலத்திற்கு நோயைஅடக்கி வைக்கும். பிறகு, அந்நோய் முன்னைக் காட்டிலும் ஆயிரம்மடங்கு அதிக வலிமை யுடையதாய் ஓங்கிவிடும். ஒரு கொலையாளிக் கூட்டம் இன்று தன்னிடமுள்ள சேனா பலத்தாலும் ஆய்த பலத்தாலும் மற்றொரு கொலையாளிக் கூட்டத்தை அடக்கிவிடக்கூடும். இதனாலே தோற்றகூட்டம் நாளைக்கு பலம் அதிகப் பட்டு முந்திய கூட்டத்தை அழிக்கும். இது மறுபடி தலைதூக்கி அதைஅடக்கும், இங்ஙனம்  தலைமுறை  தலைமுறையாக இவ்விரண்டு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று தீமைசெய்து கொண்டே வரும். இதற்கு ஓய்வே கிடையாது. தர்மத்தாலும் கருணையாலும் எய்தப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்க வல்லதாகும். இதனை அறியாதார் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதார் ஆவர்.
மேலும், ருஷ்யாவிலும் கூட இப்போது ஏற்பட்டிருக்கும் ''ஸோஷலிஸ்ட்'' ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருதவழியில்லை. சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரே அடியாகக் குறைந்துபோய் மஹா பலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் ''கூட்டு வாழ்க்கைக்'' குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்தவல்லரசுகள் கொஞ்சம் சக்தி யேறிய மாத்திரத்திலே ருஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடைமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த அரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப்பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டாகும். லெனின் வழி சரியான வழியில்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோமாதலால், இந்தியாவின் ஸாத்யா ஸாத்யங்களைக் கருதியே நாம் யோஜனை செய்யவேண்டும். முதலாவது, இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும்,  முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்பவும் மாட்டார்கள். எனவே, கொள்ளைகளும் கொலைகளும் சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்.செல்வர்களுடைய உடைமைகளை பலாத்காரமாகப் பறித்துக்கொள்ள முயலுதல் இந்நாட்டிலே, நான் மேற்கூறியபடி, பொருந்தவும் செய்யாது; ஸாத்தியமும் இல்லை.

              ஆனால், கோடிக்கணக்கான ஜனங்கள் வயிறு நிறைய உணவு கிடைக்குமென்ற நிச்சயமில்லாமலும், லக்ஷக்கணக்கான ஜனங்கள் ஒருவேளைக் கஞ்சி கிடைக்காமலே சுத்தப் பட்டினியால் கோர மரணமெய்தும்படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலைமையை நாம் ஒரு க்ஷணங்கூடச் சகித்திருப்பது நியாயமில்லை என்பது சொல்லாமலே போதரும்.

              எனவே, உலக துன்பங்கள் அனைத்திலும் கொடிதான இந்த ஏழ்மைத் துன்பத்தை ஸமாதான நெறியாலும் மாற்றக்கூடிய உபாயமொன்றை நாம்கண்டு பிடித்து நடத்து வோமானால், அதினின்றும் நமதுநாடு பயனுறுவது மட்டுமேயன்றி, உலகத்தாரெல்லாரும் நம்முடைய வழியை அனுஷ்டித்து நன்மைஅடைவார்கள்.

             'அப்படிப்பட்ட உபாயமொன்று கிடைக்குமா' என்பதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி செய்வோம்.

             ஜனங்களுக் குள்ளே கலகங்களும் யுத்தங்களும் கொலைச் செயல்களும் நேரிடாத வண்ணம் ஸமாதான நெறியிலே உலகத்தின் ஏழ்மையைத் தொலைப்பதற்குத் தகுந்த உபாயமாக எனக்குத் தோன்றுவதை இங்கு தெரிவிக்கிறேன்.

              உலகம் தேசங்களால் அமைக்கப்பட்டது. தேசம் மாகாணங்களின் தொகுதியாம். மாகாணங்கள் ஜில்லாக்களின் சேர்க்கையாகும். ஜில்லா, ஒரு சில நகரங்களும் பெரும்பான்மை கிராமங்களும் கூடிய தொகுதியாகும். எனவே, ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டு அதில் வறுமையே இல்லாமல் செய்வதற்குரிய வழி கண்டுபிடிப்போமாயின், பிறகு அந்த உபாயமே பூமண்டலத்தின் வறுமையைத் தொலைப்பதற்குப் பொருந்தியதாய் விடுமென்பது சொல்லாமலே விளங்கும். திருஷ்டாந்தமாக, நான் இப்பொழுது வாசம் புரிந்து வரும் கடையம் கிராமத்தை எடுத்துக்கொள்வோம். இவ்வூரைச் சூழ்ந்திருக்கும் வயல்க ளெல்லாம் சுமார் 30 பெரிய மிராசுதார்களுக்கும் பல சில்லரை நிலஸ்வான்களுக்கும் உரியன. 

              இந்த நிலஸ்வான்கள் எல்லாரும் சேர்ந்த ஒரு ஸபை சமைக்கப்பட வேண்டும். இந்த ஸபையார் கோயில் வாயிலிலே கூட்டம் கூடியிருந்து கொண்டு ஊர் ஜனங்கள் அத்தனை பேரையும் பறை சாற்றுவித்துத் தம்முன்னே வரவழைக்கவேண்டும். அப்போது நில ஸ்வான்கள் எல்லாருடைய ஸம்மதப்படி, அவர்களின் பிரதிநிதியாகிய ஒருவர் எழுந்து நின்று கிராமத்தாரிடம் பின்வருமாறு பிரமாணம் செய்துகொடுக்க வேண்டும்.

              எப்படி என்றால்:-

              ''கஞ்சியாவது கிடைத்து வருகிறதெனினும் அது நியதமாக எப்போதும் கிடைத்து வரும் என்ற நிச்சயம் இல்லாதபடியால் நீங்கள் எண்ணில்லாத மனக் கவலைகளுக்கும், மனஸ்தாபங்களுக்கும், பொறாமைகளுக்கும், வஞ்சனைகளுக்கும்,  ஏமாற்றங்களுக்கும், கலகங்களுக்கும் இரையாகி மடிகிறீர்கள். ''அன்னவிசாரம் அதுவே விசாரம்'' என்று பட்டினத்துப் பிள்ளை சொல்லியது போல், உங்களுக்கு இந்த ஆகார விசாரம் தீராத பெரு விசாரமாக வந்து மூண்டிருக்கிறது. நியாயமான உழைப்பாலோ, அல்லது ப்ரூதோம் என்ற பிரான்ஸ் தேசத்து சாஸ்திரி, 'உடைமையாவது களவு' என்று  சொல்லியபடி வஞ்சனைத் தொழில்களாலே,  இந்த ஊரிலுள்ள வயல்கள் தோட்டங்கள் எல்லாவற்றையும் எங்கள் சிலருக்கு மாத்திரம் உரிமையாகும்படி ஏற்பாடு செய்து விட்டார்கள். பூஸ்திதி எங்களிடம் இருப்பது எங்களுடைய குற்றமாகமாட்டாது. எனினும், உங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் ஸ்நேஹமும் இல்லாவிட்டால் எங்களுக்கு இந்த நிலங்கள் எல்விதமான பயனும் தரமாட்டா. மேலும் நீங்கள் அத்தனை பேரும் ஆகாரவிஷயத்தில் ஒருவித நிச்சய மில்லாமையால் படும் கஷ்டங்களும் அதனின்றும் உங்களுக்குள் ஏற்படும் போராட்டங்களும் எங்களையும் சூழ்ந்து தீராத துன்பத்துக்கு உள்ளாக்குகின்றன. நாங்கள் பொருளுடைமை விஷயத்தில் மாத்திரம் உங்களின்றும் வேறுபட்டிருப்பினும், மற்றெல்லா அம்சங்களிலும் உங்களைப் போன்ற மனிதர்களே; ஆதலாலும்,உங்களுடனே எப்போதும் ஊடாடிப் பழகுவதும் விவஹரிப்பதும் எங்களுக்கு மிகவும் இன்றியமையாதாதலாலும், நீங்கள் தீராத வறுமை நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில் நாங்கள் மாத்திரம் சந்தோஷமாக இருத்தல் சாத்தியப்படவில்லை. எங்களுடைய காரியங்களெல்லாம் உங்களாலே ஆகவேண்டியிருக்கிறது. எங்களுக்கு உங்களைத் தவிர வேறு கதியில்லை. உங்களுடைய வறுமைத் தீ எங்களை நானாவிதங்களிலும் சாபம் போல எரிக்கிறது. எங்களுக்குச் சிறிதேனும் ஒற்றுமையில்லாமல் செய்துவருகிறது. பூமி எல்லோருக்கும் பொதுவான தாய் போலாகும். அதில், நாங்கள் மாத்திரம் உரிமை கொண்டாடுதல் அநியாயம் என்று எங்களுக்கு அர்த்தமாகின்றது. அதனின்றும் பூர்வீக காலம் முதல்பரம்பரை பரம்பரையாக வழங்கி வரும் சொத்தை, ருஷ்யா முதலிய தேசங்களில் நடப்பதுபோல், நீங்கள் பலாத்காரமாக எங்களைக் கொன்றும் சிறையிலிட்டும் எங்களிடமிருந்து பறித்துக் கொள்வது நியாயம் இல்லை. ஏனென்றால், உடைமை பொது நாகரீகத்திற்கு ஹேதுவாகும். எந்தக் காரணம் பற்றியும் கொள்ளையிடுவது சரியில்லை. நிலமில்லாத நீங்கள் எங்களுடைய நிலத்தைக் கொள்ளையிட்டுப் பறித்துக்கொள்ளலாமெனில், துணியில்லாதவர்கள் உங்களுடைய துணிகளைப் பறித்துக்கொள்ளலாமன்றோ? வீடில்லாதவர்கள் பிறர் வீடுகளைக் கைப்பற்றிக் கொள்ளலாம். ஒரு சிறிதேனும் உடமையில்லாதவர்கள் மலை க்குறவர் இடையேகூட காணப்படுவதில்லை. பூஸ்திதி மாத்திரம் தானா உடைமை? துணி, மணி, வீடு, பாத்திரம், பண்டம், பாய் தலையணி-எல்லாம் உடைமைகளே. மலைப் பழிஞர் நாட்டுக்குள்பிரவேசித்து உங்களுடைய வீடு பாத்திரங்களெல்லாம் அபகரித்துக்கொள்ளுதல் நியாயமென்று உங்களுக்குத்தோன்றுகின்றதா?

                     ''எனவே, எங்களுடைய பூஸ்திதிகளை நீங்கள் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ளுதல் நியாயமன்று. ஆனாலும் பூமித்தாய் எல்லாருக்கும் பொதுவாகத் தரும் விளை பொருள்களை நாங்கள் சிலபேர்  மாத்திரம் பங்கிட்டெடுத்துக் கொண்டு, உங்களுக்கு  'எங்களுடைய தயவு இருந்தால் தான் ஆகாரம். எங்கள் தயவில்லாவிட்டால் பட்டினி' என்ற நிலையில் உங்களை வைத்து, அதனின்று உங்களை அடிமைகளாக்கி நடத்திவரும் மஹாபாவத்திற்கு இன்னும் ஆளாயிருக்க எங்களுக்குச் சம்மதமில்லை.  ''இன்றும் வருவது கொல்லோ நெருநலுங் கொன்றது போலும் நிரப்பு'' என்று திருவள்ளுவர் சொல்லியது போல,  (அதாவது,' நேற்று முழுதும் நம்மைக் கொலை செய்வது போலவே வருத்திக் கொண்டிருந்த வறுமை இன்றைக்கு வந்து விடுமோ'  என்று)  பரிதபித்து  ஏங்கும் நிலைமையில் நீங்கள் உயிர்வாழ்க்கை நடத்தி வருகிறீர்கள். உங்களை இந்த உணவு நிச்சயமில்லாத நிலையில் வைத்திருக்கும் பாவத்தை இனி சுமந்து கொண்டிருப்பதில் எங்களுக்குச் சம்மதமில்லை. எனவே, உங்களில் ஆண் பெண் குழந்தை எவருக்கும் என்றைக்கும் ஆகார விஷயமாக பயமில்லாதபடி செய்துவிடவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதற்கு, பின்வரும் வழியை அனுசரிக்க வேண்டும் என்று நிச்சயித்து இருக்கிறோம். அதாவது, எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி 'தொழில் நிர்வாக சங்கம்' என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த் தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப் பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானாவகைப்பட்ட கைத்தொழில்கள்-இவைஇந்தக் கிராமத்துக்கு மொத்தம் இவ்வளவு நடைபெறவேண்டு மென்றும், அத் தொழில்களில் இன்னின்ன தொழிலிற்கு இன்னார் தகுதியுடையவர் என்றும் மேற்படிதொழில் நிர்வாக சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள். அந்தப்படி கிராமத்திலுள்ள நாம் அத்தனை பேரும்தொழில் செய்யவேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தக்கபடியாக, ஆண் பெண் குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரினும் ஒருவர்  தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை, பிள்ளை, தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவறமாட்டோம். இந்தப்படிக்கு இந்தஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு பிரதிக்னை செய்து கொடுக்கிறோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தை எங்களில் முக்யஸ்தர் கை எழுத்திட்டு செப்புப் பட்டையம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம்.'  இங்ஙனம் பிரதிக்னை செய்து இதில் கண்டகொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின், கிராமத்தில் வறுமையாவது அதைக்காட்டிலும் கொடிதாகிய வறுமையச் சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும் ஏற்பட்டு, அற்பாயுள், நோய் முதலிய பிசாசுகளின் பயந்தொலைப்பது, பரிபூர்ண  க்ஷேமம் உண்டாகும். ஒருகிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து, பின்னர் அதனை உலகத்தா ரெல்லாரும் கைக்கொண்டு நன்மை யடைவார்கள். தமிழ் நாட்டு மக்களே, இங்ஙனம் உலகத்தில் வறுமையைத்  தீர்க்கும் பெருந்  தர்மத்தில்வழிகாட்டுவோராக நிற்கும் மஹிமை உங்களைச் சார்வதாகுக.



82. சமூகம் - செல்வம் (1)


               ருஷ்யாவில் ''சோஷலிஸ்ட்'' கட்சியார் ஏறக்குறைய நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக் கூடுமென்று தோன்றுகிறது. சோஷலிஸ்ட் கட்சியென்பதைத் தமிழில் ஸமத்துவக்கட்சி என்று சொல்லலாம். அதுகூட  சரியான மொழி பெயர்ப்பாகாது. சொத்து விபாகம் செய்திருப்பதில், இப்போது சிலர் செல்வரென்றும் பலர் ஏழைகளென்றும்  ஏற்பட்டிருப்பதை மாற்றி உலகத்திலுள்ள சொத்தை அதாவது பூமியை உலகத்து ஜனங்களுக்கு ஸமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், தொழில் விஷயத்தில் இப்போது போட்டிமுறை இருப்பதை மாற்றிக் கூடியுழைக்கும் முறையை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் மேற்படி கட்சியாருடைய முக்கியமான கோட்பாடு. ஆதலால் இந்தக் கட்சிக்கு ஐக்கியகட்சி என்று பெயர் சொல்லுவது பொருந்தும் என்று தோன்றுகிறது. இதை ''அபேதக் கட்சி'' என்று சொல்வாருமுளர்.

             இந்தக் கட்சி இந்தியாவில் ஏன் இதுவரை ஏற்பட்டு விருத்தி யடையவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். முதலாவது காரணம் ஹிந்து ஜன ஸமூக அமைப்பில் ஐரோப்பாவில் இருப்பதுபோலவே அத்தனை அதிகமான தார தம்மியம் இல்லை. முதலாளி, தொழிலாளி, செல்வன் ஏழை இவர்களுக்கிடையே ஐரோப்பாவில் உள்ள பிரிவும் விரோதமும் நம் தேசத்தில் இல்லை. ஏழைகளை அங்குள்ள செல்வர்அவமதிப்பதுபோலே நமது நாட்டுச் செல்வர் அவமதிப்பது கிடையாது ஏழைகளுக்குத் தானம் கொடுப்பது என்ற வழக்கம் நமது தேசத்தில் இருக்குமளவு அந்தக் கண்டத்தில் கிடையாது. லண்டன் நகரத்தில் பிச்சைக்காரனைப் போலீஸ்காரன் பிடித்துக்கொண்டு போவான். பிச்சைக் குற்றத்திற்காக மாஜிஸ்டிரேட் தண்டனை விதிப்பார். நமது தேசத்தில் "தேஹி" என்று கேட்டவனுக்கு "நாஸ்தி" என்று சொல்கிறவனை எல்லோரும் சண்டாளன் என்று தூஷிப்பார்கள்.

              இங்கிலீஷ் நாகரீகம் நமது தேசத்தில் நுழையத் தொடங்கியதிலிருந்து, இங்கும் சில மூடர் பிச்சைக்காரரை வேட்டையாடுவது புத்திக் கூர்மைக்கு அடையாளமென்று நினைக்கிறார்கள். பிச்சைக்காரன் வந்தால்   "ஏண்டா தடி போலிருக்கிறாயே! பிச்சை கேட்க ஏன் வந்தாய்? உழைத்து ஜீவனம் பண்ணு'' என்று வைது துரத்துவார்கள். ''உழைத்து ஜீவனம் பண்ணு'' என்று வாயினால் சொல்லி விடுதல் எளிது. உழைக்கத் தயாராக இருந்தாலும், வேலையகப்படாமல் எத்தனை லக்ஷலக்ஷம் பேர் கஷ்டப்படுகிறார்கள் என்ற விஷயம் மேற்படி நாகரீக வேட்டை நாய்களுக்குத் தெரியாது.

              சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பதும் உண்மைதான். இதையெல்லாம் நான் மறுக்கவில்லை. ஆனாலும், பிச்சையென்று கேட்டவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை; வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை.

              சோம்பேறி! பிச்சைக்காரன் மாத்திரம் தானா சோம்பேறி?  பணம் வைத்துக்கொண்டு வயிறு நிறைய தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு அதன் பிறகு ஏழைச் சோம்பேறிகளை சீர்திருத்தப் போவது விசேஷம். பொறாமையும் தன் வயிறு நிரப்பிப் பிற வயிற்றைக் கவனியாதிருத்தலும், திருட்டும், கொள்ளையும் அதிகாரமுடையவர்களும் பணக்காரர்களும் அதிகமாகச் செய்கிறார்கள். ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு, செல்வர் செய்யும் அநியாயம் அதிகம். இதைக் கருதியே ப்ரூதோம் என்ற பிரெஞ்சு தேசத்து வித்துவான் "உடைமையாவது களவு" என்றார்.

ஏழைகளே இல்லாமற் செய்வது உசிதம். ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது. அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும் கொள்ளை யிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். ஐரோப்பிய யந்திரத் தொழிற்சாலைகள் ஏற்பட்டதிலிருந்து ஏழைகளுக்கு முன்னைக் காட்டிலும் அதிகத் துன்பம் ஏற்பட்டு இருக்கின்றனவே யன்றி ஏழைகளின் கஷ்டம் குறையவில்லை.

ஏழைகளைக் கவனியாமல் இருப்பது பெரிய ஆபத்தாக முடியும். கிறிஸ்துவ வேதத்தில் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் முதல் மனிதனாகிய ஆதாம் என்பவனுக்கும் அவனுடைய பத்தினியாகிய ஏவாளுக்கும் இரண்டு புத்திரர் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. மூத்த குமாரன் பெயர் காயீன். இளையவன் பெயர் ஆபேல். காயீன் ஆபேலிடம் விரோதமாய் ஆபேலைக் கொன்று விட்டானாம், அப்போது கடவுள் காயீனை நோக்கி  "உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?"  என்று கேட்டாராம். அதற்குக் காயீன் "எனக்குத் தெரியாது. சகோதரனுக்கு நான் காவலாளியோ?"என்றானாம்.

அதுபோல உலகத்துக்குச் செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டெடுத்துக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால், "அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழையாயிருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா?"என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்யவேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாளிகள் ஒரு சபை கூடி அந்தக் கிராமத்திலுள்ள ஏழைகளின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய யோசனைகள் பண்ணி நிறை வேற்ற வேண்டும். அன்பினால் உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றிவிடலாம். அங்ஙனம் செய்யாமல் அஜாக்கிரதையாக இருந்தால், ஐரோப்பாவைப் போல் இங்கும், ஏழை செல்வர் என்ற பிரிவு பலமடைந்து விரோதம் முற்றி, அங்கு ஜனக்கட்டு சிதறும் நிலைமையிலிருப்பது போல், இங்கும் ஜனசமூஹம் சிதறி மஹத்தான விபத்துக்கள் நேரிட இடமுண்டாகும்.

பொருளாளிகள் இடைவிடாத உழைப்பையும், அன்பையும், ஸமத்துவ நினைப்பையும் கைக்கொண்டான், உலகத்தில் அநியாயமக உத்பாதங்கள் நேரிட்டு உலக மழியாமல் காப்பாற்ற முடியும். பராசக்தி மனுஷ்ய ஜாதியை அன்பிலும் ஸமத்துவத்திலும் சேர்த்து நலம் செய்க.