பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, August 21, 2017

ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்.

ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்.






தமிழ்நாட்டில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் குறிப்பிடத் தக்கது புதுக்கோட்டை. 
அங்கு இந்தியா சுதந்திரமடைந்த பின் சமஸ்தானங்கள் இந்திய குடியரசுடன் இணைக்கப்
பட்ட போது முதலில் இணைந்தது புதுக்கோட்டை சமஸ்தானம். மன்னர் பிரகதாம்பாதாஸ் 
ராஜகோபாலத் தொண்டைமான் டெல்லி சென்று வல்லபாய் படேலிடம் சமஸ்தானத்தை 
மாற்றித் தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு திருச்சி திரும்பியவர் கடைசிவரை
அங்கேயே இருந்து விட்டார். புதுக்கோட்டை சமஸ்தானத்து மக்களின் அன்பை மிகவும்
பெற்றவர் ராஜகோபால தொண்டைமான்.
புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் இவர். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.
இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர்.   17. ஜனவரி 1944 இல் ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22-வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார்.
1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் கட்டிடங்களையும், மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார். கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் இவர் ஆர்வமுடையவர். 
ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் 1997 இல் மறைந்தார். மன்னராக
இருந்தும் மிக எளியவராகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் வாழ்ந்த இவரை புதுகை
மக்கள் இன்றளவும் மனதில் நிறுத்திப் போற்றுகிறார்கள்.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எளிய வாழ்க்கை வாழ்ந்த அரிய மனிதரைப் பற்றி அறிந்தோம்.