பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, June 26, 2015

சிலம்புச் செல்வர் ம.பொ.சி



தலைநகர் காத்த வீரர், வடவெல்லை வென்ற மாவீரர், தேவிகுளம், பீர்மேட்டை தமிழகத்தில் சேர்க்கப் போராடிய செம்மல், சிலப்பதிகாரத்தை பட்டி தொட்டிகளில் பரவச் செய்த அறிஞர், தமிழ் எங்கள் உயிர் என்று வாழ்ந்து காட்டிய உயரிய தேசபக்தர், அவருடைய தியாகங்களுக்குச் சரியான மரியாதையைப் பெறாத மாமனிதர் சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. அவர்கள் பிறந்த நாள் ஜூன் 26. அவரையும் அவரது சாதனைகளையும் நினைவில் கொள்வோம்.

Tuesday, June 16, 2015

மாவீரனின் நினைவு நாள்

 தமிழகத்தின் தலைசிறந்த தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு தாங்கொணா துயரங்களைக் கொடுக்கக் காரணமாயிருந்த, நெல்லை கலெக்டர் ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்று, தானும் மாண்டுபோன மாவீரன் வாஞ்சிநாதன்.அந்த மாவீரனின் நினைவு நாள் இன்று! 
17 june 2015

Sunday, June 14, 2015

கும்மி

இந்த கும்மி பழந்தமிழ்ப் பாடல் அல்ல. சென்ற நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக இருக்க வேண்டும். மதுரை கோபுரம் எனக் குறிப்பு உள்ளதாலும், இதே சொற்றோடர், "மதுரை கோபுரம் தெரிந்திடச் செய்த மருதுபாண்டியர் பாருங்கடி" என்று காளையார்கோயிலைப் பற்றிய பாடலில் வருவதால், இது அவர் காலத்திய பாடலாகவும் இருக்கலாம்.படிக்க சுவாரசியமாக இருக்கிறது. படியுங்கள்.


நன்னன்னா கொட்டவும் நாளாச்சு - அம்மா
        நாணயமான ஏரிக்குள் ளேதான்
    ஏரிக்குள் ளேஒரு படகு போகுது
        ஏலேலம் கொட்டடி கூலிக்காரி. 
                 1
கல்லு மலைமேலே கல்லுருட்டி - அந்தக்
        கல்லுக்கும் கல்லுக்கும் அணைபோட்டு
    மதுரைக் கோபுரம் தெரியக் கட்டி - நம்ம
        மன்னவன் வாறதைப் பாருங்கடி. 
               2
இரும்பு நாற்காலி போட்டுக்கிட்டு - அவர்
        எண்ணெயும் தேச்சுத் தலைமுழுகி
    எல்லா வேலையும் முடிச்சுக்கிட்டு - அவர்
        எப்போ வருவாரு கச்சேரிக்கு?                   
3
வாறாரு போறாரு என்றுசொல்லி - அவள்
        வாழை யிலையிலே பொங்கல் வச்சால்
    வந்தாப் போலேதான் வந்துகிட் டிருந்து
        வெண்கலக் கூடாரம் அடிச்சாராம்.             
4
புற்றுமண்ணை வெட்டிப் பொங்கல்வைத்து - அவள்
        புள்ளை தவத்துக்குப் போகையிலே
    புள்ளையும் கொடுப்பார் புண்ணிய சாலி
        புன்னை மரமேநீ தான்சாட்சி.                     
5
வண்ணான் தப்புற கல்லுமேலே - அடா
        வழி நடக்கிற சேவகரே
    சித்திரை மாசம் கலியாணம் - நாங்கள்
        சொல்லிவிட்டுப் போனோம் பட்டாளம்.   
    6
     
கொண்டவனை அடிக்கிற பெண்டுகளா - உங்கள்
        தொண்டைக்கு என்னாங்கடி கம்மலு
    தொண்டை வலிக்குச் சாராயம் - அந்தத்
        தொடை வலிக்கு வெந்நீரு.                          
7
முத்தே முத்தேநீ கும்மியடி - அடி
        மோகன முத்தேநீ கும்மியடி
    கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச் சுக்கட்டும்
        கண்ணாடி முத்தேநீ கும்மியடி.                    
8
ஓடாதே ஓடாதே தொள்ளைக் காதா - நீ
        ஓட்டம் பிடிக்காதே இல்லிக்கண்ணா
    மாட்டு எலும்பை எடுத்துக்கிட்டு - நான்உன்
        மார்பெலும்பை யெல்லாம் தட்டிடுவேன்.    
9
பத்துப் பெண்களும் கூடிக்கிட்டு - நம்ம
        பட்டணம் மைதானம் போகையிலே
    பார்த்துக்கிட் டிருந்த பறப்பயல் ஒருத்தன்
        பட்டுமுந் தாணிமேல் ஆசைவைத்தான்.     
  10     
ஊரான் ஊரான் தோட்டத்திலே - அங்கே
        ஒருத்தன் போட்டது வெள்ளரிக்காய்
    காசுக்கு ஒண்ணொண்ணு விற்கச்சொல்லி - அவன்
        காயிதம் போட்டானாம் வேட்டைக்காரன்.   
11   

வேட்டைக்கா ரன்பணம் வெள்ளிப்பணம் - அது
        வேடிக்கை பார்க்குது சின்னப்பணம்
    வெள்ளிப் பணத்துக்கு ஆசைவச்சு- அவள்
        வீராயி வந்தாடி ஆராயி.                               
12
தேனும் உருளத் தினைஉருள - அந்தத்
        தேங்காய்த் தண்ணீரும் அலைமோத
    மாங்காய் கனிந்து விழுகுதுபார் - அந்த
        மகராசன் கட்டின தோட்டத்திலே.               
13
இந்தநல்ல நிலா வெளிச்சத்திலே - அம்மா
        என்னைக்கல் லாலே அடிச்சதாரடி
    அவர்தாண்டி நம்ம எல்லாருக்கும் மாமன்
        அன்று மாம்பழங் கொடுத்தவரு.                 
14
ஆற்று மணலிலே ஊற்றெடுத்து - அம்மா
        அஞ்சாறு மாசமாச் சண்டைசெய்து
    வேற்று முகப்பட்டு வாறாரே - அம்மா
        வெள்ளிசங் கங்கட்டி வீசுங்கம்மா.              
15
நாகப் பட்டணக் கடற்கரையில் - நம்ம
        நல்லவே ளாங்கண்ணித் தாயாரு
    ஆவணிமாசம் பதினெட்டாந் தேதியில்
        அம்மா புதுமையைப் பாருங்கம்மா.          
   16 
குச்சியும் குச்சியும் பொன்னாலே - அந்த
        ஆவாரங் குச்சியும் பொன்னாலே
    திருப்பத் தூரு தேவமா தாவுக்குத்
        திருமுடி கூடப் பொன்னாலே.                    
17
புலியைக் குத்திப் புலிவாங்கி - அந்தப்
        புலிவாயைத் திறந்து மிளகா யரிஞ்சு
    சோடிப் புலிகுத்தும் நம்மண்ணன் மாருக்குச்
        சுருளு வருவதைப் பாருங்கம்மா. 
                18
அக்காதங் கச்சிகள் ஏழுபே ருநாங்கள்
        ஆருக்கும் அடங்காத வேங்கைப்புலி
    வெள்ளிப் பிரம்பைத்தான் கையிலே பிடித்தால்
        எங்கேயும் பறக்கும் வேங்கைப்புலி.          
19
பாக்கு பட்டையிலே சோறாக்கி - அந்தப்
        பாலத்துக் குமேலே நெய்யுருக்கித்
    தேக்கிலையிலே தீனிபோட் டுத்தின்னத்
        தொரைமாரு எப்போ வருவாங்களோ? 
      20
நடுக்காட்டுக் குள்ளே தீயெரிய - நம்ம
        நாலு துரைமாரும் தீனிதின்ன
    இவள்தாண்டி மதுரை மீனாட்சி - சீலை
        இழுத்துப்போர்த் திக்கிட்டு வாறாளடி.        
21



தஞ்சை மராத்தியர் கால நாட்டிய நாடகங்களின் தொடக்கக் காட்சி.

      
(அந்தக் கால நாட்டிய நாடக மரபின்படி கட்டியக்காரன் மேடையில் தோன்றி பேசும் பாங்கினை விளக்கும் விதமாக 'மாதிரி உரையாடல்' இங்கே காணலாம். கீழ்கண்ட தொடக்கக் காட்சி உரையாடல் "விஷ்ணு சாஹராஜ கல்யாணம்" எனும் நாடகத்தில் வருவது. ஷாஜி மன்னரின் அவைக்களப் புலவர்கள் இயற்றியதாக இருக்கலாம். இதில் ஷாஜி மன்னன் பாட்டுடைத் தலைவனாகவைத்து இயற்றப்பட்டிருக்கிறது. புராண பின்னணியோடு அமைந்த இந்த நாடகம் ஷாஜி வழிபடும் திருவீழிமிழலைத் தலத்துக்கு வந்து ஈசரை மகாவிஷ்ணு வழிபட்ட வரலாறு சொல்லப்படுகிறது. ஆயிரம் செந்தாமரை மலர்களைக் கொண்டு விஷ்ணு அர்ச்சிப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. அப்போது சிவபெருமான் காட்சி தருவதாக அமைந்தது இந்த கதை. இனி....)

நாடகம் துவக்கப்படுவதற்கு முன் அரங்கில் கட்டியக்காரனைச் சூத்திரதாரன் அறிமுகம் செய்து வைக்கிறான். கட்டியக்காரனுக்கும் சூத்திரதாரனுக்கும் நிகழும் உரையாடல் பின்வருமாறு அமைந்திருக்கும். 17ஆம் நூற்றாண்டில் பேச்சு வழக்கு எப்படி இருந்தது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. 3ஆம் ஷாஜி ராஜா தஞ்சையை ஆண்ட காலத்தில் எல்லா நாடகங்களிலும் இதுபோன்ற உரையாடல்களைக் கேட்கலாம். இந்த உரையாடல் நடக்கும் சமயம் மேடையில் சூத்திரதாரனும் கட்டியக்காரனும் இருப்பர்; இசைக் குழுவினர், தலைமை நட்டுவன், தாளக்காரன் ஆகியோரும் இருப்பர்.

இந்த உரையாடல்கள் இசை நாட்டிய நாடகங்களுக்குப் பொதுவானவை எனினும், இங்கு தரப்படும் உரையாடல்கள் "விஷ்ணுசாகராஜ விலாசம்" எனும் நாடகத்தில் வருபவை, இது அந்த நாடகச் சுவடிகளில் காணப்படுபவை. அப்போது தமிழ் நாட்டில் நாட்டிய ஆசிரியர்கள் நாடகத்தை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு இந்த சுவடியே ஆதாரம். மக்கள் கேட்டு மகிழும் பாங்கில் அன்றைய பேச்சு நடைமுறையில் இவை அமைந்திருக்கும். 17ஆம் நூற்றாண்டில் தஞ்சை நகரில் நடைபெற்ற நாடக முறை பாங்கு இது.

அன்றைய தஞ்சையை ஆண்டவர்கள் தமிழ், தெலுங்கு, மராத்தி மொழியாளர்கள். முதலில் சூத்திரதாரன் மேடையில் தோன்றுவான். அரங்கில் மக்கள் ஆர்வத்தோடு கூடியிருந்து நாடகத்தைக் காணக் காத்திருக்கின்றனர். அப்போது கட்டியக்காரன் அங்கினுள் நுழைகிறான், இருவரும் உரையாடுகிறார்கள்.

சூத்திரதாரன்: (கட்டியக்காரனை நோக்கி) அடேய், நீ எங்கேயிருந்து வாராய் சொல்லடா?

கட்டியக்காரன்: மகாவிஷ்ணு சாமியண்டையிருந்து வந்தேனையா.

சூ: நீ வந்த காரியமென்ன தெரியச் சொல்லடா?

க: நம்முடைய மகாவிஷ்ணு வீழிநாத மகாலிங்க ஸ்வாமியைச் சேவிக்க வருகிறார் என்று சகல ஜனங்களுக்கும் எச்சரிக்க வந்தோமையா.

(சூத்திரதாரனும் கட்டியக்காரனும் பேசிக்கொண்டிருக்கும்போது
நட்டுவனார் அரங்குக்கு வருகிறார்.)

சூ: நட்டுவனாரே, நாம் ஆடற பாடற சபையிலே இவன் ஆரோ தெரியாது, வந்திருக்கிறானே! இவனுடைய பட்டை நாமம் என்ன, பட்டு துப்பட்டி என்ன, தாடி என்ன, கட்டியக்கோல் என்ன, இவனுடைய பூர்வோத்தரம் கேட்க வேணுமே!

சூ: சரி. அரே பாய்! தும் கோன்றே (ஹிந்துஸ்தானியில் நீ யாருடா?)

க: (காதில் வாங்கிக் கொள்ளாமல்) அம்மம்மா! இந்தப் பந்தல் பார்க்க மெத்த நன்னாயிருக்கே!

சூ: ஓய் நட்டுவனாரே! இவனுக்கு உத்தராதி பாஷை தெரியாது. மராட்டி பாழையாலே கூப்பிடவேணும்! அஹாதூ கோடூன்? (எங்கேயிருந்து வருகிறாய்) ஆலாஸ கா! (கட்டியக்காரன் கவனிக்காமல்)

நட்: ஐயா! அப்படிக் கூப்பிட்டாலும் பேசவில்லையே. இனிமேல் கன்னட பாஷையில் கூப்பிடவேணும் போலயிருக்கே!

சூ: எலே தம்பி! (கன்னடத்தில்) எல்லித்து பந்தயோ? (இப்போதும் கவனிக்கவில்லை)

நட்: ஐயா, அப்படியும் பேசவில்லையே. வடுக பாஷையினாலே கூப்பிடுவோமே!

சூ: (வடுகில் என்று குறிப்பிடப்படுவது தெலுங்கு) ஓயி நாயடா? ஏடனுண்டி வொஸ்தி வோயி?

நட்: ஐயா, அப்படியும் பேசவில்லை. சோழ மண்டலம் தமிழிலே கூப்பிடவேணும் அப்போ பேசுவான்.

சூ: (தமிழில்) ஓய் நாயக்கரே, எங்கேயிருந்து வந்தீர் காண்? (நெற்றியில் பட்டை நாமம் போட்டிருந்ததால் நாயக்கரே என்றழைக்கிறான்)

கட்டியக்காரன் பேசவில்லை. ஒருகால் இவனுக்குக் காது கேட்கவில்லையோ என்று சூத்திரதாரன், ஒரு காதுப் பக்கம் போய் கூப்பிடுகிறான். பதில் இல்லை. மற்றொரு காதுப் பக்கம் போய்க் கூப்பிடுகிறான், அதற்கும் பதில் இல்லை. சூத்திரதாரன் கட்டியக்காரனைச் சுற்றி வருகிறான். அப்போது தன்னை அவன் அடிக்க வருகிறானோ என்று கட்டியக்காரன் கையில் கம்புடன் சூத்திரதாரனை அடிக்க ஓங்கி மிரட்டுகிறான்.

சூ: அடே பைத்தியக்காரா! உன்னோடு சண்டையில்லை. உன்னை இனிக் கூப்பிட மாட்டேன். நாங்கள் எல்லோரும் இங்கே கூடிக்கொண்டு வீழிநாத ஸ்வாமி ஸந்நிதியிலே நாட்டிய நாடகம் ஆடுகிறோம். நீ யார் என்று கேட்டோம்.

க: ஓஹோ! நீ யாரடா?

சூ: நான் வித்வானடா.

க: என்ன வித்வாங்கனை? நம்மிடம் சொல்லுடா?

சூ. நான் சொல்றதிருக்கட்டும் நீ எங்கேயிருந்து வந்தாய் முதலில் சொல்லடா?

க: வடக்கே போ (கையை வடபுறம் காட்டி)

சூ: பீஜாபுரத்திலேயிருந்து வந்தாயோ?

க: சே! அங்கே யார் மகனாகப் போனாய்? இங்கே திரும்படா (மேற்கே கை காட்டி)

சூ: ஆனை, மலையாளமா?

க: இப்படித் திரும்பு (கிழைக்கை நோக்கி)

சூ: ராமேஸ்வரத்திலேர்ந்து வந்தாயா?

க: இப்படித் திரும்பு (வேறு பக்கம் காட்டி)

சூ: வேதாரண்யமா?

க: சற்றே இந்தப் புறம் போ.

சூ: திருவாரூரா?

க: ரெண்டு முழம் இப்படித் திரும்பு.

சூ: கும்பகோணமா? கெளரி மாயூரமா? திருவிடைமருதூரா? சீர்காழியா? வைத்தியநாதன் கோயிலா?

க: அடடே நில்லு. அத்தனை தூரம் யார் மகனாய்ப் போகிறாயடா? சற்றே இப்புறம் (கோலால் தரையில் கோடு போட்டுக் காட்டுகிறான்)

சூ: சாலியமங்கலமா? மாரியம்மன் கோயிலா? தஞ்சாவூரா?

க: சபாஷ்டா! நம்ம பின்னே வா (ஒரு பக்கமாக அழைத்துப் போகிறான் அங்கு ஒரு கம்பத்தைக் காட்டுகிறான்) ஒசக்க ஏறு! கெட்டியாய்ப் பிடிச்சுக்கோடா (சுத்திரதாரன் ஏறுகிறான்)

க: ஒரு காலை விடு, இந்தக் காலையும் விடு. அந்தக் கையை விடு. இந்தக் கையையும் விடு. கீழே விழு.

சூ: ஓய் பலே. நன்னாச்சு. காலொடிஞ்சால் எப்படி?

க: ஒரு பந்தக்கால் கொடுக்கிறோம். (இருவரும் முன்னால் வருகின்றனர்)

சூ: இதெல்லாம் இருக்கட்டும்! நீ எங்கேயிருந்து வந்தாய்? நிலவரமாய்த் தெரியச் சொல்லுடா?

க: அந்த வீட்டிலேயிருந்து இங்கே வந்தேன்.

சூ: உன்னோட வாசம் எங்கே?

க: வாசுதேவனிடத்தில்.

சூ: வாசுதேவனென்றால் எனக்குத் தெரியாது.

க: சின்னப்போ மண்டி போட்டுக்கொண்டு அரி நரி என்று படிக்கவில்லையா? அதாவது மகாவிஷ்ணு வாசலிலே இருக்கிற கட்டியக்காரன் நானடா!

சூ: அட பைத்தியக்காரா! ஏண்டா இப்படி நாலு மூலையிலும் சுத்துகிறாய் நம்மை.

க: பைத்தியக்காரன் நானோ, நீயோ. நம்ம மகாவிஷ்ணு எங்கே பார்த்தாலும் அங்கெல்லாம் இருப்பாரடா.

சூ: அது சரி, நீ வந்த காரியம் என்ன சொல்லுடா.

க: நம்முடைய மகாவிஷ்ணு வீழிநாத மகாலிங்கத்தைச் சேவிக்க வரார் என்று சகல ஜனங்களுக்கும் எச்சரிக்க வந்தேனடா.

சூ: அதற்கு என்னென்ன செய்ய வேணும்டா.

க: ஸதிரு, கிதிரு, மெத்தே, கித்தே, தலகணி, பூ, சந்தனம், கிந்தனம், தூபம், தளிகை, நட்டு முட்டு, தீவட்டி

சூ: அடே சகலமும் இங்கே இருக்கிறது. நீ போய் மகாவிஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வா போ.

க: பாக்கி எல்லோரையும் நீ இழுத்துக் கொண்டு வா.

சூ: இதோ வந்துவிட்டார்கள் (மகாவிஷ்ணுவைத் தவிர யாவரும் வருகிறார்கள் அரங்குக்கு) 

க: நீ யாரடா? மெட்டுக்காரனா? முட்டிக்கோ! ஐயா மத்தளக்காரா, இந்தப்பக்கம் தட்டு. அந்தப்பக்கம் தட்டு, நடுவே தட்டு (மத்தளக்காரன் ஓசை எழுப்புகிறான்)

க: பூனைக்காரப் பொட்டி மவனே. இந்தப் பக்கம் டும்! அந்தப் பக்கம் டும்! நடுவிலே ஒண்ணுமில்லைடா.

க: (ஒருவனைப் பார்த்து) நீ யாரடா?

நட்டு: நாந்தான் நட்டுவம்.

க: கையிலே என்னடா?

நட்டு: தாளம் ஐயா.

க: அடி!

நட்டு: தித்தித்தே (தாளத்தில்)

க: இது எந்தத் தாளம்?

நட்டு: இது திருபுடை.

க: எங்கே திருடிக் கொண்டு வந்தாய்? இந்தத் தாளம் பேரு சொன்னால் உச்சிதம் (உயர்வு) என்ன?

நட்டு: உன் மேலே பாட்டுப் பாடறோம்.

க: இந்தத் தாளம் பேரு?

நட்டு: ஒன்று இரும்பு ஒன்று வெண்கலம்.

க: (மற்றொருவனிடம்) நீ யாரடா?

பாடகன்: நாந்தான் பாடகன்.

க: ஆ! பாடு.

பாடகன்: ஆ....................

க: நிறுத்தடா ஆங்காதே. வாய்மூடி கண் மூடிக் கொண்டு ஆகாசம் பார்த்துக் கொண்டு பாடு.

சூ: சரி சரி. நீ வந்து அனேக நேரமாச்சு. மகா விஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வாடா போடா.

க: அந்தத் தாளம் பேரு சொன்னால் நம்ம மேலே பதம் பாடறோம் என்றாயே. இப்போ பாடு. நம்முடைய பட்ட நாமம், பட்டுத் துப்பட்டி, கட்டியக் கோல், இதெல்லாம் வச்சு ஒரு மேளம் நீளமாக ஏலபதம் திரி.

சூ: நல்ல காரியம்.

க: "பட்
டை நாமம் இட்டுக் கொண்டு" (பாடுகிறான்)

சூ: வாடா கட்டியக்காரா! உன் மேலே பாடினோம். சீக்கிரமாகப் போய் மகாவிஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வா. (கட்டியக்காரன் உள்ளே போகிறான். பின்னர் நாடகம் துவங்குகிறது.)

  (இந்த உரையாடல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகச் சுவடி எண் 639இல் உள்ளபடி தரப்படுகிறது)

                                                                (நிறைவடைந்தது)

Friday, June 12, 2015

ஊடகங்களின் சுதந்திரம்


சமீப காலமாக தனியார் தொலைக்காட்சி சேனல்களில் பிரபலமாக இருக்கும் பல்துறை தலைவர்களைப் பேட்டி காண்கிறார்கள். அப்படி பேட்டி காண்பவர்கள் கண்டிப்பான வாத்தியாராக நினைத்துக் கொண்டு, எதிரில் பதிலளிக்கும் தலைவரின் தகுதி, அந்தத் தகுதியை அவர் பெறுவதற்கு எத்தனை காலம் பிடித்தது, எத்தனை போராட்டங்கள், அனுபவங்கள், வெற்றி தோல்விகள் இவைகளைக் கண்டவர்கள் என்ற எண்ணமே இல்லாமல் ஏதோ, தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆசிரியர் விரட்டுவதைப் போல உரத்த குரலில் மடக்கி மடக்கி கேள்விகள் கேட்பதும், பதில் வராவிட்டால் அடித்து விடுபவர்களைப் போல குறுக்கே புகுந்து இடைமறித்து அவர்களை பதில் சொல்ல முடியாமல், கேள்வி மேல் கேட்டு திணற அடிப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். 

பத்திரிகை சுதந்திரம், ஊடகங்களின் உரிமைகள் இவைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்கூட இத்தகைய அநாகரிகமான நடவடிக்கைகளை நாம் அனுமதிக்க முடியாது. தலைவர்கள் என்போர் அவர்களுக்கு கட்சி பலம் எப்படி இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் தலைவர்களாக ஆவதற்கே எத்தனையோ தியாகங்கள் புரிந்திருப்பார்கள்.  பல துறைகளில் அனுபவம் பெற்றிருப்பார்கள். அவர்கள் செயல்பாடுகளில் ஏற்றமும் உண்டு இறக்கமும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு பேட்டி எடுப்பவர்கள் எந்த வகையிலும் பெரியவர்களாக ஆக முடியாது. 

ஒரு ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தலைவர்களிடம் எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் கேட்க முடியுமா? அதிலும் ஊடகக் காரர்கள் தராதரம் வைத்திருக்கிறார்கள். சிலரிடம் அடக்கி வாசிப்பார்கள்; பணிவும் மரியாதையும் முகத்திலும் குரலிலும் தவழ்ந்து விளையாடும். கொஞ்சம் அப்பை சப்பையான தலைவர் கிடைத்து விட்டால் போதும் தம்பிகள் சண்டப்பிரசண்டம் செய்து விடுகிறார்கள். 

ஒர் ஆங்கில சேனலில் ஒருத்தர் இருக்கிறார். பேட்டி எடுப்பதில் பெயர் போனவராம். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்வது போல அவருக்குக் கேட்கத்தான் தெரியும் போலிருக்கிறது. கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக மூச்சு விடாமல் கேட்டுக் கொண்டே இருப்பார். எதிரில் இருப்பவர் முதல் கேள்விக்கு பதில் சொல்லி முடிக்கு முன்பாக அடுத்த கேள்வியை வீசுவார். முகத்தில் ஒரு கேலிச் சிரிப்பு. ஆஹா, எப்படி கொக்கி போட்டு இழுத்து அவரை திணர அடிக்கிறேன் பார் என்பது போல இருக்கும் அந்த சிரிப்பு. இந்தப் போக்கை இவர் எல்லோரிடத்தும் பின்பற்றுவார். எல்லோருமா இவருக்கு அனுசரித்துப் போவார்கள். ஒரு சிலர் போய்யா! நீயும் உன் பேட்டியும் என்று கோபப்பட்டுக் கொண்டு எழுந்து போயிருக்கிறார்கள். அதில் அவருக்கு ஒரு குரூர திருப்தி. 

இன்னொருவர், அதே போல இன்னொரு ஆங்கில சேனலில் இருக்கிறார். தனக்கு நிகர் தானே என்பது போன்ற நினைப்பு. ஒரு முறை இவர் பிரதமர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவரை எப்போதும் போல நினைத்துக் கொண்டு அலட்சியமாகக் கேள்வி கேட்கப் போக அமைச்சரவை செயலரோ அல்லது பொதுஜன தொடர்பு அதிகாரியோ, யாரிடம் இப்படி பேசுகிறாய் அவர் பிரதமர் என்பதை நினைவில் கொள் என்று ஒரு போடு போட்டதும்தான் தம்பிக்கு சப்த நாடியும் அடங்கியது. பின்னர் அதே குணம் திரும்ப வந்து பிடித்துக் கொண்டு விட்டது. அதிலும் தேர்தல் சமயத்தில் ஒரே சண்டப் பிரசண்டம்தான். ஆங்கில சேனல்களில் நான் முதலா நீ முதலா என்பதில் ஒரு சர்ச்சை, அதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள்தான் காரணிகளாக இருக்கும் போல் தெரிகிறது. தலைவர்களை அதிகமாக அதட்டி கேள்வி கேட்டது நீயா நானா என்பது.

இவற்றையெல்லாம் தமிழ் சேனல்காரர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? இவர்களுக்கும் அவர்களைப் போலவே அதிகார தோரணையில், அதட்டும் குரலில், பள்ளி மாணவரை மடக்கும் ஆசிரியரைப் போல கேள்வி கேட்டு திணற அடிப்பதில் ஒரு திருப்தி. 

இதில் என்ன வேடிக்கை தெரியுமா? எந்த பேட்டியிலும் பேட்டி அளித்தவரின் கருத்து மேலோங்கி இருக்காது. இவர்கள் நிலையத்தில் ஹோம் ஒர்க் பண்ணி வைத்து அவர்களை பதில் சொல்ல முடியாமல் அடித்துவிட்டு, அவர்களை வென்றுவிட்டதைப் போல ஒரு மிதப்பு உண்டாகி விடுகிறது. இவர்கள் எல்லாம் ஒரு டி.வியில் கூலிக்கு வேலை செய்பவர்கள். தலைவர்கள் பொது மக்களுக்காக, நல்லதோ இல்லையோ ஏதேனும் செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்க நினைப்பவர்கள். அப்படி அவர்கள் பாடுபட்டு கட்டிய மனக்கோட்டைகளை தடிகொண்டு தாக்கி இடித்துத் தரை மட்டமாக்கிவிட்டதாக இவர்கள் கொக்கரிப்பது சரியான பத்திரிகை, ஊடக சுதந்திரமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் எத்துணை உயர் கல்வி கற்றிருந்தாலும், இவன் பணியாற்றும் நிறுவனத்தில் இவனுக்கு மேல் உயர் அதிகாரியாக இருப்பவன் குறைந்த கல்வித் தகுதி படைத்திருந்தாலும், அவனுக்கு உரிய மரியாதையைத் தந்துதான் பேச வேண்டும். தாந்தோன்றித் தனமாக உயர் அதிகாரியிடம் வாய் கொடுத்து மாட்டிக் கொண்டால், சீட்டு கிழிந்துவிடும். ஆனால் இப்போது ஒரு உணர்வு. உலகத்தில் யாரையும், எதையும் கேட்கவோ, அவர்களைத் திணற அடிக்கவோ உரிமை படைத்தவர்கள் நாங்கள் எனும் எண்ணம் உருவாகிவிட்டது. அதில் ஏதேனும் எதிர்ப்பு வந்து விட்டால் போச்சு மைக்கின் முன்னால் மணிக்கணக்கில் தனி மனித சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழிய பேசத் தலைப்பட்டு விடுகிறார்கள். 

இந்த ஊடகங்கள் அடிக்கும் கூத்துகளில் இன்னொன்று மிக முக்கியமானது. அன்று நாட்டில் நடைபெற்ற ஏதாவதொரு நிகழ்ச்சி பற்றி பலதரப்பட்ட கட்சிகளிலிருந்து, அந்தந்த தொலைக்காட்சி சேனல்கள் குத்தகைக்கு எடுத்த அதே நபர்கள் எல்லா விவாதங்களிலும் கலந்து கொள்வார். பேட்டி தொடங்கும். அவ்வளவுதான், யாருடைய கட்சி பலவீனமானதோ, அந்தப் பிரதிநிதி பேசுவார் பாருங்கள், அடுத்தவர்களைப் பேசவிடாமல் தானே ஏதோ சொற்பொழிவு நிகழ்த்துவது போல நினைத்துக் கொண்டு, அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தை தானே எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை ஒருவழி பண்ணிவிடுவார்கள். 

இதில் பங்கேற்பவர்களில் அப்பை சப்பையான ஆட்கள் இருந்தால், கடைசிவரை அவர் வாயைத் திறக்க முடியாது, அப்படி மீறி திறந்தாலும் நமது அடாவடி பேச்சாளர் தானே பேசி ஒருவழி பண்ணிவிடுவார். இல்லையென்றால், ஒரே நேரத்தில் இருவர் அல்லது மூவர் தாங்கள் சொன்னதையே திரும்பத் திரும்ப உரத்த குரலில் சொல்லிக்கொண்டு, எதிராளி புதிதாக எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பார்கள். 

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் தான் நமக்கு அமைதி கிடைக்கும். நாம் தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடப்பதை முணுமுணுப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் மனைவிமார்கள், நிகழ்ச்சி முடிந்ததும் விடும் பெருமூச்சு நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடும். அவர்கள் பார்வை நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இனிமே விவாதம் அது இது என்று டி.வி.முன்னால் உட்கார்ந்தால் அவ்வள்வுதான், வீட்டில் சோறு கிடையாது என்று சொல்வது போல இருக்கும். இருந்தாலும் மறுநாளும் நாம் அந்த சண்டைக் காட்சிகளைப் பார்க்காமல் இருப்பதுமில்லை;  மனைவி முறைத்துக் கொண்டு சோறு போடாமல் இருப்பதுமில்லை. 

காலணிகள் எல்லாம் காலில் போட்டுக் கொள்ளத்தான் இருக்கிறது. அந்தந்த அளவுக்கு கால் அளவு உள்ளவர்கள் தகுந்த காலணிகளை அணியலாம். 10 எண்ணுள்ள காலணியை 7 எண்ணுக்குரிய காலில் அணிந்தால்? அதுதான் இப்போது நடக்கிறது.


இந்தியா ‍‍.... ஒரு விநாடி வினா நிகழ்ச்சி.


திருவையாறு பாரதி இயக்கம்
(உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தியது)

1. இந்தியா எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது?       15 ஆகஸ்ட் 1947
2. இந்திய தேசியக் கொடியில் என்னென்ன வண்ணங்கள் உள்ளன? காவி, வெள்ளை, பச்சை.
3. தேசியக் கொடியில் வெள்ளைப் பகுதியில் இருக்கும் 'சக்கரம்' யாருடையது? அசோகர்
4. இந்திய தேசிய கீதத்தை இயற்றியவர் யார்? ரவீந்திரநாத் தாகூர்
5. இந்தியாவின் தேசியப் பறவை எது? மயில்
6. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது? ஹாக்கி
7. தயான் சந்த் எனும் விளையாட்டு வீரர் எந்த விளையாட்டில் சிறந்து விளங்கினார்? ஹாக்கி
8. நரி கண்ட்ராக்டர் என்பார் எந்த விளையாட்டில் இந்திய கேப்டனாக இருந்தார்? கிரிக்கெட்
9. நடன வகையில் 'குச்சிபுடி' என்பது இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது? ஆந்திரா
10. இந்தியாவில் கள்ளிக்கோட்டை, கோவா ஆகிய இடங்களில் வந்திறங்கிய ஐரோப்பியர்கள் யார்? போர்த்துகீசியர்
11. வடகிழக்கு மாநிலங்கள் என்பவை எவை? அசாம், நாகாலாண்ட், அருணாசலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா.
12. இந்திய மாநிலங்களி கல்வி அறிவு அதிகம் உள்ள மாநிலம் எது? கேரளா
13. எந்த விளையாட்டில் ஏஸ், டபுள் ஃபால்ட், செகண்ட் சர்வீஸ், கேம் பாயிண்ட் எனும் சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன? டென்னிஸ்
14. சானியா மிர்சா என்பவர் எந்த விளையாட்டில் சிறந்து விளங்குபவர்? டென்னிஸ்
15. தமிழ்நாட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு நீர்வீழ்ச்சியின்ன் பெயர்? குற்றாலம்,
16. இந்தியாவில் முதன் முதல் தொடங்கப்பட்ட அணு ஆராய்ச்சி மையம் எங்கு உள்ளது?   டிராம்பே, மும்பாய்.
17. இந்தியாவில் கப்பல் கட்டும் தொழில் எந்த நகரத்தில் இருக்கிறது? விசாகப்பட்டினம்.
18. தமிழ்நாட்டில் ரயில் பெட்டிகள் கட்டும் தொழிற்சாலை இருக்குமிடம்? பெரம்பூர்,சென்னை
19. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு அணுமின் நிலையங்களின் பெயர்கள்? கல்பாக்கம், கூடங்குளம்
20. ஆக்ரா நகரம் எந்த சக்ரவர்த்திகளின் தலைநகரமாக இருந்தது? முகலாய சக்ரவர்த்திகள்.
21. ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் இடம் எது? தாஜ்மகால்
22. தாஜ்மகால் யாரால் யாருடைய நினைவாகக் கட்டப்பட்டது?
ஷாஜஹானால், அவர் மனைவி மும்தாஜ் மஹல் நினைவாக.
23. இந்தியாவில் பொதுவாக நதிகள் எந்த திசையிலிருந்து எந்த திசை நோக்கி ஓடுகின்றன?
மேற்கிலிருந்து கிழக்காக.
24. இந்தியாவில் கிழக்கிலிருந்து மேற்காக ஓடி கடலுக்குள் செல்லும் இரு நதிகள் எவை?  நர்மதா, தப்தி
25. இந்தியாவில் ஓடுகின்ற நதிகள் அனைத்துக்கும் பெண் பெயர்கள்தான்; ஆண் பெயரில் ஓடும் ஒரு நதி எது? பிரம்மபுத்ரா
26. இந்திய பேரரசர்களில் பகதூர் ஷா என்பார் யார்? கடைசி முகலாய மன்னர்.
27. தமிழ்நாட்டை ஆண்ட சில வேந்தர்கள் பரம்பரையினர் யாவர்? சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்
28. பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய நகரம் எது? காஞ்சிபுரம்
28. வடநாட்டில் இந்துக்கள் புனிதநதியாக வழிபடும் நதி எது? கங்கை
29. கங்கை நதி உற்பத்தியாகும் இடத்துக்கு என்ன பெயர்? கங்கோத்ரி
30. கங்கையோடு அலகாபாத் எனுமிடத்தில் கலக்கும் வேறு நதிகள் எவை? யமுனை, சரஸ்வதி
31. இந்தியாவில் மராத்திமொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மாநிலம் எது? மகாராஷ்ட்டிரா
32. கொணாரக் எனுமிடத்தில் சூரியனுக்கு ஒரு கோயில் உண்டு, அது எந்த மாநிலம்? ஒடிஷா
33. நிஜாம் மன்னர்கள் ஆண்ட ராஜ்யத்தின் தலைநகராக இருந்த ஊர் எது? ஐதராபாத்
34. தமிழகத்தில் தேயிலை, காபித் தோட்டங்கள் அதிகமுள்ள மாவட்டம் எது? நீலகிரி
35. தமிழ்நாடு அரசின் இலச்சினையில் காணப்படும் கோயில் எந்த ஊர் கோயில்? ஸ்ரீவில்லிபுத்தூர்
36. தமிழ்நாடு அரசின் இலச்சினையில் காணப்படும் வாசகம் எது? 'வாய்மையே வெல்லும்'
37. தற்போதைய டெல்லி மத்திய அரசியில் தமிழகத்தைச் சேர்ந்த கேபினட் அமைச்சர் யார்?
பொன்.ராதாகிருஷ்ணன்
38. ஜெம்ஷெட்பூர் எனும் ஊர் எந்த மாநிலத்தில் இருக்கிறது? சட்டிஸ்கர்
39. This Year குடியரசு தினவிழாவில் "பாரதரத்னா" விருது பெறும் இருவர் பெயர்?
அடல்பிகாரி வாஜ்பாய், மதன்மோகன் மாளவியா.
40. தமிழ்நாட்டில் "பாரதரத்னா" விருது பெற்ற வேறொரு தலைவர்? எம்.ஜி.ஆர்.
41. நாகார்ஜுனசாகர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? கிருஷ்ணா
42. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்படுத்திய தலைவர்:  திலகர் 1893
43. 'டில்லி சலோ' எனும் கோஷத்தைக் கொடுத்த சுதந்திரப் போராட்ட வீரர் யார்? நேதாஜி
44. 'புரட்சி' எனும் சொல்லை தமிழில் பயன்படுத்தியவர் யார்? பாரதியார்
45. 'புரட்சி ஓங்குக' 'இன்குலாப் ஜிந்தாபாத்' எனும் கோஷம் முதலில் எழுப்பியவர் யார்? பகத்சிங்
46. பாரதியாரின் குரு சகோதரி நிவேதிதாவின் இயற்பெயர் என்ன? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அயர்லாந்து, எலிசெபத் நோபிள்
47. தமிழ்நாட்டில் முதற் தமிழ்ச்சங்கம் இருந்த நகரம் எது? மதுரை
49. சிலப்பதிகாரம் எழுதிய ஆசிரியர் யார்? சிலம்பு கதை எந்த ஊரில் தொடங்குகிறது?  இளங்கோவடிகள், காவிரிப்பூம்பட்டினம்
50. ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவி ஏற்கும்போது பதவிப் பிரமாணம் செய்து வைப்பது யார்? ஐகோர்ட் தலைமை நீதிபதி
51. முதலமைச்சர் பதவியேற்பின்போது பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர்? கவர்னர்
52. ஒரு மாநில சட்டசபையின் நிர்வாகத்துக்கு யார் பொறுப்பானவர்? சபாநாயகர்
53. காந்திஜியின் சமாதி எந்த நகரத்தில் இருக்கிறது, அதற்கு என்ன பெயர்? டெல்லி, ராஜ்காட்
54. நேருவின் இல்லம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, அந்த மாளிகை இருக்கும் நகரம்?  அலகாபாத்
55. நேருவின் தந்தையார் பெயர் என்ன? மோதிலால் நேரு
56. வல்லபாய் படேலின் சொந்த மாநிலம் எது? குஜராத்
57. தமிழ் நாட்டில் ஆலயப் பிரவேசம் நடத்தி அனைவரும் கோயிலுக்குள் செல்லலாம் என சட்டமியற்றிய முதல்வர்?  ராஜாஜி
58. மதுரையில் ஆலயப் பிரவேசம் நடத்திய காங்கிரஸ் தலைவர் யார்? மதுரை வைத்தியநாத ஐயர்
59. கீழ்கண்ட கதாபாத்திரங்கள் எந்த காப்பியத்தில் வருகிறார்கள்?
நகுலன்: மகாபாரதம்
குடிலன்: மனோன்மணீயம்
சகுனி: மகாபாரதம்
தாரை: இராமாயணம்
சபரி: இராமாயணம்
மாடல மறையோன்: சிலப்பதிகாரம்
கவுந்தி அடிகள்: சிலப்பதிகாரம்
சீவகன்: சீவகசிந்தாமணி

60. மக்சேசே விருது பெற்ற தமிழ்நாட்டு இசையரசி யார்? எம்.எஸ்.சுப்புலட்சுமி
61. இந்தியாவில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்தது எந்த ஊர், எந்த மாநிலம்?  பொக்ரான், ராஜஸ்தான்
62. தமிழ் வழக்கில் "கல்வியில் சிறந்தவர் ............." யார்? கம்பர்.
63. சுதந்திரப் போராட்ட காலத்தில் "கேசரி", "மராட்டா"  பத்திரிகை நடத்தியவர்? திலகர்
64. தமிழ்நாட்டில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்துக்குத் தலைமை வகித்தவர் யார்? எந்த ஊரில்?  வேதாரண்யம், ராஜாஜி.
65. மது அருந்துவதால் நம் உடலில் பாதிக்கப்படும் உறுப்பு எது? கிட்னி
66. கதக்களி, மோகினியாட்டம், துள்ளல் இந்த வகை நடனங்கள் எந்த மாநிலம்? கேரளம்
67. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள்? எத்தனை யூனியன் பிரதேசங்கள்? 29 மாநிலம் 7 யூனியன் பிரதேசம்.
மாநிலங்கள்: ஆந்திரபிரதேசம், அருணாசல பிரதேசம், அசாம், பிகார், சட்டிஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாசல் ப்ரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாட்கா, கேரளா, மத்யபிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்திரபிரதேசம், உத்தர்கண்ட், மே.வங்கம்.

யூனியன் பிரதேசம்: அந்தமான், நிகோபார், சண்டிகர், தாத்ரா & நாகர்ஹவேலி, டாமன் & டையு, லட்சத்தீவுகள், புதுடில்லி, புதுச்சேரி.

68. இந்தியாவின் வடமேற்கில் இந்திய எல்லையையொட்டி அமைந்துள்ள நாடுகள்?  ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான்
69. நமது தேசிய கொடியின் அளவு எந்த விகிதத்தில் அமைந்துள்ளது? 2:3
70. நமது தேசிய கீதம் எந்த மொழியில் முதன்முதல் பாடப்பட்டது? வங்காளி
71. பக்கிம்சந்திர சட்டர்ஜி இயற்றிய ஒரு பாடலை பாரதியார் இருமுறை மொழிபெயர்த்தார், அது எந்தப் பாடல்? வந்தேமாதரம்
72. நமது தேசிய மிருகம் எது? வரிப்புலி
73. தேசிய மரம் எது? ஆலமரம்
74. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேறிய ஆண்டு? 1949
75. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தல் நடந்த ஆண்டு? 1952
76. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்? அவர் எந்த மாநிலத்தவர்?  பாபு ராஜேந்திர பிரசாத், பிகார்.
77. முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்றவர் யார்? ராஜாஜி
78. மொழிவாரி மாநிலம் எப்போது பிரிக்கப்பட்டது? முதலில் அமைந்த மொழிவாரி மாநிலம் எது?
1.10.1953, ஆந்திரா பின்னர் அது ஆந்திர பிரதேசம் எனப் பெயரிடப்பட்டது.
79. பர்மா எனப்படும் மயன்மார் இந்தியாவிலிருந்து எப்போது பிரிக்கப்பட்டது?
1-10-1937இல் நேரடியாக பர்மாவை பிரிட்டிஷ் ஆட்சி
80. எந்த மாகாணம் மகாராஷ்டிரா, குஜராத் என்று பிரிக்கப்பட்டது? எந்த ஆண்டில்?  1960இல் பம்பாய்.
81. நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து குடியரசுத் தலைவரான தலைவர் யார்?  நீலம் சஞ்சீவி ரெட்டி
82. கேரள மாநிலத்தின் தலைநகரம் எது? திருவனந்தபுரம்
83. மத்திய பிரதேசத் தலைநகர் எது? போபால்
84. இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர் யார் எந்த ஆண்டில்? ஏ.ஓ.ஹ்யூம் 1885
85. ஜம்மு கஷ்மீரின் ஆட்சி மொழி எது? In Jammu and Kashmir, the principal spoken languages are Kashmiri, Urdu, Dogri, Pahari, Balti, Ladakhi, Gojri, Shina and Pashto. However, Urdu written in the Persian script is the official language of the state.
86. இந்தியாவின் அண்டை நாடாக இருந்து பின்னர் இந்தியாவோடு ஒரு மாநிலமாக இணைந்த நாடு எது? சிக்கிம் 16-5-1975
87. இந்தியாவின் ஒரே கவர்னர் ஜெனரலாக இருந்த இந்தியர்? ராஜாஜி
88. இந்தியாவில் மத்திய அரசு 13 நாட்கள் மட்டுமே இருந்து பதவி விலகியது, அந்த பிரதமர் யார்? அடல்பிகாரி வாஜ்பாய்
89. இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே சிறிய மாநிலம் எது? கோவா
90. இந்திய அரசின் இலச்சினையில் எத்தனை சிங்க முகங்களைப் பார்க்க முடியும்? 3
91. தேசியக் கொடியின் வெள்ளைப் பகுதியிலுள்ள சக்கரம் எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும்?   நேவி நீலம்
92 இந்தியாவில் மிக நீளமான நதி? கங்கை 2525 கி.மீ நீளம்
93. கிரீன்விச் நேரத்துக்கும் இந்திய நேரத்துக்குமுள்ள வித்தியாசம் எவ்வளவு? 5-1/2 மணி
94. புத்த மதத்தை ஸ்தாபித்தது யார்? சித்தார்த்தர்
95. இந்தியப் பெண்கள் நெற்றியில் திலகமிட காரணம் என்ன? திலகம் இருந்தால் மனோவசியம் செய்யமுடியாது என நம் முன்னோர்கள் நம்பினார்கள்.
96. இந்தியாவை இந்துஸ்தான் என்கின்றனர், அப்படியென்றால் என்ன பொருள்? Land of Water என்று பாரசீக மொழிச் சொல்.

India is also referred to as Hindustan. What does the word “Hindustan” mean ?
Land of water in Ancient Persian
Country of Hindus in Ancient Arabic
Land of Hindu Kush mountains in Ancient Sanskrit
Land of plenty in Ancient Pali

97. சவுதி அரேபியாவில் மெக்கா நகரத்தில் பிறந்த இஸ்லாமிய கல்விமான் ஒருவர் இந்தியாவில் நேரு காலத்தில் கல்வி மந்திரியாக இருந்திருக்கிறார்? அவர் யார்? மெளலான அபுல்கலாம் ஆசாத்.
98. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான் நம் நாடு இந்தியா எனப்பட்டது. அதற்கு முன்பு இந்த தேசத்துக்கு என்ன பெயர்? பாரதம், பாரதநாடு.
99. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பயந்தயத்தில் தங்கம் வென்ற வீரரின் பெயர்? மில்கா சிங்
100. துரோணாச்சார்யா விருது எந்த பிரிவினருக்குக் கொடுக்கப் படுகிறது? விளையாட்டு வீரர்களுக்கு
101. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டு சம்பந்தப்பட்டது? டென்னிஸ்
102. துராண்ட் கோப்பை எந்த விளையாட்டுக்கு? கால்பந்து
103. வட இந்தியாவில் ஏற்பட்ட ஒரு புரட்சி அதில் நானா சாகேப், லக்ஷ்மிபாய் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த புரட்சியின் பெயர் என்ன? அது எந்த ஆண்டு நடந்தது?         சிப்பாய் கலகம்/முதல் சுதந்திரப் போர் 1857
104. மகாத்மா காந்தி சுதந்திரத்துக்காக1942இல் ஒரு இயக்கம் தொடங்கினார், அதன் பெயர் என்ன? Quit India
105. ஹோம்ரூல் இயக்கம் என்ற பெயரில் சுதந்திரத்துக்காக ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. அதை தொடங்கிய தலைவர் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?   அன்னிபெசண்ட். அயர்லாந்து.
106. I.N.A. எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவர் யார்? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
107. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?    அம்பேத்கர்
108. மகாபாரதத்தில் குந்தி சூரியனை வேண்டி ஒரு குழந்தை பெற்று அதை கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள். அந்த குழந்தை ஒரு தேரோட்டியிடம் வளர்ந்து பெரியவனாகி துரியோதனனுடன் சேர்ந்து கொண்டது. அவன் யார்?           கர்ணன்.
109. மகாபாரதத்தில் குரு துரோணர் அர்ஜுனனுக்கு வில்வித்தை சொல்லிக் கொடுத்ததை ஒரு சிறுவன் பார்த்துக் கொண்டிருந்து அவனும் பெரும் வில்லாளியானான். அவனது கட்டை விரலை குரு தட்சிணையாகக் கொடுக்கும்படி குரு துரோணர் கேட்டார். அந்த வில்லாளி யார்?   ஏகலைவன்.
110. மகாபாரதப் போரில் சக்கரவியூகத்தை உடைத்தெறிந்து உட்புகுந்தான் ஒரு வீரன். ஆனால் அவனுக்கு வியூகத்தை உடைத்து வெளிவரத் தெரியாது. அதனால் அவன் கெளரவர்களால் கொல்லப்பட்டான். அவன் யார்? அபிமன்யூ.
111. மகாபாரதத்தில் பீமனுக்கும் இடும்பி எனும் அசுரப் பெண்ணுக்கும் பிறந்த மகன் போரில் துரியோதனன் படைவீரர்கள் பலரைக் கொன்று குவித்து தானும் மாண்டான். அவன் பெயர்?   கடோத்கஜன்.
112. எந்த அறிவியல் கூறுகள் தண்ணீரை உருவாக்குகிறது? ஆக்சிஜன் + ஹைட்ரஜன்.
113. பூமிக் கோளத்தில் உள்ள தண்ணீரில் எத்தனை சதவீதம் நம் பயன்பாட்டுக்குக் கிடைக்கிறது?    0.3% மட்டுமே
114. பூமிக் கோளத்தில் தண்ணீரின் பரப்பு எத்தனை சதவீதம்? 75% தண்ணீர் 25% தரைப் பகுதி.
115. நீரிலிருந்து எடுக்கப்படும் மின்சாரத்துக்கு என்ன பெயர்? Hydroelectric
116. மனித உடலில் எத்தனை சதவீதம் தண்ணீர் இருக்கிறது? 80 சதவீதம்
117. தண்ணீரின் கொதியளவு என்ன? எத்தனை டிகிரியில் கொதிக்கிறது? 100 Centigrade
118. ஹிந்து புராணங்களில் மழைக்குக் கடவுள் யார்? இந்திரன்
119. அமெரிக்கர்கள் விரும்பி ஆடும் ஆட்டம், மரத்தால் ஆன மட்டை, குதிரைத் தோலால் மூடிய பந்து?               பேஸ்பால்.
120. ஓட்டப் பந்தயத்தில் On your mark, get, set, go! என்றதும் அவர்கள் ஓடும் நேரத்தைக் கணக்கிட ஒரு கருவி உண்டு. அதன் பெயர் என்ன? Stop Watch.
121. ஓட்டப் பந்தய வீரர்கள் காலில் அணியும் பூட்சின் பெயர்?     Spikes.
122. ஒரு கால்பந்து போட்டியில் ஒரு குழுவில் எத்தனை வீரர்கள்? 11
123. பீலி (Pele) or (the Black Pearl) எனும் பெயர் கொண்ட ஒரு விளையாட்டு வீரர் இருக்கிறார். அவர் எந்த விளையாட்டில் சிறந்தவர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?                                      Football. Brazil.
அவருடைய இயற்பெயர் நீளமானது: Edson Arantes Do Nascimento.
124. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த நாயகன் யார்?
சசின் டெண்டுல்கர். 33 மேட்ச் 1732 ஓட்டங்கள்.
125. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்களை அடித்தவர், எந்த நாடு?   ஆஸ்திரேலியா. ரிக்கி பாண்டிங் 8
126. இந்திய நகரம் ஒன்றில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட மூன்று ஸ்டேடியங்கள் உண்டு. எங்கு?  மும்பை. அவை: ஜிம்கானா, வாங்கடே, பார்போர்ன் ஆகிய 3 ஸ்டேடியங்கள்.
127. கிரிக்கெட் மட்டை செய்யப் பயன்படும் மரத்தின் பெயர்: வில்லோ
128. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் சம்பந்தப்பட்டது? டென்னிஸ்
129. கூடைப் பந்து விளையாட்டில் ஒரு குழுவில் எத்தனை வீரர்கள் விளையாட முடியும்? 5
130. செஸ் விளையாடும் போர்டில் மொத்தம் எத்தனை கட்டங்கள் உண்டு? 64
131. எந்த விளையாட்டில் Dribbling எனும் சொல் பயன்படுத்தப் படுகிறது? கூடைப்பந்து
132. இங்கிலாந்திலிருந்து பிரான்சு கடற்கரைக்கு இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர் யார்? மிகிர் சென்.
133. இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை டைகர் என்பார்கள். யார் அவர்?
டைகர் பட்டோடி. /மன்சூர் அலிகான் பட்டோடி
134. ஈஸ்டர் பண்டிகை எதைக் குறித்து கொண்டாடுகிறோம்? இயேசு உயிர்த்தெழுந்தார்
135. ஈஸ்டர் எந்த கிழமையில் வரும்? ஞாயிறு
136. குட் ஃப்ரைடே என்பது எதைக் குறிக்கும்?              இயேசு சிலுமையில் அறையுண்ட தினம்
137. ஜைன மதத்தை ஸ்தாபித்தவர் யார்?               மகாவீரர்
138. முஹரம் பண்டிகை யாருடைய இறப்புக்கு துக்கம் அனுஷ்டிக்கிறோம்? இமாம் ஹுசேன்
139. பஞ்சாபில் 'பைஷாகி' என்றும் அசாமில் 'Bohag Bihu' என்றும் கொண்டாடப்படும் பண்டிகை எதைக் குறித்து? பயிர் அறுவடை தொடங்கும் பண்டிகை.
140. இந்தியக் காடுகளிலும், பர்மாவிலும் 3000 ஆண்டுகளாக விளையும் பழங்கள் இது. ஐரோப்பாவுக்கு போர்த்துகீசியர்களால் 300 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்லப்பட்ட பழம் எது? மாம்பழம்
141. வெல்லம், இஞ்சி கலந்த இந்த பானம் ராமநவமியன்று படைப்பார்கள்? பானகம்.
142. Festival of Lights எனப்படும் இந்து பண்டிகை எது? தீபாவளி
143. கிருஷ்ண பரமாத்மா பிறந்த நாள் பண்டிகை எது? ஜன்மாஷ்டமி, ஸ்ரீஜயந்தி
144. நாகப் பாம்புகளை பூஜிக்கும் விழாவுக்கு என்ன பெயர்? நாகபஞ்சமி
145. கேரளத்தின் புகழ் மிகுந்த நாட்டிய நாடகம்?           கதக்களி
146. நமது தெருக்கூத்து போன்றதொரு கன்னட தெருக்கூத்து?        யட்சகானம்
147. யானைகளின் சரணாலயத்தின் பெயர்?              பேரியாறு
148. கேரளம் கோட்டக்கல்லில் பிரபலமான வைத்தியம், அதன் பெயர்? ஆயுர்வேதம்
149. ஓணம் பண்டிகையின்போது 'வள்ளம் களி' என்றொரு நிகழ்ச்சி, அது என்ன?  Back Watersஇல் பாம்பு படகு போட்டி
150. காவிரி நதி உற்பத்தியாகும் இடம் எது? எந்த மாநிலம்? தலைக்காவேரி, கர்நாடகம்.
151. பரப்பளவில் தமிழ்நாடு இந்தியாவில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது? 11ஆவது
152. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன?     32
153. தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாவட்டம் எது?           விழுப்புரம்
154. தமிழ்நாட்டில் மிகச்சிறிய மாவட்டம் எது?            சென்னை
155. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைக் கட்டியவர் யார்?         மன்னன் குலசேகர பாண்டியன்
156. தமிழ்நாட்டில் முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?  சர் சி.வி.ராமன்
157. சங்கீத நாடக அகாதமி டில்லி ஒப்புதல் அளித்துள்ள நடன வகைகளில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடனம் எது?              பரத நாட்டியம்
158. கல்லணையைக் கட்டியவர் யார்?             கரிகால் சோழன்
159. தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் எது?            காளிதாஸ்
160. தமிழ்நாட்டில் உயரமான மலைச்சிகரம் எது? தொட்டபெட்டா/நீலகிரி
161. தமிழ்நாட்டில் பழமையான பறவைகள் சரணாலயம் எது? வேடந்தாங்கல்
162. தமிழ்நாட்டில் காவிரியில் கட்டப்பட்ட பழமையான அணை எது? மேட்டூர்
163. தமிழ் மொழிக்கு முதன்முதல் இலக்கணம் வகுத்தவர் யார்? அகத்தியர்
164. திருமுருகாற்றுப்படை இயற்றிய புலவர் யார்? நக்கீரர்
165. மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் எந்த அரசபரம்பரை? பல்லவா
166. வடக்கே சிப்பாய் கலகம் நடந்த ஆண்டு எது? 1857
167. சிப்பாய் கலகத்துக்கு முன்னதாகவே தமிழகத்தில் நடந்த சிப்பாய் கலகம் எங்கு நடந்தது?    1800இல் வேலூரில்
168. திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவர் யார்? சி.என்.அண்ணாதுரை
169. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவர் யார்? எம்.ஜி.ஆர்.
170. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் சின்னம் என்ன? கதிர் அரிவாள்
171. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் சின்னம் என்ன? அரிவாள், சுத்தியல், நட்சத்திரம்
172. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் எது? கை
173. பத்ம விபூஷன் விருது பெற்ற முதல் விளையாட்டு தமிழர் யார்? எந்த விளையாட்டு? விஸ்வநாதன் ஆனந்த்/செஸ்
174. சர் சி.வி.ராமன் எந்த ஆண்டில் நோபல் பரிசு பெற்றார். 1930
175. சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த முதல் தமிழ்ப் படம் எது? பராசக்தி 1950
176. உலகில் மிகப் பெரிய பறவை எது? நெருப்புக்கோழி
177. தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதைக் குறிக்கிறது.      தியாகம்
178. முதல் சுதந்திரப் போர் எங்கு யாரால் எந்த ஆண்டு தொடங்கியது? பாரக்பூர், மங்கள்  பாண்டே, 1857
179. 'சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்' சொன்னவர்? திலகர்
180. காங்கிரசின் முதல் தலைவரான முதல் பெண்மணி? அன்னிபெசண்ட்
181. 'சாரே ஜஹான் சே அச்சா' இயற்றியவர் யார்? முகமது இக்பால்
182. இந்திய தேசிய கீதம் எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது?    24-1-1950
183. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீரர்?         ராகேஷ் ஷர்மா
184. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்?     அம்பேத்கர்
185. முதலை தன் குட்டியை எப்படித் தூக்கிச் செல்லும்? வாயால் கவ்விச் செல்லும்
186. ராஜ்யசபா உறுப்பினரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?    ஆறு 6
187. நாடாளுமன்ற தேர்தலில் நிற்க தகுதியுள்ள வயது?     25 வயது
188. 'வெள்ளி விழா' என்றால் எத்தனையாவது ஆண்டு?     25 ஆண்டுகள்
189. 'பொன் விழா' என்றால் எத்தனையாவது ஆண்டு?         50 ஆண்டுகள்
190. 'வைர விழா' என்றால் எந்த ஆண்டில்?                                60 ஆண்டுகள்
191. தென் இந்தியாவுக்கு தெற்கே உள்ள கடல்?            இந்துமகா சமுத்திரம்
192. தென் இந்திய கடற்கரையையும் இலங்கையும் பிரிக்கும் கடல்?      பாக் ஜலசந்தி
193. தமிழ்நாடு எனும் பெயர் வைக்கப்படுவதற்கு முன்பு என்ன பெயர்? சென்னை மாகாணம்
194. தமிழ்நாட்டின் தற்போதைய கவர்னர் பெயர் என்ன?        ரோசையா
195. கிரிக்கெட்டில் கோபாலன் டிராபி யார் யாருக்கிடையே நடக்கும்? இலங்கை - இந்தியா
196. சென்னை நகரின் ஒரு பகுதி சென்ற நூற்றாண்டில் தென்னந்தோப்பு
மிகுந்திருந்ததால் அந்த பெயரால் அழைக்கப்பட்டது,    அது எது? தென்னம்பேட்டை (தேனாம்பேட்டை)
197. சென்னைக்கு ஆருகில் டாங்க் தொழிற்சாலை உள்ள இடம்?    ஆவடி
198. தமிழர் ஒருவர் விம்பிள்டன் செமி ஃபைனல் சென்றார், அவர் யார்? ராமநாதன் கிருஷ்ணன்
199. முஹரம் பண்டிகையின் போது சென்னையில் ஆற்காடு நவாப்
மாளிகையில் முன்பெல்லாம் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படும்
அந்தப் பகுதிக்கு இப்போது என்ன பெயர்?    ஆயிரம் விளக்கு
200. கலைகள் கற்க சென்னையில் 1936இல் நிறுவப்பட்டது?     கலாக்ஷேத்ரா
201. தமிழ் நடிகை ஒருவரின் திறமையைப் பாராட்டி ரஷ்யா ஒரு
அஞ்சல் தலை வெளியிட்டது. யார் அவர்? நடிகை பத்மினி 

கோபாலகிருஷ்ண பாரதியார் (1811 - 1896)

                                         
கர்நாடக இசையுலகில் தமிழிசைக்கு முன்னவர்களாகக் கருதப்படுபவர்களில் கோபாலகிருஷ்ண பாரதியாரும் ஒருவர். இவர் பல தமிழ் சாகித்தியங்களை இயற்றியிருந்தாலும், கதாகாலக்ஷேபத் துக்காக இவர் இயற்றிய 'நந்தனார் சரித்திரம்' மிகவும் புகழ்பெற்று விட்டது. கர்நாடக சங்கீத உலகின் மிகப்புகழ்பெற்ற ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமகால வாக்யேயக்காரர் இவர். ஸ்ரீதியாகராஜர் திருவையாற்றில் காவிரிக் கரையில் வாழ்ந்தா ரென்றால், கோபாலகிருஷ்ண பாரதியார் மயிலாடுதுறை என இப்போது பெயர் வழங்கும் மாயூரத்தில் அப்போது வாழ்ந்து வந்தார். 

இவர் ஒரு முறை ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளை தரிசனம் செய்ய திருவையாறு வந்தார். அவர் வந்த நேரத்தில் ஸ்ரீ சுவாமிகள் தன்னுடைய சீடர்களுக்கு ஆபோகி ராகம் பாடம் எடுத்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டைவிட்டு காவிரியில் ஸ்நானம் செய்வதற்காக வெளியே புறப்பட்டு வந்தார். அப்போது அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு சுவாமிகள் ஆபோகி ராகம் பாடம் நடத்தியதைக் கேட்டு மெய்மறந்து உட்கார்ந்திருந்தார். அப்போது சுவாமிகள் இவரை எங்கிருந்து வந்திருக்கிறார் என்று விசாரித்தபோது தான் மாயூரத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னதும், சுவாமிகள் அங்கு கோபாலகிருஷ்ண பாரதி என்பவர் சாஹித்தியங்கள் இயற்றுகிறாரே அவரை உங்களுக்குத் தெரியுமோ என்று வினவ, இவர் அடியேன் தான் அந்த கோபாலகிருஷ்ண பாரதி என்றதும் சுவாமிகள் மகிழ்ச்சியடைந்தார். உங்களை இங்கு பார்த்ததில் நிரம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டு, நீங்கள் ஆபோகியில் ஏதாவது கீர்த்தனம் செய்திருக்கிறீர்களோ என்று வினவ, அவர் இதுவரை இல்லை என்று பதில் சொன்னார். சுவாமிகளும் காவிரிக்குச் சென்றுவிட்டார். 

கோபாலகிருஷ்ண பாரதியார் நேரே ஐயாறப்பர் ஆலயம் சென்று அங்கு ஆதி விநாயகர், நவகிரகம் இருக்கும் தியான மண்டபம் சென்று உட்கார்ந்து தியானத்தில் அமர்ந்தபின்னர் ஒரு பாடலை இயற்றி முடித்தார். அதுதான் கோபாலகிருஷ்ண பாரதியாரின் புகழ்மிக்க ஆபோகி ராக கீர்த்தனை "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?" என்பது. இப்படி இவர் திருவையாற்றில் வந்து உட்கார்ந்து கொண்டு தில்லை சபாபதிக்கு யார் சமானம் என்று பாடவேண்டும் என்பதைப் பற்றி விளையாட்டாக விமர்சனம் செய்த ஒருவர் சொன்னார், ஸ்ரீதியாகராஜர் ராமனுக்கு நிகர் யார் என்றுதானே பாடிக் கொண்டிருக்கிறார், தான் செய்யும் கீர்த்தனையில் தான் வழிபடும் தில்லை நடராஜனுக்கு சமானம் யார் என்று பாடினார் என்று சொன்னார். இது அப்படி போட்டிக்குப் பாடியதல்ல என்றாலும், அந்த விமர்சனமும் சுவையாகத்தான் இருக்கிறது.

இவர் மாயூரத்தில் வாழ்ந்த காலத்தில் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்த்தாத்தா என்று புகழ்பெற்ற உ.வே.சாமிநாத ஐயர் தமிழ் பயின்று கொண்டிருந்தார். உ.வே.சா.வின் தந்தையார் ஒரு சங்கீத உபன்யாசகர். அந்த வகையில் அவரிடமிருந்த சங்கீதத்தையும் உபன்யாசக் கலையையும் உ.வே.சா. கற்று வைத்திருந்தார். மாயூரத்தில் தமிழ் படிக்க வந்த இடத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் இருப்பதறிந்து இவருடைய தந்தையார் உ.வே.சா.வை அவரிடம் இசையும் கற்றுக் கொள்ளப் பணித்தார். ஆனால் குருநாதர் பிள்ளை அவர்கள் உ.வே.சா.விடம் ஒன்று தமிழ் படி அல்லது இசையைக் கற்றுக்கொள், இரண்டில் எது என்பதை நீயே முடிவு செய்து கொள் என்றதும் ஐயர் தமிழே என்று முடிவு செய்து கொண்டார்.

கோபாலகிருஷ்ண பாரதியார் இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில், இப்போது எண்ணெய் கிடைக்கும் கிராமமான நரிமணம் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் ராமசுவாமி சாஸ்திரிகள். அவரும் ஒரு சிறந்த கர்நாடக சங்கீத வித்வான். மாயூரத்தில் அப்போது ஏராளமான வேத பண்டிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படியொரு பெரும் பண்டிதரிடம் இவர் அத்வைத சித்தாந்தத்தையும், யோக சாஸ்திரத்தையும் பயின்றார். இவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், துறவறமும் ஏற்றுக் கொள்ளாமல் ஒரு பிரம்மச்சாரியாக சந்நியாசி வாழ்க்கை வாழ்ந்தார். இவருடைய குடும்பத்தில் அனைவருமே சங்கீதம் கற்றவர்கள். ஆகையால் இளம் வயதிலேயே இவருக்கு கர்நாடக சங்கீதம் கைவரப் பெற்றுவிட்டது. நாளடைவில் சங்கீதத்தில் நல்ல தேர்ச்சியும் பெற்று விளங்கினார். குடும்பத்தில் சங்கீதம் கற்றுக் கொண்டதோடு, இவர் பல பெரிய வித்வான்களின் கச்சேரிகளுக்கெல்லாம் சென்று கேட்டு, கேள்வி ஞானத்தால் தன் இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார். அப்படி இவர் இசையொன்றிலேயே, வேறு சிந்தனைகள் இல்லாமல் ஆழ்ந்து இருந்த காரணத்தால், நல்ல சங்கீதம் பாடவும், அதற்கேற்ற வகையில் புதிய சாகித்யங்களை இயற்றவும் திறமை பெற்றார். 

மாயூரத்தில் இவர் பெரும் அறிஞர்களிடம் அத்வைத சித்தாந்தம் பயின்ற காரணத்தால் இவருடைய கீர்த்தனங்களில் மிக எளிதாக அத்வைத கருத்துக்களை உள்ளடக்கி இயற்றிப் பாட முடிந்தது. மகாகவி பாரதியார் தன்னுடைய "சங்கீத விஷயம்" எனும் கட்டுரையில் சொல்லியிருக்கிறபடி, பண்டைய காலத்து மகான்களின் பாடல்களைப் பாடுவதோடு, புதிதாகவும் பாடல்களை இயற்றிப் பாட முயற்சி செய்ய வேண்டும் எனும் கருத்துக்கேற்ப இவர் புதிய புதிய சாஹித்யங்களை இயற்றிப் பாடினார். பாரதி சொன்ன வாக்குப்படி "பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்காதீர்கள்" என்பதற்கேற்ப இவர் புதிய இசைக் கிணறு வெட்டி அதில் ஊறிய சுவையான இசை நீரைப் பருகத் தொடங்கினார். அதற்கு சுவைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் இருந்தது.
கோபாலகிருஷ்ண பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே பல சங்கீத வித்வான்கள் இவருடைய பாடல்களைத் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிவிட்டார்கள். அப்போதெல்லாம் ஜமீன்தார்கள் சங்கீத வித்வான்களை அழைத்து கச்சேரிகள் செய்யச் சொல்வது வழக்கம். அப்படி பல ஊர்களிலும் நன்கு தேர்ந்த இசை ரசிகர்கள் மத்தியில் இவருடைய பாடல்கள் பல வித்வான்களாலும் பாடப்பட்டன. சில இசைக் கலைஞர்கள் இவரிடம் வந்து தங்களுக்குப் புதிதாக இன்னமாதிரியிலான கருத்து கொண்ட சாகித்தியங்கள் தேவையென்று கேட்பார்கள்; இவரும் அவர்களுக்கேற்ற பாடல்களை இயற்றித் தந்திருக்கிறார். இவருடைய பாடல்களில் தன்னுடைய பெயரை 'முத்திரை'யாகப் பயன்படுத்தியிருப்பதை நாம் காணமுடியும். 

அந்த நாட்களில் பற்பல கதைகளை இசை மூலமாகவும், பாட்டிடையிட்ட கதைகளாகவும் கதாகாலக்ஷேப பாணியில் சொல்வது வழக்கம். அந்த வகைக்கு ஏற்றார்போல இவர் பாடல்களையும் கதைகளை உள்ளடக்கி எழுதி வந்தார். அந்த முறையில்தான் இவர் பெரிய புராணத்தில் உள்ள "திருநாளைப்போவார்" சரித்திரத்தை சிறிது ஆங்காங்கே மாற்றி வேதியர் போன்ற சில புதிய பாத்திரங்களைப் படைத்து "நந்தனார் சரித்திரம்" எனும் இசை நாடக நூலை இயற்றினார்.

"திருநாளைப்போவார்" வரலாற்றில் நந்தன் என்பார் ஒரு தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த விவசாயி. தில்லை நடராசப் பெருமான் மீது அளப்பரிய பக்தி கொண்டவர். தினந்தோறும் வயல்வேலைகள் முடிந்தபின் தில்லை நடராசப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்று நினைப்பார். ஆனால் வேலை இருந்து கொண்டே இருப்பதால் அப்படிச் சென்று தரிசிக்க இயலவில்லை. இறுதியில் இவர் தில்லை சென்று தரிசிக்க முயலும்போது குறுக்கே நந்தி அமர்ந்து மறைக்க, இவர் பாடியதும் அது நகர்ந்து வழிவிட, இவர் ஜோதியில் கலந்தார் என்கிறது புராணம். கதைக்குச் சுவை சேர்க்கவேண்டி இவர் அதில் மறையவர் எனும் பாத்திரமொன்றை படைத்து, அவர் நந்தனை தில்லை செல்லாதபடி வேலை வாங்கியதாக கோபாலகிருஷ்ண பாரதியார் கற்பனையை ஓடவிட்டுவிட்டார். அந்த சுவை சேர்த்த பகுதி நாளடைவில் தமிழகத்தில் ஜாதிப் பிரச்சனையாக உருவெடுத்த கொடுமையும் நடந்தது. கற்பனை பாத்திரம் கொடுத்த கேடு இது.

இவருடைய பாடல்களும் சரி, அதன் கருத்துக்களும் சரி மிக மேலானவைகள். ஆனால் பாடல்களில் தமிழிலக்கணம் கடைபிடிக்கப்படவில்லை என்பது சிலர் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையே கூறியிருக்கிறார். இவர் ஏராளமான பாடல்களை இயற்றியிருந்தும் இவருடைய 'நந்தன் சரித்திரம்' பிரபலமடைய அன்று தஞ்சை மண்ணை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர்களும் ஒரு காரணம். அது என்ன? இப்போது ஹரிகதா எனும் கதாகாலக்ஷேப முறையை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் மராட்டிய மன்னர்கள். அதனால் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரம் ஹரிகதை முறையில் எங்கும் பிரபலமானது. இவர் தனது 85ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் 390க்கும் மேற்பட்ட ஏராளமான பாடல்கள் புகழடைந்திருந்தாலும் இங்கு ஒருசில பாடல்களைப் பார்க்கலாம்.





வ.எண்பாடல் தலைப்புஇராகம்தாளம்
01உத்தாரந் தாரும்தோடிஆதி
02எல்லோரும் வாருங்கள்கேதாரம்ரூபகம்
03ஐயே மெத்தகடினம்புன்னாகவராளிஆதி
04கண்டாமணியாடுதுகரகரப்ரியாரூபகம்
05காணாத கண்ணென்னநாதநாமக்ரியைசாபு
06கோபுர தரிசனமேதன்யாசிஆதி
07சற்றே விலகியிரும்பூரிகல்யாணிரூபகம்
08தில்லை வெளியிலேயமுனா கல்யாணிஆதி
09தில்லையம்பலத் தலஉசேனிரூபகம்
10நந்தா நீசிவநாதநாமக்ரியைசாபு
11பித்தந்தெளிய மருந்செஞ்சுருட்டிரூபகம்
12மார்கழிமாதத் திருவாதிரைநவரோசுஆதி
13அரகர சங்கரதண்டகம்*
14ஆடிய பாதத்தைத்அசாவேரிதிச்ரம்
15ஆடுஞ்சி தம்பரமோபேஹாக்ரூபகம்
16ஆடியபாதா இருவர்சங்கராபரணம்ரூபகம்
17ஆனந்தக் கூத்தாடினார்கல்யாணிரூபகம்
18இன்னமும் சந்தேகப்கீரவாணிமிச்ர ஏலம்
19உனது திருவடிசரசாங்கி / வதாங்கிஆதி
20எந்நேரமும் உந்தன்தேவகாந்தாரிஆதி
21எப்போ வருவாரோசெஞ்சுருட்டிஆதி
22கனகசபாபதி தரிசனம்தன்யாசிஆதி
23சங்கரனைத் துதித்தாடுதோடிஆதி
24தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத்நாதநாமக்ரியைஆதி
25தாண்டவ தரிசனந்தாரும்ரீதிகௌனசம்பை
26திருவாதிரை தரிசனதிற்குதன்யாசிதிரிபுட
27தில்லையைக் கண்டபோதேவிருத்தம்*
28பக்தி பண்ணிக்தண்டகம்*
29பாடுவாய் மனமேசெஞ்சுருட்டிஆதி
30பார்க்கப் பார்க்கத்அபிகாம்போதிரூபகம்
31பிறவாத வரந்தாருஆரபிஆதி
32வேதம் படித்ததும்தண்டகம்*
33தில்லையக்கண்ட போதேவிருத்தங்கள்*
34ஆடிய பாத தரிசனம்யதுகுல காம்போஜிஆதி - 2 களை
35ஆடிய பாதமேஅசாவேரிமிச்ர சாபு
36கண்டேன் கலிகல்யாணிரூபகம்
37கண நாதா சரணம்மோகனம்ஆதி
38கைவிட லாகாதுமலஹரிரூபகம்
39குஞ்சித பாதத்தைபந்துவராளிரூபகம்
40தில்லை தில்லைகாபிஆதி
41தேவா ஜெகன்கல்யாணவசந்தம்ஆதி
42நடனம் ஆடினார்மாயமாளவ கௌளைமிச்ர சாபு
43நந்தா உனக்கிந்தமோகனம்ஆதி
44பாதமே துணைபூர்ணசந்த்ரிகஆதி
45மாதவமே ஓசாமாரூபகம்
46இந்தப் பிரதாபமும்சுத்தசாவேரிஆதி
47இது நல்லதன்யாசிஆதி
48சிதம்பரம் போகாமல்செஞ்சுருட்டிஆதி
59தொண்டரைக் காண்கிலமேசஹானாஆதி
50பேயாண்டி தனைக்சாரங்காகண்டசாபு
51போதும் போதுகமலாமனோஹரிஆதி
52மனது அடங்குவதால்கௌளி பந்துஆதி
53மோசம் வந்ததேஆபோகிஆதி
54திருநாளைப் போவான்கமாசுஆதி
55பழனம ருங்கணையும்செஞ்சுருட்டிஆதி
56சிவனே தெய்வம்சுத்தசாவேரி*
57செந்தாமரை மலர்யதுகுல காம்போதிதிச்ரலகு
58சிங்கார மானபூரிகல்யாணிதிச்ரலகு
59தலம்வந்துகேதாரம்கண்டலகு
60சிவலோக நாதன்கேதாரம்கண்டலகு
61ஒரு நாளும்சங்கராபரணம்கண்டலகு
62குதித்தார் எக்கலித்தார்மாயமாளவகௌளைஆதி
63தடாகம் ஒன்றுமோகனம்ஆதி
64நாளைப் போகாமல்**
65காணாமல் இருக்கசக்ரவாகம்மிச்ரம்
66தில்லையம்பலசங்கராபரணம்மிச்ரம்
67வாருங்கள் வாருங்கள்நீலாம்பரிஜம்பை
68சிதம்பர தரிசனம்யமுனாகல்யாணிஆதி
69மீசை நரைத்துப்நாதநாமகிரியைஏகம்
70எல்லைப் பிடாரியேநீலாம்பரி*
71திருநாளைப் போவாரிந்தநாதநாமக்ரியைஆதி
72தத்திப் புலிபோலேமோகனம்திச்ரலகு
73அரகர சிவசிவநாதநாமக்ரியை / மோகனம்ஏகம் / திச்ரலகு
74சேதிசொல்ல வந்தோம்சங்கராபரணம்ஏகம்
75நந்த னாரும் வந்தார்சங்கராபரணம்ஆதி
76ஆடிய பாதத்தைக்சுருட்டிஆதி
77தில்லைச் சிதம்பரத்தைஆரபிஆதி
78ஆசை நேசராகும்மாஞ்சிசாபு
79மாங்குயில் கூவியசங்கராபரணம்ஏகம்
80நந்தனாரே உன்றன்பேகடாசாபு
81ஏழைப் பார்ப்பான்யதுகுலகாம்போதிஆதி
82சிதம்பரம் போய்நீசாமாஆதி
83சிதம்பர தரிசனம்மோகனம்*
84முக்தி அளிக்கும்நவரோசுசாபு
85கனக சபேசன்கமாசுரூபகம்
86வாராமல் இருப்பாரோசுருட்டிஆதி
87இன்னும் வரக்காணேனேபரசுஆதி
88விருதா சன்மமாச்சேதர்பார்ஆதி
89சந்நிதி வரலாமோசங்கராபரணம்ஏகம்
90கனவோ நினைவோகமாசுசாபு
91அம்பல வாணனைஆகிரிமிச்ரசாபு
92களை யெடாமல்நடபைரவிரூபகம்
93திருநாளைப் போவாருக்குஅசாவேரிஆதி
94அறிவுடையோர் பணிந்தேத்தும்சக்ரவாகம்ஜம்பை
95ஆண்டிக் கடிமைகாரன்செஞ்ருட்டிரூபகம்
96ஆருக்குப் பொன்னம்பலவன்பைரவிஆதி
97இரக்கம் வராமல்போனதென்னபெஹாக்ரூபகம்
98எப்போ தொலையுமிந்தத்கௌரிமனோகரிசாபு
99எந்நேரமும் உந்தன்தேவகாந்தாரிஆதி
100ஏதோ தெரியாமல்அமீர்கல்யாணிரூபகம்
101கட்டை கடைத்தேறகரகரப்ரியாசாபு
102கனகசபாபதிக்கு நமஸ்காரம்அடாணாஆதி
103காரணம் கேட்டுவாடிபூர்விகல்யாணி*
104சபாபதிக்கு வேறு தெய்வம்ஆபோகிஆதி
105சம்போ கங்காதராஅபுரூபம்ஆதி
106சிதம்பரம் அரஹராபியாகடைஆதி
107சிதம்பரம் போவேன் நாளைபெஹாக்ஆதி
108சிந்தனை செய்துசெஞ்சுருட்டிஆதி
109சிவலோகநாதனைக் கண்டுசெஞ்சுருட்டி / மாயமாளவகௌளைரூபகம்
110தரிசனம் செய்தாரேகல்யாணிஅட
111திருவடி சரணம்காம்போஜிஆதி
112தில்லை சிதம்பரம்யமுனாகல்யாணி ஓர் சாரங்காசாபு
113தில்லைத் தலமென்றுபூரிகல்யாணி / சாமாஆதி
114நடனம் ஆடினார்வசந்தாஅட
115நந்தன் சரித்திரம்சங்கராபரணம்ஆதி
116நமக்கினி பயமேதுகௌளிபந்துஆதி
117நீசனாய் பிறந்தாலும்யதுகுலகாம்போதிசாபு
118பத்தி செய்குவீரேதோடிஆதி
119பத்திகள் செய்தாரேயதுகுலகாம்போதிஆதி
120பார்த்துப் பிழையுங்கள்யதுகுலகாம்போதிரூபகம்
121பெரிய கிழவன் வருகிறான்சங்கராபரணம்ரூபகம்
122மற்றதெல்லம் பொறுப்பேன்சாவேரிரூபகம்
123வருகலாமோவையா உந்தன்மாஞ்சிரூபகம் / சாபு
124வருவாரோ வரம் தருவாரோஷ்யாமாஆதி