பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, March 31, 2016

பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்

Courtesy: "TAMILHINDU' website and Mr.Jatayu, Bangalore.


முகப்பு » இலக்கியம்சமூகம்வரலாறுவிவாதம்

பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்

March 30, 2016
 

bharathi01பெங்களூரில் வாரம் தோறும் நடந்து வரும் “பாரதி பயிலகம்” அமர்வுகளில், சென்ற வாரம் “சத்ரபதி சிவாஜி தன் சைன்யத்திற்குக் கூறியது” என்ற பாடலை எடுத்துக் கொண்டோம். “ஜயஜய பவானி ஜயஜய பாரதம்” என்று தொடங்கும் இந்த நீண்ட பாடல் பிரபலமான ஒன்று தான். இப்பாட்டின் சில முக்கிய வரிகளை சீர்காழி கோவிந்தராஜனின் சிம்மக் குரலில் எண்பதுகளில் ரேடியோவில் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது.
வாசித்துக் கொண்டே வருகையில் ஒன்றைக் கவனித்தோம். பாரதியின் மூலப் பிரதியில், சொற்கள் தெளிவாக இருந்த சில இடங்களில் கூட வலிந்து திருத்தங்கள் செய்யப் பட்டு அதிகாரபூர்வமான “அரசாங்கப் பதிப்பு” வெளியிடப்பட்டுள்ளது. இன்று கிடைக்கும் எல்லாப் பதிப்புகளிலும் இந்தத் திருத்தங்கள் உண்டு. ஆனால் திருத்தங்கள் செய்யப் பட்ட விவரமோ, பாடபேதங்களோ கூட எவற்றிலும் தரப்படவில்லை. சீனி. விசுவநாதன் வெளியிட்ட “காலவரிசையில் பாரதியார் கவிதைகள்” என்ற ஆய்வுப் பதிப்பில் மட்டும் தான் இது பற்றிய குறிப்பைப் பார்த்தோம்.
“தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,
பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபடு துருக்கர்”  (வரிகள் 44-46)
இதில் *நவைபடு துருக்கர்* என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது.
சோதரர் தம்மைத் துருக்கர் ஆண்டழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க! (வரிகள் 83-84)
இதில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது.
இந்த இரு திருத்தங்களும், அந்தந்த இடங்களில் பாடலின் பொருளை எந்த அளவுக்கு மோசமாகச் சிதைக்கின்றன என்று சொல்லத் தேவையில்லை.
சரி, பாரதியார் என்ற கவிஞர் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பான கணத்தில் ஆவேசத்தில் எழுதியதை, பிறகு நாட்டின் நல்லிணக்கத்தைக் கருதி அரசு சென்சார் செய்து மாற்றிவிட்டிருக்கிறது. உண்மையில் இது தான் சரியான (நேருவிய திராவிடிய) கருத்துச் சுதந்திரத்தின் அடையாளம் என்று சமாதானங்கள் சொல்லப் படக் கூடும். ஆனால், பாரதியாரே இந்தப் பாடலை முதன்முதலாகப் பிரசுரிக்கும் போது கீழ்க்கண்ட தெளிவான குறிப்பையும் அதனுடன் சேர்த்தே எழுதியிருக்கிறார் என்பதையும் கணக்கில் கொண்டால் இந்த வாதம் அடிபட்டுப் போகும். மேற்கூறிய சீனி.விசுவநாதன் பதிப்பில் இக்குறிப்பு தரப்பட்டுள்ளது.
“இச்செய்யுளிலே நமது மகமதிய சகோதரருக்கு விரோதமாக சில வசனங்கள் பிரயோகிக்க நேர்ந்தது பற்றி விசனமடைகிறோம். இக்காலத்து மகமதியர்கள் பாரதபூமியின் சொந்தப் புத்திரர்கள் என்பதையும். ஹிந்துக்களும் முகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பலமுறை வற்புறுத்தியிருக்கிறோம் என்ற போதிலும், சிவாஜி மகாராஜா காலத்தில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் விரோதம் இருந்தபடியால், அவர்களைப் பற்றி மகாராஜா சிவாஜி சில கோபமான வார்த்தைகளைச் சொல்லியிருப்பது வியப்பாக மாட்டாது. மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீரரசத்தை மட்டுமே கவனிக்கவேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்”.
ஆக, தனது சொற்பிரயோகத்தின் மீதும், அது உருவாக்கும் விளைவுகள் மீதும் இவ்வளவு அக்கறையும் கவனமும் கொண்டிருந்திருக்கிறார் பாரதி என்பது புலனாகிறது. பாடலில் உள்ள துருக்கர் என்ற சொல் “புண்படுத்தக் கூடியதாகவோ” அல்லது தவிர்க்கப் பட வேண்டியதாகவோ அவர் கருதவில்லை என்பதை வெளிப்படையாகவே எழுதிவிட்டிருக்கிறார். இதற்குப் பிறகும் அந்தத் திருத்தங்கள் அரசுப் பதிப்பில் செய்யப் பட்டிருப்பது பாரதி மீதான அவமதிப்பன்றி வேறில்லை.
பாரதிக்கு எந்த அளவுக்கு மத நல்லிணக்கத்திலும், சமூக ஒற்றுமையிலும் கருத்து இருந்ததோ, அதே போன்று, கூர்மையான, சுயமரியாதையுடன் கூட வரலாற்றுப் பிரக்ஞையும் இருந்தது. கடந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும், இஸ்லாமிய அரசுகளும் புரிந்த கொடுமைகளை வைத்து தேசபக்தி கொண்ட இன்றைய முகமதியர்களை உதாசீனம் செய்யக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், “நல்லிணக்கம்” வேண்டும் என்பதற்காக, வரலாற்றை ஒரேயடியாக வெள்ளையடித்து மறைத்து விட வேண்டும் அல்லது இன்றைய முஸ்லிம்கள் மனம் நோகாத வகையில் போலித்தனமாக திரித்து, மாற்றி எழுத வேண்டும் என்பதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை. வரலாற்றிலிருந்து கற்க வேண்டிய பாடங்களைக் கற்று, அதன் பின்னர் கடந்தவற்றை மறந்து காலத்தில் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதே அவர் கொள்கையாக இருந்திருக்கிறது. உண்மையான சமன்வய நோக்கும், தீர்க்கதரிசனமும், அறிவார்ந்த கண்ணோட்டமும் கொண்ட ஒரு எழுத்தாளன் இப்படித் தான் சிந்தித்திருப்பான். காசி சர்வகலாசாலையில் பயின்ற போது, ஒவ்வொரு நாளும் காசி விஸ்வேஸ்வரரின் ஆலயத்தை அவுரங்கசீப் தகர்த்து உடைத்ததன் சுவடுகளை, இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்திய வடுக்களை பாரதி கண்டிருக்கக் கூடும். அதே படித்துறைகளில் கான் சாகிப்கள் மெய்மறந்து ஹிந்துஸ்தானி இசையில் கங்கை அன்னையையும் ராமநாமத்தையும் பாடுவதையும் அவன் கேட்டிருக்கக் கூடும். அப்படி ஒரு சூழலில் வளர்ந்தவனுக்கு இப்படி ஒரு தீர்க்கமான வரலாற்றுப் பிரக்ஞை உருவாகாமலிருந்தால் தான் அது ஆச்சரியம்.
மேலும் “மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில்” என்று பாரதி குறிப்பிடும் கீழ்க்காணும் விஷயங்கள் எதுவும் அவனது கற்பனையோ அல்லது கட்டுக் கதையோ அல்ல. அவை ஒவ்வொன்றையும் பற்றி ஆயிரக் கணக்கான பக்கங்கள் நவீன வரலாற்றாசிரியர்களால் எழுதப் பட்டுள்ளன. அக்காலத்திய இஸ்லாமிய ஆவணங்களிலும் அக்கொடுஞ்செயல்கள் படாடோபத்துடன் எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன.
“.. ஞானமும் அறியா நவைபடு துருக்கர்,
வானகம் அடக்க வந்திடும் அரக்கர்போல்
இந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!
சாத்திரத் தொகுதியைத் தாழ்த்திவைக் கின்றார்!
கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்!
எண்ணில, துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்:
கண்ணியம் மறுத்தனர்; ஆண்மையுங் கடிந்தனர்;
பொருளினைச் சிதைத்தனர்; மருளினை விதைத்தனர்;
திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்;
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்;
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்;
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
மொக்குள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்!
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?…”
இன்னும் ஒன்றுண்டு. மேற்சொன்ன திருத்தங்களை முனைந்து செய்து அரசுப் பதிப்பை வெளியிட்ட மகானுபாவர்களுக்கு, பாரதியாரின் கீழ்க்கண்ட வரிகளில் அரசியல்சரிநிலை வேண்டி எந்தத் திருத்தங்களும் செய்தவற்கான எந்த அவசியமும் தோன்றவில்லை என்பது சுவாரஸ்யமான விஷயம் தான்.
ஈனப் பறையர்களேனும் – அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?…
பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை..
பேராசைக் காரனடா பார்ப்பான்..
பாயும் கடிநாய்ப் போலீசுக் காரப் பார்ப்பானுக்குண்டதிலே பீசு..
இன்னாளிலே பொய்மைப் பார்ப்பார் இவர் ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்..
பார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய பாழடைந்த கலியுகமாதலால்..
****
சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது – பாடல் இங்கே.
பாடல் முழுவதையும் நாங்கள் வாசித்து விவாதித்ததன் ஒலிப்பதிவு கீழே:

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 
தொடர்புடைய பதிவுகள்

Thursday, March 17, 2016

மக்கள் நலம் வேண்டி ஒரு வேண்டுகோள்!

        
இப்போது மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரம். அரசியல்வாதிகள் அரிதாரம் பூசிக்கொண்டு, அன்பொழுக நெருங்கி, தேனொழுகப் பேசி, நம் வாக்குகளைக் கவர்ந்து செல்ல முயலும் நேரம். இப்போது விழிப்போடு இல்லாவிட்டால் மக்கள் அடுத்து வரும்ஆண்டுகளில் நாம் நரக வாழ்க்கை வாழ்ந்திட நேரிடும் என்பதை உறுதியாக மனதில் கொள்ள வேண்டும்.

இலவசங்களாக நமக்குக் கொடுக்கும் பொருட்களின் தரம் உலகம் அறிந்த செய்தி. அவை யார் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது? மக்களின் வரிப்பணம். உருப்படியாக மக்கள் வாழ்க்கைத் தரம் உயர செய்யப்பட வேண்டிய செலவுகளை நிறுத்திவிட்டு இலவசமாக பொருட்கள் தருகிறார்கள். அவை நன்றாக செயல்படக் கூடியவைகளா? தரமானவைகளா? யாரையும் கேட்க முடியாது, அழகுப் பொருட்களாக வாங்கி வீட்டில் அடையாளப்படுத்தி வைத்துக் கொள்ளலாம், அவ்வளவே!

கோடிக்கணக்கில் செலவு செய்து, ஆடம்பரமான விளம்பரங்கள் செய்து, கூட்டம் சேர்த்து கோஷங்களை எழுப்பி மக்கள் உள்ளங்களில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணி, அதன் பலனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அரசியல் பாணிகளுக்கு முடிவு கட்டுவோம்.

எளிமையானவராக, விவரம் புரிந்தவராக, நிச்சயம் மக்களுக்காகப் பாடுபடுவார் என்பவர்களைப் பார்த்து அவரிடமிருந்து எந்த கைமாறையும் எதிர்பாராமல் மனசாட்சிக்கு ஏற்ப வாக்களித்தால் மக்கள் வாழ்க்கை நலம் பெறும். 

ஆடம்பரத்துக்கும், இலவசங்களுக்கும், இதர கவர்ச்சி மொழிகளுக்கும் மயங்கினால், பின்னர் நமக்கு வாழ்க்கை நரக வாழ்க்கையே! படித்தவர்கள், படிக்காதவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். அரசியல் கட்சியில் சேர்ந்து உயிரையும், நேரத்தையும், உடைமைகளையும் கூட தியாகம் செய்யும் தொண்டர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள், விழலுக்கு நீர் இரைக்காதீர்கள் என்று! கட்சியோ, கொடிகளோ, ஆடம்பரப் பேரணிகளோ, மனங்கவரும் கோஷங்களோ நமக்கு வழித்துணையாக வராது. நம் அறிவு, விழிப்புணர்வு, நியாய சிந்தனை, எடுக்கப்போகும் முடிவு இவை மட்டுமே நம் எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்யும். பார்ப்போம், சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 70 ஆண்டுகளை நெருங்கும் சமயத்தில்கூட நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்ளவில்லையானால், இனி எந்த நாளும் நாம் தலை நிமிரப் போவதில்லை. இப்போது தவறினால் இனி தெளிவடைய வாய்ப்பு இல்லை. தயை செய்து இவற்றை விருப்பு வெறுப்பின்றி ஆலோசித்து முடிவு செய்யுங்கள். நன்றி.