பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, August 21, 2017

ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்.

ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்.






தமிழ்நாட்டில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் குறிப்பிடத் தக்கது புதுக்கோட்டை. 
அங்கு இந்தியா சுதந்திரமடைந்த பின் சமஸ்தானங்கள் இந்திய குடியரசுடன் இணைக்கப்
பட்ட போது முதலில் இணைந்தது புதுக்கோட்டை சமஸ்தானம். மன்னர் பிரகதாம்பாதாஸ் 
ராஜகோபாலத் தொண்டைமான் டெல்லி சென்று வல்லபாய் படேலிடம் சமஸ்தானத்தை 
மாற்றித் தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு திருச்சி திரும்பியவர் கடைசிவரை
அங்கேயே இருந்து விட்டார். புதுக்கோட்டை சமஸ்தானத்து மக்களின் அன்பை மிகவும்
பெற்றவர் ராஜகோபால தொண்டைமான்.
புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் இவர். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.
இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர்.   17. ஜனவரி 1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.
1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் கட்டிடங்களையும், மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார். கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் இவர் ஆர்வமுடையவர். 
ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் 1997 இல் மறைந்தார். மன்னராக
இருந்தும் மிக எளியவராகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் வாழ்ந்த இவரை புதுகை
மக்கள் இன்றளவும் மனதில் நிறுத்திப் போற்றுகிறார்கள்.

Wednesday, August 9, 2017

லக்ஷ்மி ராமாயணம் பகுதி XII

லக்ஷ்மி ராமாயணம் பகுதி  XII 

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி  வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.


நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger.)


                           பரசுராமப் படலம்

இராமனுக்கு வேதநீதி போதித்த முனிகௌசிகன்
இமயமலைக்குப் புறப்பட்டார் தவஞ்செய்யவே
மிதிலையிலே சனகனுடன், தசரதனின் பரிவாரம்
களிப்புடனே அளவளாவி கழித்தனவாம் சிலகாலம்.                      377

தன்மக்கள், மருமக்கள், தசரதனைத் தொடர்ந்திடவே
மண்மக்கள், அயல்மக்கள் புடைசூழப் புறப்பட்டார்.
மிதிலைமக்கள் வருத்தத்துடன் திருமகளை வழியனுப்ப
அயோத்திமக்கள் ஆர்வமுடன் வரவேற்கக் காத்திருந்தார்.                378
                 
                   இருவகை நிமித்தங்கள் எதிர்படல்

செல்லும் வழியிலே-
இடமிருந்து வலமாய் மயில் சென்றிட.
வலமிருந் திடமாய் காகம் சென்றதாம்.
இடையூறு வழியிடையில் உள்ளதோ வென
நடவாது நின்றான் நெறி வந்தான்.                                       379

நின்றவன், நிமிடத்தில் நிமித்திகனை அழைத்தனன்.
‘நன்றோ, பழுதோ நடுநிலையுடன் நயந்துரை’ என்ன
‘இன்றேவரு மிடையூறது நன்றாய்விடுமெ’ன்றான்
குன்றொத்த புயம்கொண்டோ னிடம் நிமித்திகன்.                         380

அவ்வமையம்-
திடீரென இருண்டதாம் வானம் – செஞ்
சடை யுடையான், இடியொலி யுடையான்
கோடரிக் கையுடை யான், கனலுமிழ்
சுழல் விழியுடையான் பரசுராமன் – சிவ                                 381

தனுசுக் கொப்பான பொற்சிலை யெடுத்து
வளைத்து நாணேற்றி அம்பு தெறித்தான்.
அலை கடலில் அகப்பட்ட மரக்கலன்போல்
நிலைகுலைந்து நடுங்கியதாம் மூவுலகும்.                               382
அவன்-
முனிவராய் பிறந்த மற்றொரு அவதாரம்.
‘ராமன்’ என்றவன் காட்டினன்தன் வில்வீரம்
பரமனை நோக்கிக் கடும்தவம் புரிந்து
பரசுப்படை பெற்று ‘பரசுராமன்’ என்றானவன்.                            383

உருத்திர மூர்த்தி பிரளயத்தில் காட்டிய
கோர தாண்டவ தோற்றத்தைக் கொண்டு
இருபத் தொரு அரசர்களைக் கொன்றபின்
குருதிப் புனலில் குளித்தவோர் அந்தணன்.                               384

தனதாக்கிக் கொண்டான் புவிமுழுதும்
சினம் தணிந்தபின் முனி காசிய பரிடம்
தானம் செய்தனன் இப்புவி யனைத்தும் – பின்
தவம் செய்தனன் பரசுராம க்ஷேத்ரத்தில்.                                385

                  பரசுராமன் வருகை கண்டு தசரதன் வருந்துதல்

கடுஞ்சினத் துடனவன் வருவதைக் கண்டதும்
நடுங்கிய தசரதன் பணிந் தெழுந்தான்.
‘அறனல்ல இது’வென தழுதழுத்தான்.
அடிபணீந்தேன் ஆதரிப்பீ’ரென! மூர்ச்சித்தான்.                             386

மன்னனை சற்றும் மதித் திடாமல்
சொன்னனன் இராமனின் முகம் நோக்கி,
‘முன்னரே சிதிலமான சிவதனுசு வளைத்தநீ
என்றுமே வீரனல்லன்! என்னோடு போர்புரி’                              387

                           இரண்டு விற்களின் வரலாறு

முன்னாளில் இருந்ததுவாம் இரு விற்கள்
ஒன்றினை உமையவளின் அண்ணல் கொள்ள
மற்றொன்றை திருமால் தன்வசம் கொள்ள
ஒடிந்தது ஓர்வில். அம்மெய்நெறி கேள்நீ’                               388

இரண் டினும் வன்மை யெய்திடும்
வெற்றி யுடைய வில்லெது வென்று,
விண்ணோர் பிரும் மனை வினவினராம்.
வெகுண் டனராம் சிவனும், திருமாலும்.                                 389

ஏற்றினராம் நாணை தத்தம் வில்லினில்
ஈரேழுலகும் அஞ்சி நடுங் கினவாம்.
முறிந்ததாம் அவ்வமையம் உருத்திரன் வில்
மூண்டதுவாம் இருவருக்கும் மிகப்பெரும்போர்.                         390

விண்ணவர் விரைந்தே விலக்கினராம் - சிவ
வில்லதை தேவர்கோன் வாங்கினனாம்.
விருச்சிக முனிவர், தவத்தில் மிக்கவர்
அவருக்குத் திருமால் தம்வில் தந்தனராம்.                              391

விருச்சிகன் ஈந்தனன் அவ்வில்லை - அவர்
சதானந்த முனியாம் எம் தந்தை – நீ
கட்டமைந்த இவ்வில்லை வளைப்பா யெனின்
கோட்டையரசன் நீ! கொத்தடிமை நான்!’ என்றான்.                       392

முறுவல் பூத்த முகத்துடன் இராமன்
நாரணன் கைக்கொண்ட வில்லினை வாங்கி,
தோளின்பின் வரை இழுத்து வளைத்து,
நாணேற்றி யதில் அம்பினைத் தொடுத்தவன்,                            393

‘பூதலத்து பலமன்னர் உயிர் கொண்டோனே!
வேத வித்தகர் புத்திரனாய் பிறந்தவன் நீ!
தவத்தோ டிருந்ததை கருத்தினில் கொண்டு
இவ்வம்பினை உன்மேல் விடுவதை விடுத்தேன்.                         394

நாரணன் வில்லின் அம்புக்கு இலக்கு
வேறெது வென்று உரைத் திடெ’ன்றான்.
‘அல்லாரை அழித்து நல்லாரைக் காப்போனே!
இலக்கென என் தவப் பயனைக்கொள்” என்ன                            395

தவபலம் இழந்தான் பரசு ராமன்.
‘அவதரித்த உன் வலிமைக்கு இணையில்லை!
எண்ணிய பொருட்களை இனிது பெறுக!வென
வாழ்த்தி வணங்கி விடை பெற்றான்.                                    396

மூர்ச்சை தெளிந்த தசரதன் தழுவினன்.
தேவர்கள் பூ மழை பொழிந்தனர்.
வேற்படை யுடையவனாம் வருணனிடம்
மால்வில் தந்து அடைந்தனர் அயோத்தி.  .                              397

                      (பாலகாண்டம் இத்துடன் நிறைவு பெற்றது)
                           அயோத்யா காண்டம் தொடரும்.

Tuesday, August 8, 2017

லக்ஷ்மி ராமாயணம் XI

லக்ஷ்மி ராமாயணம் XI


(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.


நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger.)


கடிமணப் படலம்

‘தேனமர் குழலிக்கு நாளை மணமென
யானை மீதில் மணமுரசறைக’ யென்று
ஆணையை யிட்டான் சனக மன்னன்.
அனைவரும் உயர்ந்தனர் உவகை யினால்                              360

இரவுப் பொழுதை பெருங்கட லெனவே
பெரு மூச்செறிந்தனள் பிராட்டி என்கையில்,
நீட்டிக்கும் இரவினைக் குறித்தே இராமனும்
வாட்டத் துடன்மனம் இரங் கினனாம்.                                   361

அஞ்சன வண்ணனும் அலர்மேல் மங்கையும்
மணஞ்செய விருப்பதை அறிந்து கொண்டு
செஞ்சுடர் விரித்த சூரியக் கதிர்கள்
சஞ் சரித்தனவாம் காணும் பொருட்டு.                                   362

                   திருமணநாளின் மேன்மை

இந்திரன் முடிசூடும் நாளொத்த திருநாளில்,
பொன்பொதிந்த ஆசனத்தில் தசரதன் அமர்ந்திட
மன்னர்களும், முனிவர்களும், முறைப்படி அமர்ந்திட,
சனகனும் அமர்ந்தான் சுற்றமும் சூழ்ந்திட.                               363

கங்கை முதலிய நதிகளின் நீரினால்
மங்கல மஞ்சனம் முறையின் ஆடி,
அரங்கனை வீழ்ந்து வணங்கிய இராமனும்
அணிகலன் பலவும் அணிந் தானாம்.                                    364

‘யாத்ரா தானமாய்’ பசுவும், பொன்னும்
ஈந்தனன் ஏறினான் ஒளிரும் தேரினில்.
அருணனாய் பரதனே தேர் செலுத்த – மற்ற
இளவ லிருவரும் சாமரம் வீசினர்.                                     365.

பாற்கடல் கடைகையில் திருமால் தம்மின்
பொற்கரம் பற்றிய திருமக ளின்று
அலைகடல் பிறந்துபின் அவனியில் உதித்தவள்.
மலைபோலிருந்த மண்டபம் அடைந்தனள்.                              366

வேதமோத வேதியரும், அறம் வளர்க்க அந்தணரும்,
மாதவத்தோன் வசிட்டரும், முடிதரித்த முனிகௌசிகனும்,
சசியோடு இந்திரனும், சக்தியோடு உருத்திரனும்,
வாணியுடன் நான்முகனும், மண்டபத்தில் குழுமினராம்.                  367

வெற்றிப் பெருந்தகை இராம பிரானும்
வேல்விழி நங்கை சீதாப் பிராட்டியும்,
வேதமுறைப்படி, ஹோமங்கள் நடந்த
மன்றலில் வந்து அமர்ந் தனராம்.                                      368

                                  
                    சீதா பிராட்டியை சனகன் தாரைவார்த்தல்

பூமகள் சீதையின் கரம் பற்றி,
கோமகன் ராமனின் வசம் சேர்த்து,
‘திருமால், திருமகள் போல் வாழ்க!’ வென
நீரினை வார்த்தான் சனக மன்னன்.                                      369

வானவர் பொழிந்தனர் பூ மழையை!
மன்னவர் சொரிந்தனர் பொன்மலர்களை!
ஏனையோர் தூவினர் நவமணிகளை – இம்
மா நில மானதாம் மீனுடை வானமாய்!                                 370

                       சீதாபிராட்டி பாணிக்கிரணம்

பொரிகொண்டு செய்யும் ‘லாஜ ஹோமமும்’
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
கொற் றவனைக்கழல் கும் பிட்டு,
பொற்றொடி கைபற்றி பொன்மனை புகுந்தான்.                           371

மங்கல நாணின் மகத்துவம் பற்றி
அங்கங்கு சொல்லிய கம்பர் ஏனோ
அணிவிக்கும் செய்தியை கூறவில்லை
அதை விடுத்தது ஏனென்று புரியவில்லை.                               372

தந்தைக்கு மிகவுகந்த கைகேயித்தாய் தாளினையும்,
தமைபயந்த கௌசல்யைத்தாய் தாளினையும் – தூய
சுமித்திரைத்தாய் தாளினையும் பணிந்தெழுந்தனராம். – அவர்களும்
‘மணாளனுக் கேற்ற மணாட்டி’யென மனமகிழ்ந்தனராம்.                  373

முழங்கினவாம் சங்கம்; கொட்டினவாம் பேரிகைகள்
இசைந்தனவாம்  பல்லாண்டு; நிரம்பினவாம் வேதகோஷங்கள்.
ஒலித்ததுவாம் வண்டினம்; அதிர்ந்ததுவாம் அண்டமும்
மகிழ்ந்தனராம் தேவர்கள்; முகிழ்ந்தனவாம் கலைபலவும் .               374                        
                      பரதன் முதலிய மூவர் திருமணம்

தம்மகளாம் ஊர்மிளையை இலக்குவர்க்கும்,
தம்தம்பி குசோத்துவன் ஈன்ற மகள்களுள்
மாண்டவியை பரதனுக்கும், சுருதகீர்த்தியை சத்ருக்னனுக்கும்
மணம்பேசி முடித்தனனாம் சனக மன்னன்.                              375

புதல்வர்கள் நால்வரின் திருமணம் முடித்து
ஈட்டிய மெய்ப்பொருள் அனைத்தையும் தசரதன்
கேட்டவர், கேளார் அனைவருக்கும்
‘போதும், போதும்’ எனும்படி ஈந்தான்.                                    376

                           (மேலும் வளரும்)



Sunday, August 6, 2017

லக்ஷ்மி ராமாயணம் பகுதி X

 லக்ஷ்மி ராமாயணம்.


(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.

நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger. )


                                எதிர் கொள் படலம்
              (சக்ரவர்த்தி பரிவாரங்களுடன் மிதிலையை அணுகுதல்)

‘வந்தனன் அரசன்’ கேட்டதும் சனகன்,
பொங்கிடும் உவகையுடன், களிறும்தேரும், பரியும்சூழ
சந்திரன் சார்ந்திடும் சூரியன் போலவே
இந்திர னொத்திடும் தசரதன் காணப் புறப்பட்டான்.                        339

கடல்போன்ற திரட்சியான தசரதபடை ஆறுடனும்,
இலைவடிவ வேலேந்திய சனகனின்படை சேர்ந்ததும்,
ஏழுகடலும் அலைகளுடன் ஆர்ப்பரித்தாற் போலவே
சதுரங்க சேனைகளாய் எங்கும் பரவிற்றாம்.                              340

               சனகன் தேரில் தனியே வருதல்

சொல்ல வொண்ணா பெருமைகொண்ட சனகனும்
எல்லையில்லா பெருமகிழ்ச்சி பொங்கிவர
தந்தையினை யொத்தவனாம் தசரதனை தரிசிக்க
சிந்தையொத்த வேகம்கொண்ட தேரினில் வந்தெய்தினான்.                341

அணுகினான். அணுகியதும் தேரினின் றிறங்கினான்.
சேனையினைப் பின்னிறுத்தி தான்முன்னம் சென்றான்.
முகம்மலர்ந்த ஐயனும் ‘தன்தேரிலேறுக’வெனக் கையசைத்து
அகமுற தழுவி, மார்போடணைத்தான் சனகனை.                        342

புலிகளுக் கெதிரில் சிங்கம் போன்றவன்
எவரினும் உயர்ந்தவன் தசரத வேந்தன்
சனகனின் சுற்றம்நட்பின் சேமம் அளாவி,
இனிதென நகரினுள் உகந்து சேர்ந்தனன்.                                343

தம்பியுந் தானுமாய் பெரும்படை சூழ
வந் தெய்திய தன்னுயிர்க் குமரனை
முன்பிரிந்த ஆவிவந்து சேர்ந்ததுபோல்
ஆராமை மீதூர முகம்வருடித் தழுவினன்.                               344

பெற்றதாய் மூவரையும் தொழுதெழுந்த இராமபிரான்
உற்றஉறவு, சேனையுடன் உவகையுடன் கூடினான்.
மட்டற்ற அன்புடைய தம்பிமார்கள் பின்தொடர
முரசுடனும், சங்குடனும், நகரத்துள் செல்லலானான்.                     345

                          உலாவியற் படலம்

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை
அரிவை, தெரிவை, பேரிளம் பெண்ணென
பருவ நிலையுடை பெண்களும் இராமன்பால்
அரும்பிய காதலால் வீதியில்முந்தி வந்துநின்றார்.                       346

தோள் கண்டவரெல்லாம், தோளே கண்டிருந்தார். - அவன்
தாள் கண்டவரெல்லாம் தாளே கண்டிருந்தார்.
நீள்கை கண்டோரும் அஃதே கண்டிருந்தார்.
கொள்கையிலே முதிர்ந்தோரோ பரம்பொருளைக் கண்டிருந்தார்.           347

அமிர்த மொய்க்கும் ஈ யெனவும்
மலர்கள் சுற்றும் வண்டெனவும்,
மாதர்கள் மொய்க்க மண்டப மடைந்தவன்
மாதவ முனிகளின் பாதங்கள் பணிந்தான்.                               348

கோமகன்சூழ்ந்த மற்றைய பலரையும்,
முகமன் செய்தான் சனக மன்னன்.
அகமும், முகமும் மலர்ந்திடவே
அசதியைப் போக்கிட உபசரித்தான்.                                     349

                          கோலங்கண் படலம்

‘பெண்களுக் கரசியாம் நும் திருமகளை
ஈண்டு தருமின்’ உரைத்திட்டான் முனிவசிட்டன்
வெண்கொற்றக் குடை யுடைய சனகனும்
அவ்வண்ணம் ஆணையிட்டான் தாதியிடம்.                             350.  

பொங்கிய களிப்புடன் ஓடினள் தாதியும்.
மங்கையாம் சீதையிடம் நிகழ்ந்ததை யுரைத்தனள்.
அமுதுக்கே சுவையூட்டும் வண்ணமாய்
அழகுக்கே அழகு செய்ய முனைந்தனள்.                                 351

நெற்றியில் சுட்டியும், செவிகளில் குண்டலமும்,
சங்கனைய கழுத்தினிலே முத்துமணி மாலையும்,
கங் கணங்களை அவள் கரங் களிலும்,
மேகலையை அவள் இடையினிலும் சாற்றி,                             352

பாதங்களில் சிலம்பினைப் பூட்டி,
பட்டு ஆடைதனை இடையினில் உடுத்தி,
கண்களுக்கு மைதீற்றி, நெற்றித் திலகமிட்டு
கொண்டையிலே பூசூட்டி, கன்னத்தில் பொற்பொடியப்பி,                  353

திருட்டி கழித்து, உச்சி முகர்ந்து.
அரம்பையர்சூழ் இந் திரா ணி போல்
விண்மீன்சூழ் இளஞ் சந்திரன் போல்
அழைத்து வந்தனர் மண்டபம் பால்.                                     354

நிலமடந்தை உயிர்த்த அக்கோல மயிலுக்கு
உடல்நோவு வாரா வண்ணம் வழியெங்கும்
மலர்களும், தளிர்களும் பரந் திருக்க,
இளவரசி அரசவையை ஒயிலாக அணைந்தாளாம்.                       355


பேரெழில் பிராட்டியைப் பார்த்ததும் தசரதனும்,
அவதார உண்மையறிந்த வசிட்டனும் பேரானந்தப்பட
இமைத்திலர் மண்டபத் திருந்த எண்ணற்றோர்..
உயிர்த்திலர் பலர் இது சித்திரமென,                                     356

இவளோ? அல்லளோ? மாடத்திலே கண்டவள்!
இவ்வாறு ஐயங்கொண்டான் ஐய்யன் – பின்
அவளேதான் இவளென்று ஐயந்தெளிந்து
தேவாமிர்தம் பெற்ற தேவேந்திரன் போலானான்.                         357

மாதவமுனிகளை முறைப்படி தொழுதவள்.
தந்தையை யடுத்த இருக்கையில் அமர்ந்ததும்,
கோமகன் தசரதன், கௌசிக முனியிடம்
‘மணமுகூர்த்த நாள் என்றைக்கு?’யென கோரினான்                      358

‘உற்ற திருமண நன்னாள் நாளை’ யென்ற
முற்றும் துறந்த கௌசிகமுனியுடன் வசிட்டரையும்
வணங்கிய இரு பெரும் மன்னர்களும்
மனமகிழ் வுடன்தம் மிடம் சென்றார்.                                   359


                                
(தொடர்ந்து வரும்)


ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி IX

ல‌க்ஷ்மி ராமாயணம் 

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.
நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger. )


இவ்விடம் செய்திகள் இவ்வித மிருக்கையில்,
அவ்விடம் மாடத்தில் ஐயனை கண்டவள்,
எவ்விதம் தம்முயிர் தாங்கி நின்றாள்? –  அவள்      
விம்மிடும் மனத்தொடு ஏங்கி நின்றாள்.                                 304

அண்ணலைக் கண்டதும், எண்ணங்கள் தொலைத்தவள்
பின்னருங் கண்டிடும் ஆர்வமும் உந்திட
பளிங் குமண்டப தடாக மடுத்த
குளிர்ந்த இடத்தினை கடிதி னடைந்தாள்.                                305

அசைந் திடும் தாமரை மலரினை நோக்கி,
‘இரவினில் நின்னுரு கருமையாய்த் தெரிவதால்,
மறைந்தது எந்தன் மனவாட்ட்ம் – இருப்பினும்
தருவதற் குதவுவீர் எம்முயிரை!’ யென பிதற்றலானாள்.                  306

எண்ணத் திலே நிறைந்துள்ளான் – இருப்பினும்
யாரென்று தெரி கிலே னே!
கண்ணுள்ளே இருந்த போதும்
கா ணற் றிருக் கிறேனே!                                               307

‘பாற் கடலினின் றெடுத்த அமிர்தத்தை
பொற்பாத்திரத்துடன் தவற விட்டேன்!
அப்போதே கைப்பற்றி உண்ணாது விட்டெதென்        
தப்பன்றி வேறென்ன?’ கடிந்து கொண்டாள்.                              308

புண்பட்டு, உள்நைந்து, விம்மி அழுதழுது
துன்பமே உருவாகி பிராட்டி இருக்கையிலே
நாணேற்றி வில்முறித் தானென்று சொல்லி,
‘நீலமாலை’ எனும்சேடி ஓடி வந்தாள்                                    309

வந்தவள்; அடி வணங்கிப் பணிந்திடாமல்
அந்தமில்லா உவகை கொண் டாடிநின்றாள்.
அர்த்த மற்ற அவள்செயலால் சினத்துடனே
‘சிந்தையில் புகுந்த செய்தியென்னடி. சொல்லென்றாள்.’                   310

‘பெரும்படை யுடையவனாம் – கல்வி
மேம்பாடு டுடையவனாம் – அள்ளித்தரும்
நீள்கை யுடையவனாம் தசரத புதல்வனவன்
அழ கிலும்மேம் பட்ட வனாம்!                                          311

திரண்டு நீண்ட தோ ளுடையவன்
பரமனோ வென ஐயத் தக்கவன்.
பற்றகன்ற முனியோடும், இளவலோடும்
வந்திருக்கும் ஆற்றலுடை ஸ்ரீராமன்.                                     312

உருத்திரன் எய்த அவ்வில் லை - முனி
கருத்துடன் பார்த்திட அழைத்து வந்தார்.,
அரசனின் ஆணைக்கு சிரம் சாய்த்து
ஏற்றினன் நாணை; முறிந்தது வில்’லென்றாள்.                           313

கோ முனியுடன் வந்தவ னென்றும்,
தாமரைக் கண்ணினா னென்றவள் சொன்னதும்,
‘ஆம்! ஆம்! ஆம்! அவனே தானெனப் பூரித்தாள்.
அவனல்லன் என்றாயின் இறப்பேனெ’ன சூளுரைத்தாள்.                  314

                              சனகன் செயல்.

கமலத்தோன் பிரும்மனால் படைக்கப் பட்ட
வில்லறும் ஓசை முழங்கி யதும் - மன்னன்
எல்லை யில்லாத பெரு மகிழ்வுடனே 
கௌசிக முனியைத் தொழுது வினவினன்.                              315

‘ஐயனே! நின்புதல்வன் திரு மணத்தை
ஒருபொழுதில் முடிப்பது உன் விருப்பமோ!
முரசெறிந்து அறிவித்து தசரதமா மன்னனை
முறைப்படி யழைத்து நடத்திடலுன் விருப்பமோ?’                        316

கரைபுரண்ட உவகையுடன் கோ முனியும்,
விரைவினிலே தசரதனும் உடனிரு த்தல்
நல்லதாகும், நிகழ்ந்த வற்றை தூதனுப்பி
சொல்லுதலே சரியாகும்! ஓலைவரைந்தி டென்றார்.                      317

                            எழுச்சிப் படலம்
       (தூதுவர் அயோத்தி சேர்ந்து அரண்மனை வாயிலை அடைதல்)

இடிக் குரலில் முரசறைந் தபடி
கடுகிய தூதரும் அயோத்தி மன்னனின்
ஒளிர்கழல் பாதங்கள் தொழுது வணங்கி,
ஓலை கொணர்ந்ததைப் பகர்ந் தனராம்.                                  318

மெய்க்கீர்த்தி பல சொன்ன தூதுவர்கள்
‘மன்னா! முனிவரோடு நின் புதல்வர்
வனம் நோக்கிப் போன பின்னர்
நடந்தவை யிவையென நெடிது சொன்னார்,                              319

‘திருமண வோலை’ அது வென்றறிந்தவன்
அறிஞனை அழைத்து ‘வாசி’ யென்றனன்.
தலைமகன் இராமனின் வில்லாற்ற லுணர்ந்ததும்
மலையென வளர்ந்தன மன்னவன் தோள்கள்.                            320

வெற்றிவேல் மன்னன் மகிழ்ச்சி மேலிட
‘அன்றொருநாள் இடியொத்த ஒலி கேட்கையிலே
யாதோ! யென்று யாம் ஐயுற்றோம். – வில்
இற்ற பேரொலி தானென இன்றறிந்தோம்’                               321

என்று ரைத்த மா மன்னர்
வீரக் கழலணிந்த மிதிலை தூதருக்கு
வரிசைகளென பட்டும், பொன் கலன்களும்,
வரையி ன்றி வழங்க லானார்.                                          322

                        
                             முரசறைய பணிதல்

‘சேனையும், அரசரும் மிதிலை நகருக்கு,
சென்றிடக் கடவ ரென்ற படி,
யானை மேலே அணிமுர சறைக!’
ஆணையை யிட்டான் தசரத மன்னன்.                                   323

ஈரடி வைத்து மூவுல களந்த
திருமால் செயலினை ‘சாம்புவனும்’
சுற்றித் திரிந்து சாற்றினார் போலே
முரசினைக் கொட்டி அறி வித்தார்.                                      324

                          முரசொலி கேட்டார் மகிழ்ச்சி

சாற்றிய முரசொலி செவியில் பட்டதும்,
காற்றினில் மோதிய கடலலைப் போலவே
களிப்பினில் ஓங்கினர் மகளிர் அனைவரும்
களியாட்டம் போட்டனர் காளைகள் பலரும்.                             325

                          சேனையின் எழுச்சி

சூரியத் தேரென பொலிந்திடும் தேர்களும்,
வானவில் ஒளிரும் மேகமாய் வேழங்களும்.
பொங்கும் பெரும்புறக் கடலது போலே
பெரும்படைக் கூட்டமாய் புறப் பட்டதாம்!                                326

குடைகளும், கொடிகளும் நிறைந்து பறந்திட,
கருநிற முடைய வேழக் கூட்டத்தை
கருங்கட லெனவே கருதிய வெண்முகில்
பருகிட விழைந்து தாழ்வதாய் தெரிந்ததாம்.                              327

பேரிகை பேரொலி முழக்கத்துக் கிடையில்
பெருந்திரள் மக்களும், நால்வகைப் படையுடன்,
நெறிமுறைப் படிமுன் விரைவினில் செல்ல
சிவிகையில் தொடர்ந்தனர் தேவியர் மூவரும்.                           330

இராமன்பால் பேரன்பு கொண்டிருந்த கைகேயி,
இரத்தினங்கள் பொதிந்திருந்த சிவிகை யிலும்,
மின்னற்கொடி போன்றவளாம் சுமித்திரையும் – நீல
மணிபதித்த சிவிகையிலே பின் தொடர,                                 331

பல்வகை மணியனைய ஊர்தி யொன்றில்
வள்ளலைப் பயந்த நங்கையாம் கௌசலையும்,
வெள்ளைச் சிவிகையில் வசிட்ட முனிவரும்,
வில்லுடை பரத-சத்ருக்னர், இராம-இலக்குவனாய் தேரேற,                332

மறைவல்ல அந்தணர்க்கு அளவற்ற தானஞ்செய்து,
அரங்கனின் திருவடியைத்தன் சிரசிலே சூடிக்கொண்டு,
அறுகுநீர் தெளிக்க, அரியவேத மொலிக்க,
புறப்பட்டனராம் சக்ரவர்த்தி மிதிலை நோக்கி.                            333

கொற்றவேள் மன்னர், மற்றொரு சூரியனாய்
சுற்றிலும் கமலம்பூத்த தொடுகடல் திரையின்மீது
வெண்புரவி அலைகளென வேகமாய் ஓடுகையில்,
மணிநெடுந் தேரில் மிடுக்கோடு மிளிர்ந்தனராம்.                          334

பூமிபாரம் தீர்க்கக் காக்கும் தசரதனின்
சேனைபாரம் தங்க பூமி தவித்துப்போனதாம்.
இருயோசனை கடந்த பின்னர் சேனைக்கூட்டமும்
சந்திரசைல மலையடியில் தங்கிச்சென்றதாம்.                           335

களிறொடும், தேரொடும், பரியொடும், பெரும்படை
மலையடி வாரத்தில் தங்கிய வர்ணனை
‘வரை காட்சிப் படலத்தில்’ வரைந்துள்ளார், - கம்பர்
கற்பனை வளத்தினை விரித் துள் ளார்.                                  336

சோணை யாற்றங் கரையினை யடுத்த
சோலை புகுந்ததை ’பூக்கொய் படலமாய்,
கள்ளுண்டு, நீராடி, களித்து, மகிழ்ந்ததை – ‘நீர்
விளையாட்டுப் படலமா’ய் கொடுத் துள்ளார்.                             337

நான்கு தினங்கள் பயணம் முடித்த
கோ மகனின் சேனை முற்றும்
கங்கையாற்றின் நீரையள்ளி பருகியபின்
ஐந்தாம்நாள் காலையிலே மிதிலை யடைந்ததாம்.                        338

                                                   

                         (இன்னும் வரும்)